மீண்டும் 8 போட தயாரா இருங்க: தமிழக வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு... முக்கிய தகவல்!
புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றாலும், அதன் தாக்கம் ஒரு சில விதிகளில் காணப்படுகின்றன. அதன்படி, ஓட்டுநர் உரிமத்திற்கு ஆப்பு விளைவிக்கின்ற வகையில் ஓர் புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இதுகுறித்த கூடதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் மிகவும் பரபரப்பான சூழலாகவே காணப்படுகின்றது. இதற்கு, அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன.
இந்த சட்டம் இன்னும் தமிழகத்தில் முழுமையாக அமலுக்கு வரவில்லை என்றாலும், குறிப்பிட்ட விதிகளில் மட்டும் ஒரு சில மாற்றங்களை அது ஏற்படுத்தியுள்ளது.

அதனடிப்படையில், தமிழகத்தில் புதிய விதி ஒன்று விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கின்றது.
வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கவில்லை என்றால் அவர்கள் மீண்டும் ஆர்டிஓ அதிகாரிகள் முன்னிலையில் 8 அல்லது எச் (H) சோதனை தளத்தில் மீண்டும் வாகனத்தை இயக்கி காட்டி, புதிதாக உரிமம் பெற வேண்டும்.

அதாவது, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க தவறிவிட்டால், புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து, அனைத்து சோதனைகளையும் ஆர்டிஓ அதிகாரிகள் முன்னிலையில் செய்து காட்ட வேண்டும். இதுவே, தற்போது புதிய விதியின்கீழ் செய்யப்பட்டுள்ள மாற்றமாக இருக்கின்றது.

பழைய விதிகளின் கீழ், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் 60 நாட்களுக்கு முன்னர் ரூ. 100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதனை ஓர் நபர் தவறும்பட்சத்தில், புதுப்பித்தலுக்கான நாள் காலாவதியான அன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு, ஆண்டு ஒன்றிற்கு ரூ. 50 என்ற அபராதத்துடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஆனால், தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, ஒரே ஒரு வருடம் மட்டும் கூடுதல் கால அவகாசம் என கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் காலவதியாவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பாகவே அல்லது ஓர் ஆண்டிற்குள்ளாகவோ, உரிமத்தை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தவறும்பட்சத்தில் மீண்டும் ஓட்டுநர் உரிமத்திற்காக புதிதாக விண்ணிப்பிக்கப்பட வேண்டும்.

அதேசமயம், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ. 500 அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கவும் புதிய விதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
மோட்டார் வாகன சட்டம் பிரிவு 15 (1), 15 (3) மற்றும் 15 (4) ஆகிய பிரிவுகள் தற்போது திருத்தப்பட்டுள்ளன. இந்த திருத்தத்தின் அடிப்படையிலேயே வாகன ஓட்டிகள் இந்த சிக்கலை சந்திக்க உள்ளனர்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் (எம்.வி.ஏ) கீழ் முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்.டி.ஓ) செயல்படுத்தப்படும் என்றும் தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி) அறிவித்துள்ளது. தற்போது இதற்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மாநிலத்தின் மூத்த போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், புதுதில்லியில் இருந்து செயல்படுகின்றது தேசிய தகவல் மையம். இது, வாகன பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளுக்கான வாஹன் தளத்தைக் கையாண்டு வருகின்றது. அது, ஒவ்வொரு மாதமும், மாநிலத்தில் 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிக்க ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில ஆர்டிஓ-க்களில் இந்த மாற்றம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கான அதிகபட்ச அபராத விதி அமல்படுத்துவது குறித்து மாநில அரசு இன்னும் விவாதித்து வருகின்றது. இருப்பினும், இந்த புதிய திருத்தம் நாடு முழுவதும் உள்ள உரிமதாரர்களுக்கு பொருந்தும் என்று அந்த மூத்த அதிகாரி கூடுதலாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








