300kmph வேகம்... 1000சிசி பைக்... ஒரு வினாடியில் எல்லாம் முடிந்தது! பிரபல யூடியுப் இளைஞர் விபத்தில் உயிரிழப்பு
கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் (Kawasaki Ninja ZX-10R) பைக்கில் மணிக்கு 300கிமீ வேகத்தில் செல்ல முயன்ற போது பிரபல யூடியுப் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யார் அந்த யுடியூப்பர்? எங்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
300kmph வேகம் என்பது வெளிநாடுகளில் கூட பைக்கில் மிக அதிகப்பட்ச வேகம் ஆகும். அப்படி இருக்கையில், நமது இந்தியா போன்ற சாலையில் எது எப்போது குறுக்கே வரும் என தெரியாத நாட்டில் இவ்வளவு வேகத்தில் பயணிப்பது தற்கொலைக்கு சமம் ஆகும். ஆகையால், இந்த செய்தியில் நாம் பார்க்கவுள்ள இளைஞர் கிட்டத்தட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இளைஞரது பெயர் அகஸ்தியா சவுகான் ஆவார்.

உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் யுடியூப்பில் தனது விலையுயர்ந்த பைக்குகளை காட்டி பிரபலமானவராக விளங்கி வந்தார். இவர் சமீபத்தில் யமுனா விரைவுச்சாலையில் 300kmph வேகத்தை தனது விலையுயர்ந்த கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கில் எட்ட முயன்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இத்தனைக்கும் அகஸ்தியா ஒரு தொழில்முறை பைக்கர் ஆவார். அதாவது, இவ்வாறான அதிவேக பயணங்களை பலமுறை மேற்கொண்டவர்.
பந்தயங்களில் அதிவேகத்தில் பைக்கை இயக்குவதற்காக முறையான பயிற்சி பெற்றவர். அப்படிப்பட்டவருக்கே நிலை தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, எந்தவொரு பயிற்சியும் எடுக்காத இளைஞர்கள் அதிவேகத்தில் பைக்கை ஓட்டும்போது எந்த அளவிற்கு ஓர் ஆபத்தான காரியத்தை செய்கின்றனர் என நினைத்து பாருங்கள். அகஸ்தியா சவுகானின் விபத்து ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு யமுனா விரைவுச்சாலையில் செல்லும் வழியில் அரங்கேறியுள்ளது.

300kmph வேகத்தை எட்டிய சமயத்தில் கண்ட்ரோலை இழந்த அகஸ்தியா சவுகான் அருகில் இருந்த டிவைடரில் பைக்கை மோதி உள்ளார். ரைடர் கண்ட்ரோலை இழந்தவுடன் பைக்கின் வேகம் சற்று குறைந்திருக்கும் என்றாலும், விபத்து நடந்த சமயத்தில் பைக் 250kmph வேகத்தில் இயங்கி கொண்டு இருந்திருக்கலாம். இந்த மோதலில் பைக்கின் வலது பக்கம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. பைக்கின் பாகங்களை சம்பவம் நடந்த இடத்தில் சிறு சிறு துண்டுகளாக பார்க்க முடிவதாக அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
பைக் மட்டுமின்றி, அகஸ்தியா சவுகான் அணிந்திருந்த ஹெல்மெட் கூட சிறு சிறு துண்டுகளாக நொறுங்கி போய் உள்ளது. அப்படியென்றால், ஹெல்மெட்டிற்குள் இருந்த அகஸ்தியாவின் தலை எந்த அளவிற்கு பாதிப்படைந்து இருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. மூளை அதிர்ச்சியில் அகஸ்தியா சவுகான் உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் அகஸ்தியா சவுகான் பயன்படுத்தி இருப்பது 1000சிசி கவாஸாகி பைக், நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் ஆகும்.

இதில் 998சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் மூலமாக அதிகப்பட்சமாக 13,000 ஆர்பிஎம்-இல் 197.3 பிஎச்பி மற்றும் 11,500 ஆர்பிஎம்-இல் 113.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த அளவிற்கான ஆற்றலில் மணிக்கு 500kmph அல்லது அதற்கு மேலான வேகத்தில் கூட இயங்க முடியும். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி 299kmph வேகத்திற்கு மேல் செல்ல முடியாத வகையில் கவாஸாகி வழங்குகிறது. இந்த டாப் ஸ்பீடை தான் அகஸ்தியா சவுகான் எட்ட முயன்றுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 300kmph வேகத்தில் சென்று எந்த அவசரமான வேலையை இத்தகைய இளைஞர்கள் செய்ய போகிறார்கள் என தெரியவில்லை. சில லைக்குகளுக்காக, அந்த அளவிற்கான வேகத்தில் பயணித்து கொண்டிருப்பதை வீடியோ வேறு எடுத்து இணையத்தில் உலாவ விடுகின்றன. இதனை பார்க்கும் மற்ற இளைஞர்கள் நிச்சயமாக கவரப்படுவர். பின்னர் அவர்களும் தங்களிடம் உள்ள பைக்கில் அந்த அளவிற்கு வேகத்தில் செல்ல முயல்வர். ஆதலால், மற்றவர்கள் மத்தியில் பயத்தை உருவாக்க இவ்வாறான இறப்பு செய்திகளை வைரலாக்குவது அவசியம் என எண்ணுகிறேன்.


Click it and Unblock the Notifications
