பணத்துக்கு பணமும் போயி... இப்போ டிரைவிங் லைசன்ஸும் போயி! யூடியூப் சேனல் வைத்திருப்பவருக்கு இதுகூடவா தெரியாது?
இணையத்தின் வளர்ச்சியினால் நிறைய பேர் குறுகிய நேர சந்தோஷத்திற்காகவும், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களுக்காகவும் தங்களது பொன்னான விஷயங்களை இழப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், எது சரி, எது தவறு என்பது பலருக்கு தெரிவதில்லை. மக்களை கவர்வதற்காக சிலர் சில விஷயங்களை செய்கின்றனர். அது கடைசியில் தவறாக முடிந்துவிடுகிறது. அந்த வகையில், கேரளாவில் சமீபத்தில் காருக்குள் நீச்சல் குளத்தை உருவாக்கிய நபரை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர் தற்போது வாழ்நாள் முழுவதற்குமாக ஓட்டுநர் உரிமத்தை இழந்துள்ளார்.
கடந்த மே மாதத்தில் இருந்து இந்த ஜூன் மாத துவக்கம் வரையில் இந்தியா முழுவதுமே வெயில் வாட்டி வதைத்ததை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. தற்போதுதான் நிலைமை கொஞ்சம் சீராகி உள்ளது. அந்த சமயத்தில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் தங்களை குளிர்விக்க பல்வேறு விதமான செயல்களில் ஈடுப்பட்டனர்.

யூடியூப்பர்கள் இதையே தங்களது வீடியோக்களுக்கான கான்செப்ட்டாக வைத்து நிறைய வீடியோக்களை பதிவிட்டனர். அந்த வகையில், கேரளாவை சேர்ந்த பிரபல யூடியூப்பர் ஒருவர் தனது டாடா சஃபாரி காரில் சிறிய நீச்சல் குளத்தை உருவாக்கி, அதில் அமர்ந்துக் கொண்டவாறு பயணம் செய்துள்ளார். மேலும் அவருடன் சிலரும் காருக்குள் நீச்சல் குளத்தில் அமர்ந்திருக்க, கார் நெடுஞ்சாலை ஒன்றில் இயக்கப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வேகமாக வைரலாகியது. நீச்சல் குளத்தை உருவாக்க தார்பாய்களை இவர்கள் பயன்படுத்தி இருந்தனர். இருப்பினும், நெடுஞ்சாலையில் கார் இயங்கிய போது காருக்குள் இருந்து நீர் கசிய ஆரம்பித்ததால், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி நீர் முழுவதையும் வெளியேற்றினர். இந்த வீடியோ எந்த அளவிற்கு வைரலாகியதோ, இந்த கேரள யூடியூப்பர் சஞ்சு டெச்சிக்கு அந்த அளவிற்கு பெரிய தலைவலியாகவும் அமைந்தது.

இதற்காக இவருக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டதை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வழக்கில் புதிய ஆணை தற்போது வெளிவந்துள்ளது. கேரள மோட்டார் வாகன துறையில் இருந்து வெளிவந்துள்ள இந்த ஆணையின்படி, யூடியூப்பர் சஞ்சு டெச்சி தனது வாழ்நாள் முழுவதற்கும் இனி ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரபல கேரள செய்தித்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரள மோட்டார் வாகன துறை யூடியூப்பர் சஞ்சு டெச்சியின் ஓட்டுனர் உரிமத்தை அவரது வாழ்நாள் முழுவதற்கும் ரத்து செய்துள்ளதாகவும், சம்பவத்தின்போது காரை ஓட்டியதற்காக சஞ்சுவின் நண்பரின் ஓட்டுனர் உரிமம் ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த செயலில் உட்படுத்தப்பட்ட டாடா சஃபாரி காரின் வாகன உரிமையும் ஒரு வருடத்திற்கு ரத்து செய்யப்படுவதாக கேரள மோட்டார் வாகன துறை அறிவித்துள்ளது. அதாவது, ஒரு வருட காலத்திற்கு இந்த டாடா சஃபாரி காரை சாலைக்கு கொண்டுவர முடியாது. வேண்டுமென்றால், தனியார் இடத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சஞ்சு டெச்சிக்கு இவ்வளவு பெரிய தண்டனை விதிக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், ஏற்கனவே பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டு விட்டதால், இத்துடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தோம். ஆனால், மோட்டார் வாகன துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு யூடியூப்பர் சஞ்சு டெச்சி முறையான பதில் அளிக்கவில்லை என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில நிமிட சந்தோஷத்திற்காகவும், இணையத்தில் பிரபலமாகுவதற்காகவும் செய்த விஷயம் தற்போது எந்த இடத்தில் இந்த நபரை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று பாருங்கள். தனது காரில் நீச்சல் குளம் உருவாக்க சஞ்சு டெச்சி நினைத்தது தவறில்லை. ஆனால், நீச்சல் குளத்துடன் காரை சாலைக்கு கொண்டுவந்தது தவறு ஆகும். ஏனெனில், சாலை அனைவருக்கும் சொந்தமானது.


Click it and Unblock the Notifications









