இனி ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் பண்ண வேணாம்! நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க புது பிளான்!
இந்தியாவில் இனி ஃபாஸ்ட்டேக் கார்டுகளை மேனுவலாக ரீசார்ஜ் செய்ய தேவையில்லை எனவும் ஃபாஸ்ட் டேக் கார்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் குறைந்தால் தானாக இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் வழிமுறையை அமல்படுத்தப் போவதாகவும் தற்போது மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டுகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பாஸ்ட் டேக் கார்டு இல்லாமல் சுங்கச்சாவடியை ஒரு வாகனம் கடக்க வேண்டும் என்றால் அவர்கள் இரண்டு மடங்கு பணம் கொடுத்து தான் கடக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.

இந்தியாவில் உள்ள 99 சதவீதமான வாகன ஓட்டிகள் இடம் தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இருந்தாலும் ஆங்காங்கே சில வாகன ஓட்டிகள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தபோது ஃபாஸ்ட் டேக் கார்டில் போதிய பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டிகள் இந்த சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிய வந்தது.
அவசர பயணத்தின் போது ஃபாஸ்ட் டேக் கார்டை ரீசார்ஜ் செய்ய மறந்து சுங்கச்சாவடி அருகே வரும் போதுதான் தனது கார்டில் பணம் இல்லை என்பது தெரிய வருகிறது. இப்படியான நேரத்தில் ரீசார்ஜ் செய்ய முடியாமல் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடி கடந்து வருகிறார்கள். இந்த பிரச்சினையை புரிந்து கொண்ட மத்திய அரசு இதற்கான ஒரு தீர்வையும் தற்போது கொண்டு வந்துள்ளது.

அதன்படி தற்போது ஃபாஸ்ட் டேக் கார்டை விநியோகம் செய்த நிறுவனங்கள் இனி வாகன ஓட்டிகளின் ஃபாஸ்ட் டேக் கார்டில் குறிப்பிட்டு அளவுக்கு மேல் பணம் குறைந்தால் தானியங்கியாக அவர்கள் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டை இ மேண்டேட் என்ற முறையில் ரீசார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் வரைமுறைகளுக்கு உட்பட்டு இந்த செயல்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் பயனர்கள் கட்டாயமாக இ-மேன்டேட் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தேவைப்பட்டால் மேனுவலாக கூட ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால் மேனுவலாக ரீசார்ஜ் செய்ய விரும்பாத மக்கள் இப்படியாக இ-மேன்டேட் மூலம் தானியங்கியாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.
இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உங்கள் ஃபாஸ்ட்டேக் பேலன்ஸ் குறையும்போது குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என முன்னரே கண்டிஷன் கொடுத்து ஆக்டிவேட் செய்து விட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைந்ததும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டு அது ஃபாஸ்ட் டேக் கார்டு பேலன்ஸாக ஏற்றப்படும்.
உதாரணமாக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரூபாய் 200 க்கு குறைவாக ஃபாஸ்ட் டேக் கார்டின் பேலன்ஸ் இருக்கும்போது ரூபாய் 1000த்திற்க்கு ரீசார்ஜ் செய்ய சொல்லி கண்டிஷன் போட்டிருந்தால் கடைசியாக ஃபாஸ்ட் டேக் கட்டணம் எடுக்கப்பட்ட பிறகு உங்கள் பேலன்ஸ் ரூபாய் 200 க்கு குறைவாக இருந்தால் தானாக ரூபாய் 1000 உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்து பாஸ்ட் டேக் பேலன்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதில் பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இப்படியான தொழில்நுட்பத்தை தற்போது அரசு அறிமுகப்படுத்தி உள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். இதனால் இந்தியாவில் இனி டபுள் டோல் கட்டணம் செலுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








