யூடியூப்பில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்!! ஜாலியாக கொண்டாடிய இளம்பெண்ணுக்கு போலீஸார் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்!
இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெறுவதற்கு இயங்கும் மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தின் பொனெட் (Bonnet)-இல் அமர்ந்து இன்ஸ்டா பிரபலம் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளார். இதில் காமெடி என்னவென்றால், அவர் வெளியிட்ட வீடியோவை வைத்தே அவர்மீது குற்றம் பதிவு செய்து, அவரது தார் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலீஸாருக்கு பெரியதாக எந்த வேலையையும் வைக்காமல், தானாக மாட்டிக்கொண்ட அந்த இன்ஸ்டா பிரபலம் குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.
'இன்ஸ்டா' பெயருக்கு ஏற்ப, இன்ஸ்டாகிராமில் எவரொருவரும் உடனடியாக பிரபலமாகி விடுகின்றனர். ஆனால், அதற்கடுத்த நிலைக்கு செல்பவர்கள் குறைவே. பலர், பிரபலமாகிய அதே வேகத்தில், சில நாட்களில், ஆள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன. இவ்வாறு, மறைந்துப்போய் விடக் கூடாது, மக்கள் மத்தியில் அடுத்தடுத்த நிலைக்கு சென்றுக் கொண்டே போக வேண்டும் என விரும்புபவர்கள் தங்களது மனதுக்கு தோன்றியவற்றை எல்லாம் செய்கின்றனர்.

அதாவது, சமூக வலைத்தளங்களில் நமது முகத்தை எப்படியாவது காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பலர் உள்ளனர். இதில் சிலர் சரியான முறையில் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என முயற்சித்தாலும், சிலர் தவறான செயல்களை செய்தாவது கவனத்தை பெற வேண்டும் என நினைக்கின்றனர். இதற்கு சாட்சியாக பல்வேறு சம்பவங்களை இதற்குமுன் நாம் பார்த்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு நிகழ்வு பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் மாவட்டத்தில் வசிப்பவர் கௌரி விர்டி. இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிடுவதன் மூலம் அதிக ஃபாலோயர்ஸ் உடன் பிரபலமானவராக விளங்குகிறார். கௌரி விர்டியை இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 48 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 2023 ஜனவரி 29ஆம் தேதி கௌரி விர்டி வழக்கம்போல் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், மஹிந்திரா தார் வாகனம் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்திருக்கும் கௌரி விர்டி, வாகனம் இயங்கும்போதும் கூட அதன் மேற்கூரையில் அமர்ந்தவாறு பயணம் செய்துள்ளார். தாரின் மேற்கூரையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தப்படி கௌரி விர்டி பயணம் செய்யும் இந்த வீடியோவிற்கு பலர் ஹார்டின்களை விட்டாலும், சிலர் அவரது இந்த செயலை கண்டு முகம் சுளித்தப்படி கடந்துச் சென்றுள்ளனர்.
உண்மையில், இந்த செயலுக்காகவே கௌரி விர்டி மீது வழக்கு பதிவு செய்து அவரது தார் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்திருக்கலாம். ஆனால், ஹோசியர்புர் நகர போலீஸார் வேறொரு நிகழ்வை காரணம் காட்டி கௌரி விர்டியின் மஹிந்திரா தாரை பறிமுதல் செய்துள்ளனர். எப்படியோ... போலீஸார் நல்ல வேலையை தானே செய்துள்ளனர் என்று சொன்னாலும், எதற்காக கௌரி விர்டியின் தாரை பறிமுதல் செய்துள்ளனர் என்பதை சொல்லித்தானே ஆக வேண்டும்.

இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, யூடியூப்பிலும் கௌரி விர்டி வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போல் அல்லாமல், யூடியூப்பில் விரைவாகவே அதிக ரசிகர்களை எளிதில் பெற்றுவிட முடியும். கௌரி விர்டியின் யூடியூப் சேனல் 1 மில்லியன், அதாவது 10 இலட்ச சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கௌரி விர்டி தனது தார் வாகனத்தின் முன்பக்க பொனெட்டில் அமர்ந்துக் கொண்டு, கையில் '1 M' என்ற எழுத்துக்கள் வடிவிலான பலூன்களை கையில் ஏந்தியப்படி பயணம் செய்துள்ளார்.
கௌரி விர்டியின் மற்ற வீடியோக்கள் எதுவும் ஹோசியர்புர் போலீஸாரின் பார்வையில் படவில்லை போல. ஏனெனில், கௌரி விர்டி இவ்வாறுதான் ஒரு மஹிந்திரா தார் வாகனத்தை வைத்துக் கொண்டு, அதனை படாத பாடு படுத்தி கொண்டு இருக்கிறார். தாரின் சக்கரங்களை வேண்டுமென்றே மணலில் புதைத்து விட்டு பின்னர் வாகனத்தை ஸ்டைலாக மீட்பது, பொது சாலையில் மோட்டார்சைக்கிளை இரு கைகளை விட்டு ஓட்டுவது என கௌரி விர்டி இந்த சிறிய வயதில் செய்துள்ள சாகசங்கள் ஏராளம்.
ஆனால் ஹோசியர்புர் போலீஸார் இயங்கும் வாகனத்தின் பொனெட்டில் அமர்ந்து பயணித்ததை காரணமாக கூறி, கௌரி விர்டியின் தாரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பறிமுதலுக்கு சாட்சியாக இருந்த வீடியோ உடன், இதுதொடர்பான தங்களது விளக்கத்தை ஹோசியர்புர் நகர போலீஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சமூக வலைத்தள மோகம் பெரும்பாலான மக்களை படாத பாடு படுத்தி வருகிறது. லைக்குகளுக்காகவும், கமெண்ட்களுக்காகவும் ஆபத்தான செயலில் ஈடுப்பட்டு, உயிரிழந்தவர்களை கூட இதற்குமுன் செய்திகளில் பார்த்துள்ளோம். அவ்வாறு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, எச்சரிக்கும் வகையில் இவ்வாறு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








