BMW காரில் மாட்டுக்கு தீவனம் ஏத்தீட்டு போனது அவரா! உண்மை தெரிஞ்சதும் ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் மக்கள்!
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பரவி வருகிறது. இதில் வெள்ளை நிற பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்றில் மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் ஏற்றி செல்லப்படுவதை நம்மால் காண முடிகிறது. பிஎம்டபிள்யூ காரின் மேற்கூரையில் தீவனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் காரில் மாடுகளுக்கு தீவனமா? என இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை செய்தது யார்? என தெரிந்தால், உங்கள் ஆச்சரியம் இன்னும் அதிகமாக கூடும். ஆம், நம்மில் பலரும் சாதாரணமாக நினைத்து கொண்டுள்ள விவசாயி (Farmer) ஒருவர்தான், பிஎம்டபிள்யூ காரில் மாடுகளுக்கு தீவனத்தை கொண்டு சென்றுள்ளார்.

அவரது பெயர் அன்சூ குமார் என்பதாகும். இவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர். பொதுவாக நம்மில் பலரும் விவசாயிகள் என்றாலே ஏழைகள் என்ற கருத்தைதான் நம்பி கொண்டுள்ளோம். விவசாயம் செய்யும் பலர் ஏழைகளாக இருக்கின்றனர்தான். அதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அனைத்து விவசாயிகளும் ஏழைகள் அல்ல.
விவசாயத்தின் மூலம் நல்ல வருமானம் ஈட்டி, சொகுசான வாழ்க்கையை வாழ்பவர்கள் பலரும் இந்தியாவில் இருக்கின்றனர். அன்சூ குமார் இந்த ரகத்தை சேர்ந்தவர் போல் தெரிகிறது. போதாக்குறைக்கு டூர் மற்றும் டிராவல் தொழிலையும் அன்சூ குமார் மேற்கொண்டு வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு மாடுகளுக்கு தீவனம் வாங்கி கொண்டு அன்சூ குமார் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பிஎம்டபிள்யூ காரில் தீவனங்கள் கொண்டு செல்லப்படுவதை பார்த்து ஆச்சரியமடைந்த சிலர், அதை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோதான் தற்போது வைரல் ஆக பரவி வருகிறது. இந்த வீடியோவில் நாம் பார்ப்பது பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-series) கார் போல் தெரிகிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) கார் ஆகும். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் வீடியோவில் பார்க்கும் காரில் நம்பர் பிளேட் இல்லை.
சட்டப்படி இது தவறான விஷயம். நம்பர் பிளேட் இல்லாமலோ அல்லது விதிமுறைகள்படி எண்களும், எழுத்துக்களும் குறிப்பிடப்படாத நம்பர் பிளேட் உடனோ வாகனங்களை ஓட்டுவது குற்றம் ஆகும். விபத்து போன்ற நிகழ்வுகள் நடந்தால், எந்த வாகனம் என்பதை கண்டறிவதில் இது சிக்கல்களை ஏற்படுத்தாலாம்.
ஆனால் கிராமப்புறங்களில் பலர் இப்படி நம்பர் பிளேட் இல்லாமல்தான் வாகனங்களை ஓட்டி கொண்டுள்ளனர். உங்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தாலோ அல்லது விதிமுறைகள் மீறப்பட்டிருந்தாலோ உடனடியாக அதை சரி செய்து விடுங்கள். இல்லாவிட்டால் காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலைகளில் முன்பெல்லாம் சொகுசு கார்களை காண்பது என்பதே மிகவும் அரிதான ஒரு விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது மாடுகளுக்கு தீவனங்களை கூட சொகுசு கார்களில் கொண்டு செல்வது உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்துகிறது. சொகுசு கார்களும் கூட சாதாரண ஒரு விஷயமாக மாறி கொண்டிருப்பதையே இது உணர்த்துகிறது.
முன்னதாக கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் ஆடி (Audi) காரில் டீ விற்பனை செய்த வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது செகண்ட் ஹேண்ட் (Second Hand) மார்க்கெட்டில், சொகுசு கார்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. எனவே முன்பு போல் அல்லாமல், பலராலும் தற்போது சொகுசு கார்களை வாங்க முடிகிறது.


Click it and Unblock the Notifications