வாகனங்களில் இனி இது கட்டாயம்: 4 மாதங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்...
மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் நான்கு மாதங்களில் அதிரடி திட்டம் ஒன்றை கட்டாயமாக்க இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து, சாலை மற்றும் வாகனங்கள் சார்ந்த விவகாரங்களில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், அண்மைக் காலங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரினை மத்திய அரசு தொடுத்து வருகின்றன. அதேசமயம், வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் குற்றச் சம்பவங்களையும் தவிர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு, எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டு, நாடு முழுவதும் மின் வாகனங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறலை முற்றிலும் தடுக்கும் வகையில், முன்னதாக விதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகையை பத்து மடங்கு அதிகரித்து, புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலை விபத்திற்கும், போக்குவரத்து நெரிசலுக்கும், விதிமீறல்களுமே முக்கிய காரணமாக இருப்பதால் இத்தகையை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, வாகனம் மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் மத்திய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், டோல் கேட் விவகாரத்திலும் ஓர் அதிரடி நடவடிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ள இருக்கின்றது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த சில மாதங்களாக இந்திய போக்குவரத்து மற்றும் சாலை நிலைமைகளை சீர்திருத்துவதற்கான பல்வேறு திட்டங்களை முறைப்படுத்தி அறிவித்து வருகின்றார்.
அவ்வாறு, சில நாட்களுக்கு முன்பு, டயர்களில் சாதாரண காற்றை நிரப்புவதற்கு பதிலாக நைட்ரஜன் காற்றை, நாடு முழுவதும் உள்ள வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் முன்மொழிந்தார்.

இதைத்தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், இன்னும் நான்கு மாதங்களில் மோட்டார் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவத்துள்ளார்.

இதனை, அண்மையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த விவாதத்தின்போது கூறினார்.
மேலும், நல்ல சாலைகள் வேண்டுமானால் மக்கள் கட்டாயம், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கருத்தையும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளில் 40,000 கிலோமீட்டர் அளவிலான நெடுஞ்சாலையை அரசு உருவாக்கியுள்ளது. ஆகையால், நாடு முழுவதும் விரைவான கட்டண வசூலை உறுதி செய்வதற்கு, ஃபாஸ்ட் டேக்குகளின் பயன்பாடு மிக அவசியமாக இருக்கின்றது. இது, பல நன்மைகளைப் பெறுவதற்கு வழிவகுக்கும். ஆகையால், வரும் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படுஉள்ளது" என்றார்.

தற்போது, சுங்க கட்டணத்தை மையமாகக் கொண்டு பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த ஃபாஸ்ட் டேக், விரைவில் பெட்ரோல் வாங்குவதற்கும், பார்க்கிங் கட்டணம் செலுத்துவதற்கும், பயன்படும் வகையில் வழிவகைச் செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு சந்தையில், லாரியும் மற்ற சரக்கு வாகனங்களும்தான் பெரும் பங்கினை வகிக்கின்றன. இந்த வாகனங்கள், ஒவ்வொரு முறையையும் சுங்கச் சாவடியைக் கடந்துச் செல்லும்போது, சில மணித்துளிகள் நின்று பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்லும் சூழல் தற்போது நிலவி வருகின்றது.

பொதுவாக, நெடுஞ்சாலைகளை பல தரப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துவதால், சில நேரங்களில், டோல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இந்த சூழவில் ஒவ்வொரு வாகனமும் நின்று, சரியான சில்லறையைக் கொடுத்துவிட்டு செல்வதற்குள், அந்த பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகின்றது.

இதற்கு, ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள், கட்டணம் செலுத்த காத்திருப்பதே முக்கியமாக காரணமாக இருக்கின்றது.
ஆகையால், இந்த இடரை நீக்கும்விதமாக அதிவிரைவில் தானியங்கி முறையில் கட்டணம் செலுத்தும், ஃபாஸ்ட் டேக் முறையை இன்னும் நான்கு மாதங்களில் மத்திய அரசு கட்டாயமாக்க இருக்கின்றது.

ஃபாஸ்ட் டேக் என்பது, ரோடியோ அதிர்வெண்ணை அடிப்படையில் கொண்டு இயங்கும் தொழில்நுட்பமாகும். இது, டோல்கேட்டைக் கடக்கும்போது, வாகனத்தை நிறுத்தாமலேயே, டோலுக்கான கட்டணத்தை தானாகவே செலுத்த உதவும்.
இதற்கான, தொழில்நுட்பம் அடங்கிய ஸ்டிக்கர் வடிவிலான க்யூ ஆர் கோட், பிரத்யேக கார்டு வடிவமைப்பில், வாகனத்தின் விண்ட்ஷீல்ட் பகுதியில் ஒட்டப்பட்டிருக்கும்.

இது, ஒவ்வொரு முறையும் சுங்கசாவடியைக் கடக்கும், தானாக ஸ்கேன் செய்யப்பட்டு, அதற்கு உரித்தான கட்டணத்தை தானாகவே வழங்கிவிடும். இந்த செயல்முறையானது, கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிடும் அளவிற்கு வேகம் கொண்டதாக இருக்கின்றது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்தும் முறை தவிர்க்கப்படுகின்றது.

அதேசமயம், டோல்கேட்டிற்கான கட்டணத்தை ஃபாஸ்ட் டேக்குகள் செலுத்த, அதனை ப்ரீபெய்டு கணக்காகவே அல்லது வங்கி கணக்கில் இணைத்துக் கொண்டோ பயன்படுத்தலாம். ஆகையால், நாம் ஒவ்வொரு முறையும் டோலை கடக்கும்போது, அதிலிருந்த தானாகவே பணம் எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்கு நாம் செய்யவேண்டியது, குறிப்பிட்ட ஃபாஸ்டாக்-கினை வங்கி கணக்குடன் இணைத்தாலே போதும். அதேசமயம், வங்கிக் கணக்கில் பணம் இருத்தலும் அவசியம். இல்லையென்றால், செல்போனில் டால்க் டைமை சேர்த்துக்கொள்வதால், தேவைக்கேற்ப பணத்தைக் கொடு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்த ஃபாஸ்ட் டேக் தற்போது அமேசான் மற்றும் பேடிஎம் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல் பங்க், சுங்க சாவடி மற்றும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் சிலவற்றிலும் இந்த ஃபாஸ்ட் டேக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








