பாஸ்டேக் விஷயத்தில் நினைத்ததை சாதிக்கும் ஒன்றிய அரசு... என்னனு தெரியுமா?
இந்தியாவில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுங்க சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் தற்போது பாஸ்டேக் லேன்களாக இருப்பதாக, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுத்து பூர்வமாக பதில் வழங்கியபோது, அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அனைத்து வாகனங்களுக்கும் ஒன்றிய அரசு பாஸ்டேக்கை கட்டாயமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த ஜூலை 14ம் தேதி நிலவரப்படி 3.54 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி நிலவரப்படி சுமார் 80 சதவீதம் பேர் மட்டுமே பாஸ்டேக் மூலமாக சுங்க கட்டணம் செலுத்தி வந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது சுமார் 96 சதவீதமாக உயர்ந்துள்ளது. அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக அறிவிக்கப்பட்ட பிறகு, பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதலே, டிஜிட்டல் பணி பரிவர்த்தனைகளை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த வரிசையில் பாஸ்டேக் மூலமாக சுங்க கட்டணம் செலுத்துவதும் கட்டாயம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தினால், மனித தொடர்பு தேவையில்லை. கொரோனா பாதிப்பு உள்ள தற்போதைய சூழலில், பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதுதான் பாதுகாப்பானது.

இதுதவிர கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதும் பாஸ்டேக்கின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று. உங்கள் வாகனத்தின் முன் பக்க விண்டுஷீல்டில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்டேக்கை, சுங்க சாவடிகளில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து, உங்கள் கணக்கில் இருந்து தானாகவே கட்டணம் எடுக்கப்பட்டு விடும்.

ஆனால் பாஸ்டேக் கட்டாயம் செய்யப்பட்ட பின்னர், சுங்க சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கின்ற நேரம் குறைந்துள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஒன்றிய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இதுதவிர பாஸ்டேக் மூலம் சுங்க சாவடிகளில் காகித பயன்பாடு குறைந்துள்ளது.

மேலும் பாஸ்டேக் மூலம் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதால், பெட்ரோல், டீசல் வீணாவது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும். வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும்போது நீண்ட நேரம் ஐட்லிங்கில் இருந்தால், பெட்ரோல், டீசல் வீண் ஆவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் பல்வேறு நன்மைகள் இருக்கும் காரணத்தால்தான் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக்கை ஒன்றிய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் பாஸ்டேக் மூலமாக சுங்க கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 96 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








