வருமான வரி கட்டுபவர் சாலை விபத்தில் மரணமடைந்தால் அரசிடமிருந்து இழப்பீடு பெற முடியுமா?
வருமான வரி சாலை விபத்தில் மரணமடைந்தால் அவரது ஆண்டு சராசரி வருமானத்தை போல 10 மடங்கு இழப்பீடு பெற முடியும் என்ற வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் தகவல் குறித்து பார்க்கலாம்.
சமூக ஊடகங்கள் பெற்றிருக்கும் அபரிதமான வளர்ச்சி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கவும், துரிதமான தகவல் பரிமாற்றத்திற்கும் அச்சாணியாக மாறி இருக்கிறது. அதேவேளையில், இதனை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வாட்ஸ்அப்பில் வரும் பாதியளவு தகவல்கள் முற்றிலும் பொய்யான விஷயத்தை உண்மை போல சித்தரித்து எழுதி பரப்புகின்றனர். பிறருக்கு பயன்படும் என்ற நோக்கில் பலர் இந்த தகவலை உறுதி செய்யாமல் பகிர்ந்து கொள்கின்றனர்.

தவறான தகவலை உண்மையென நம்பி பலர் அதனை பின்பற்றும் ஆபத்தும் இருக்கிறது. அதேபோன்று ஒரு செய்தியை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் காண நேரிட்டது. அதுகுறித்த உண்மை என்ன என்பதை ஆய்வு செய்து இந்த செய்தியை வழங்குகிறோம்.

வருமான வரி செலுத்துபவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்தால், அவரது கடைசி மூன்று ஆண்டுகளின் சம்பளத்தின் சராசரி தொகையை போல 10 மடங்கு தொகையை அரசு இழப்பீடாக வழங்குகிறது என்று ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு, மரணமடைந்தவர் கடைசியாக வாங்கிய ஆண்டு சம்பளம் 6 லட்ச ரூபாய் எனில், அதற்கு முந்தைய ஆண்டில் 5 லட்ச ரூபாய் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் 4 லட்ச ரூபாய் என கணக்கிட்டு, இதன் சராசரியான ரூ.5 லட்சத்திற்கு இணையான 10 மடங்கு தொகையை இழப்பீடாக பெற முடியும் என்பதே அந்த பதிவில் தெரிவிக்கப்படும் தகவல்.

மேலும், மரணமடைந்தவர் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்தியதற்கான அத்தாட்சி குடும்பத்தினரிடம் இருத்தல் அவசியம். 1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் 166 பிரிவின்படி, இந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் வேகமாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 166 பிரிவின்படி, சாலை விபத்தில் மரணமடைபவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறை குறித்து மட்டுமே விளக்கம் தரப்பட்டு இருக்கிறது. ஆனால், அதனை சிலர் தவறான தகவலை பதிவு செய்து பரப்பி இருக்கின்றனர்.

1988ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சாலை விபத்தை ஏற்படுத்தும் வாகனத்தின் உரிமையாளர், அந்த விபத்தில் மரணமடைபவரின் குடும்பத்தினர் மற்றும் நிரந்தர ஊனம் அடைபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இழப்பீடு எவ்வளவு என்பதை வாகன விபத்து இழப்பீடு குறைதீர் ஆணையம் முடிவு செய்யும் என்று மேற்கண்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதனை சிலர் தவறான தகவலுடன் பதிவிட்டு பரப்புவதுடன், அதனை ஏராளமானோர் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.

இதுபோன்ற தவறான தகவலை பார்த்தால் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளாதீர். மேலும், இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவலை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பலருக்கு உதவி செய்யாவிட்டாலும், உபகாரம் செய்ததாக அமையும்.
12,000 குதிரைசக்தி திறன் வாய்ந்த இந்தியாவின் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின்!!

இந்தியாவின் சக்திவாய்ந்த மின்சார ரயில் எஞ்சினின் முதல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பிரான்ஸ் நாட்டின் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் இணைந்து WAG-12 என்ற இந்த புதிய ரயில் எஞ்சினை இந்திய ரயில்வே துறை உற்பத்தி செய்கின்றது. பீகார் மாநிலம் மாதேப்புராவில் உள்ள தொழிற்சாலையில் இந்த ரயில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின்சார ரயில் எஞ்சின் 12,000 குதிரை சக்தி திறனை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டது. WAG-12 மின்சார ரயில் எஞ்சின். தற்போது நம் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சினாகவும் குறிப்பிடப்படுகிறது.

முதல்கட்டமாக 5 ரயில் எஞ்சின்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பீகாரில் உள்ள மாதேப்புரா ரயில் எஞ்சின் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. பின்னர், 795 ரயில் எஞ்சின்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

பீகார் மாநிலம் மாதேப்புராவில் இந்த ரயில் எஞ்சினுக்கான உற்பத்தி ஆலையும், உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரிலும், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலும் பராமரிப்பு பணிமனைகளும் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது.

இந்த ரயில் எஞ்சின்களில் ஏபிபி டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் நார்-பிரேம்ஸி பிரேக்கிங் சிஸ்டமும் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த மின்சார ரயில் எஎஞ்சின் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும்.

சரக்கு ரயில்களில் இணைக்கப்பட இருக்கும் இதன்மூலமாக, சரக்கு ரயில்களின் வேகம் வெகுவாக அதிகரிக்கும். ஒரு ரயில் எஞ்சின் ரூ.30 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வரும் 2020ம் ஆண்டில் 35 எஞ்சின்களும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 100 எஞ்சின்கள் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மொத்தம் 800 எஞ்சின்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல் ரயில் எஞ்சின் சோதனை ஓட்டத்திற்காக ஆலையிலிருந்து சோதனை ஓட்டத்திற்காக வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை காணலாம்.


Click it and Unblock the Notifications