போலி அரசு அதிகாரி கைது! நிறைய மோசடி பண்ணணும்னு கனவோட இருந்தாப்ல! ஆனா ஒரு வார்த்தைய தப்பா எழுதி மாட்டிகிட்டாப்ல
நிறைய மோசடி செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருந்த போலி அரசு அதிகாரி, ஒரு வார்த்தையை தவறாக எழுதியதால் மாட்டி கொண்டார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரசு அதிகாரி போல் நடித்த ஒருவரை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா காவல் துறையினர் தற்போது பிடித்துள்ளனர். தேசிய குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் (National Crime Control Bureau - NCCB) அதிகாரி என அவர் கூறி கொண்டார். அவரது பெயர் கோலம் ரப்பானி என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ரக காரில் அவர் பயணம் செய்தார். இந்த காரில் சைரன்களும் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்தியாவில் சைரன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரியும். குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் கார்களில் கூட சைரன்கள் இருக்காது.

விஐபி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சைரன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால் கோலம் ரப்பானி தனது காரில் சைரன் பொருத்தியிருந்தார். தற்போது கோலம் ரப்பானியை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோலம் ரப்பானிக்கு தற்போது 40 வயதாகிறது. அவர் பயணித்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில், மெட்டல் பிளேட் ஒன்று இருந்தது. அதில், தேசிய குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் துணை இயக்குனர் என பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொல்கத்தா காவல் துறையினருக்கு இது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தேசிய குற்ற கட்டுப்பாட்டு பணியகம் என்ற பெயரில், அதாவது என்சிசிபி என்ற பெயரில் எந்த அரசு அமைப்புகளும் இல்லை என்பதுதான் இந்த சந்தேகத்திற்கு காரணம். இந்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்பு, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau - NCRB) என்ற பெயரில்தான் உள்ளது.

இதன் மூலம் கோலம் ரப்பானி அரசு அதிகாரி போல் நடித்ததை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதுதவிர அவர் பயணித்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் சைரன்களும் பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இந்த காரின் முன் பக்க பானெட்டில் Government of West Bengal என நீல நிறத்தில் எழுதப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

காவல் துறையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கோலம் ரப்பானி வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி கார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது காவல் துறையினர் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில்தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளி உலகிற்கு தெரியவந்தன.

முன்னதாக காவல் துறையினர் காரை நிறுத்தியதும், ஆவணங்களை கேட்டனர். ஆனால் எந்த ஆவணங்களையும் கோலம் ரப்பானி சமர்ப்பிக்கவில்லை. ஆர்சி புத்தகத்தை கூட அவர் காட்டவில்லை. அத்துடன் கோலம் ரப்பானியிடம் ஓட்டுனர் உரிமமும் இல்லை. மோசடி செய்வதற்காகவே கோலம் ரப்பானி அரசு அதிகாரி போல் நடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பயணித்த கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் போலி அரசு அதிகாரிகள் பிடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போலி அரசு அதிகாரிகள் பலர் பிடிபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் தொழில் அதிபர்களை, அரசு அதிகாரிகள் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிப்பதுதான் அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.

அதேபோல் போலி நிருபர்கள் பலரும் கூட கடந்த காலங்களில் பலமுறை சிக்கியுள்ளனர். அவர்களின் நோக்கமும் கூட தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாகதான் இருந்து வருகிறது. அதேபோல் காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்திலும், பலர் தங்கள் வாகனங்களில் 'ப்ரஸ்' ஸ்டிக்கர்களுடன் சுற்றுகின்றனர்.

இதனால் உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கும், போலியான பத்திரிக்கையாளர்களுக்கும் சில சமயங்களில் காவல் துறையினரால் வித்தியாசத்தை கண்டறிய முடியாமல் போய் விடுகிறது. அதேபோல் சைரன்களுக்கு தடை விதிக்கப்பட்டு விட்ட நிலையிலும் கூட, இன்னமும் பலர் தொடர்ந்து சைரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து கொண்டே இருக்கின்றனர். தற்போது போலி அரசு அதிகாரி பிடிபட்டுள்ள அதே கொல்கத்தா நகரில், கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர், நிறைய வாகனங்களில் இருந்து சைரன்கள் அகற்றப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








