குடிபோதையில் போலீஸ்காரங்களை கண்டபடி பேசனது அவரோட மகனா! வீடியோவை பாத்ததும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறுகள் (Road Rage) நடைபெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி விட்டது. வாகன ஓட்டிகளுக்கு இடையே மட்டுமல்லாது, வாகன ஓட்டிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கூட தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் நகரில் படித்து கொண்டிருக்கும் மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன். இவர் சமீபத்தில் தனது காரில், ஹெப்பாலா பகுதியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எலஹங்கா அருகே மற்றொரு காரை அவர் சந்திக்க நேரிட்டது. அது டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் ஆகும்.

ஆடம் பிடப்பா (Adam Bidapa) என்பவர், அந்த டாடா நெக்ஸான் காரை ஓட்டி வந்தார். ஆனால் அவர் குடிபோதையில் இருந்த காரணத்தால், காரை தாறுமாறாக ஓட்டி கொண்டிருந்தார். மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணனின் காருக்கு பின்னால், ஆடம் பிடப்பாவின் டாடா நெக்ஸான் கார் வந்து கொண்டிருந்தது.
குடிபோதையில் இருந்த காரணத்தால், ஆடம் பிடப்பா தொடர்ச்சியாக ஹாரன் அடித்து கொண்டே இருந்தார். இது ஆடம் பிடப்பா மற்றும் மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன் இடையே தகராறை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன் காருக்கு வழி விடாமல், ஆடம் பிடப்பா மறித்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன், உடனடியாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன் தனது புகாரில் கூறியிருந்த விஷயங்கள் பின்வருமாறு:
ஆடம் பிடப்பா என்னை பின் தொடர்ந்து வந்து மிரட்டினார். சக்தி வாய்ந்த மனிதர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அத்துடன் கிட்டத்தட்ட என் காரின் மீது அவர் காரை மோதினார். இவ்வாறு மாணவர் ராகுல் உன்னி கிருஷ்ணன் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பவ இடத்திலேயே காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்தபோது, ஆடம் பிடப்பா தகராறில் ஈடுபட தொடங்கி விட்டார். மேலும் காவல் துறை அதிகாரிகளிடம் மத ரீதியிலான வார்த்தைகளையும் கூறி, அவர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. காவல் துறை அதிகாரிகளுடன் ஆடம் பிடப்பா தகராறில் ஈடுபடும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
ஆடம் பிடப்பாவிடம் நடத்தப்பட்ட சோதனைகளில், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஆடம் பிடப்பாவை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் பெயிலில், ஆடம் பிடப்பா பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஆடம் பிடப்பா பிரபல பேஷன் டிசைனரான (Fashion Designer) பிரசாத் பிடப்பாவின் (Prasad Bidapa) மகன் ஆவார். அத்துடன் பிரசாத் பிடப்பாவிற்கு நடன இயக்குனர் (choreographer) என்ற மற்றொரு முகமும் உண்டு. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நன்கு பரிட்சயமானவராக அவர் உள்ளார். அப்படிப்பட்ட ஒருவரின் மகன் செய்துள்ள காரியம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டினால் சாலை விபத்துக்கள் மட்டுமல்லாது, இது போன்ற பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். நிதானத்தை இழந்து விடுவதால், என்ன செய்கிறோம்? யாரிடம் பேசி கொண்டிருக்கிறோம்? என்பதே தெரியாமல் போய் விடும். எனவே எக்காரணத்தை கொண்டும், குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்.
முடிந்தவரை மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதையும் தாண்டி மது அருந்தி விட்டால், வாகனத்தை எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக டாக்ஸி மூலம் வீட்டிற்கு சென்று சேரலாம். அல்லது மது அருந்தாத நண்பர்களை வாகனத்தை ஓட்ட சொல்லுங்கள். அதுதான் உங்களுக்கும், உங்களுடன் சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications








