இன்னும் பாதிபேருக்கு இந்த விஷயம் தெரியல! ஃபாஸ்டேக் கார்டில் பாஸ் ஆக்டிவேட் செய்வது எப்படி?
இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் கார்டுக்கான வருடாந்திர பாஸ் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வெறும் ரூ3000 செலுத்தி இந்த பாஸை வாங்க முடியும். இதை வாங்கினால் ஆண்டிற்கு 200 முறை தேசிய சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். இந்த பாஸை எப்படி வாங்குவது என பலர் தெரியாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு இந்த பாஸை எப்படி வாங்குவது என்ற விளக்கத்தை தான் நாம் இங்கே காணப்போகிறோம்.
நீங்கள் முதலில் இந்த பாஸை வாங்க வேண்டும் என்றால் உங்களிடம் தற்போது ஆக்டிவாக இருக்கும் ஃபாஸ்ட் டேக் கார்டு கையில் இருக்க வேண்டும். இப்படியாக ஃபாஸ்ட் டேக் கார்டை வைத்திருப்பவர்கள் தங்கள் செல்போனில் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்ற செல்போன் செயலியை டவுண்லோடு செய்ய வேண்டும். அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான போர்ட்டலில் இதை வாங்க வேண்டும்.

அதற்கு பிறகு செயலில் நீங்கள் இந்த ஃபாஸ்ட்டேக் கார்டை பெற தகுதியானவரா என்பதை செக் செய்ய வேண்டும். நீங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்கும் போது தனி நபர் வாகனத்திற்காக வாங்கியிருக்க வேண்டும். உங்கள் வாகனத்தின் பதிவெண்ணை வைத்து இதை அரசு செக்செய்யும். நீங்கள் தனிநபர் வாகனத்திற்காக கார்டை வாங்கியுள்ளீர்கள், உங்கள் கார்டு ஆக்டிவாக இருக்கிறது என்றால் நீங்கள் இந்த இந்த பாஸை பெற தகுதியானவர் என ஆப்பில் காட்டும்.
இந்த சரிபார்ப்பு முடிந்த பிறகு நீங்கள் வருடாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆண்டிற்கு ரூ3000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை செலுத்திய 2 மணி நேரத்திற்குள் உங்களது ஃபாஸ்ட் டேக் கார்டிலேயே இந்த பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.

இந்த பாஸ் உங்களிடம் ஏற்கனவே உள்ள ஃபாஸ்ட்டேக் கார்டிலேயே ஆக்டிவேட் செய்யப்படும் இதற்காக நீங்கள் தனியாக ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டை வாங்க வேண்டிய தேவையில்லை. இந்த பாஸை பயன்படுத்தி நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளை 200 முறை கடக்க முடியும். அப்படி என்றால் நீங்கள் ஒரு முறை கடக்க வெறும் ரூ15 தான் செலவாகும்.
அது மட்டுமல்ல நீங்கள் இந்த ஃபாஸ்ட்டேக் கார்டை வாகனத்தின் விண்ட் ஷீல்டு பகுதியில் ஓட்ட வேண்டும். விண்ட் ஷீல்டு பகுதியில் இந்த கார்டு இருந்தால் தான் இந்த பாஸ் செல்லுபடியாகும். சிலர் இன்றும் விண்ட் பகதியில் ஃபாஸ்ட் டேக் கார்டை ஒட்டாமல் இருக்கிறார்கள். விண்ட் ஷீல்டு பகுதியில் ஃபாஸ்ட்டேக் கார்டு இல்லை என்றால் உங்கள் கார்டு பிளாக்லிஸ்ட் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.
இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. ஃபாஸ்ட்டேக் பாஸை நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியில் மட்டுமே கடந்து செல்ல பயன்படுத்த முடியும். மாநில சுங்கசாவடிகள், முனிசிபல் சுங்கசாவடிகளில் இந்த கார்டை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வழக்கம்போல் கார்டை ரீசார்ஜ் செய்து தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கார்டை பயன்படுத்தி 200 முறைக்கு மேல் பயணித்துவிட்டால் உங்கள் ரீசார்ஜ் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நீங்கள் ஃபாஸ்ட்டேக் கார்டை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை கடக்க நேற்று வரை அதிக பணம் செலவு செய்ய வேண்டியது இருந்தது. இது இன்று முதல் குறைக்கப்ப்டடுள்ளது. இது நீண்ட ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த திட்டமாகும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








