உஷார் மக்களே... இரு மடங்கு டோல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு... தப்பிப்பதற்கு என்ன வழி?..
இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு டோல் கட்டணம் என்ற விதி அமலுக்கு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சுங்கச் சாவடிகளுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ரொக்கமாக இல்லாமல் டிஜிட்டல் வழியாக பண பரிவார்த்தனை செய்ய உதவும். எனவேதான் இதனை மத்திய அரசு கட்டாயம் என அறிவித்திருக்கின்றது. பெரும்பாலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வழி கட்டண பரிமாற்றத்திற்கு மாறிவிட்ட நிலையில் இன்னும் சில வாகனங்கள் ரொக்கமாகவே கட்டணத்தைச் செலுத்தி வருகின்றன.

இத்தகைய வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டண வழிமுறைக்கு மாறுவதற்காக காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. இந்த கெடு இன்றுடன் (பிப்ரவரி 15) முடிவடைகிறது. ஆகையால் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களிடம் இருந்து இரு மடங்காக கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனவரி 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பெருவாரியான வாகனங்கள் இந்த முறைக்கு மாறாமல் இருந்த காரணத்தால் பிப்ரவரி 15ம் தேதிக்கு இக்காலக்கெடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே காலக்கெடுவைத் தாண்டியும் ஃபாஸ்டேக் கட்டணத்திற்கு மாறாமல் இருக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து இரு மடங்காக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், ஆன்லைன் பண பரிவார்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஃபாஸ்டேக்கினை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இதன் மூலம் வாகனங்கள் மிக அதிக வேகத்தில் சுங்கத்திற்கான கட்டணத்தைச் செலுத்த முடியும் என அரசு நம்புகின்றது. மேலும், கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் அதிகப்படியான நெரிசல் மற்றும் நேர விரயத்தையும் இதன்மூலம் தவிர்க்க முடியும் என நம்பப்படுகின்றது.

எனவேதான் கடந்த சில மாதங்களாகவே இத்திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையிலேயே ஃபாஸ்டேக்கினை பொருத்தாத வாகனங்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கொண்ட கடுமையான முயற்சிகளினால் ஃபாஸ்டேக்கினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடிகளுக்கும் அதிக எண்ணிக்கையைத் தொட்டிருக்கின்றது.

தொடர்ந்து, சுமார் 75 சதவீதம் வரையிலான வாகனங்கள் ஃபாஸ்டேக்கின் மூலமாகவே கட்டணத்தைச் செலுத்தி வருகின்றன. இதனை நூறு சதவீதமாக்க வேண்டும் என்ற முயற்சியிலேயே இரு மடங்கு கட்டணம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னதாக மேற்கொள்ளப்பட்டு வந்த பண பரிவார்த்தனைக்கான தனி லேன்கள் விரைவில் நீக்கப்பட இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, ஹைபீரிட் லேன்கள் மட்டுமே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்த லேனில் ஃபாஸ்டேக் இல்லாமல் நுழையும் வாகனங்களுக்கு ரூ. 100 வழக்கமான கட்டணம் என்றால் 200 ரூபாயாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உச்சபட்ச கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருக்கின்றது. இதனைத் தவிர்க்க வேண்டுமானால் உடனடியாக ஃபாஸ்டேக்கிற்கு மாறுவதுதவிர வேறு வழியில்லை.

ஆன்லைன் மற்றும் சில வங்கிகள் இந்த ஃபாஸ்டேக்கினை வழங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி ஆன்லைன் ரீசார்ஜ் தளங்களும் சலுகையுடன் ஃபாஸ்டேக்கினை வழங்க ஆரம்பித்திருக்கின்றன. ஃபாஸ்டேக் என்பது ரேடியோ அதிர்வெண் (Radio-frequency identification) தொழில்நுட்பம் கொண்ட ஓர் ஸ்டிக்கராகும். சிம் கார்டுகளுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் இதற்கென தனியாக ரீசார்ஜ் செய்து கொண்டால், ஒவ்வொரு முறையும் டோல்கேட்டைக் கடக்கும்போது தானாகவே கட்டணத்தைச் செலுத்திவிடும்.


Click it and Unblock the Notifications








