பாஸ்டேக் மூலம் கோடி கோடியாய் கொட்டுது... டோல்கேட் கட்டணம் எவ்வளவு வசூல் ஆகிறது என தெரிந்தால் ஸ்டண் ஆயிருவீங்க
பாஸ்டேக் மூலம் டோல்கேட் கட்டண வசூலில் இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாஸ்டேக் மூலமான தினசரி டோல்கேட் கட்டண வசூல் 104 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நேற்று (பிப்ரவரி 26) அறிவித்துள்ளது. இந்தியாவில் அனைத்து வாகனங்களுக்கும் தற்போது பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு கடந்த பிப்ரவரி 16ம் தேதி அமலுக்கு வந்தது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு தற்போது இரு மடங்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாஸ்டேக் மூலம்தான் தற்போது டோல்கேட் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். எனவே பிப்ரவரி 16ம் தேதிக்கு பிறகு, பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''டோல்கேட் கட்டண வசூலில் இந்த வாரம் தினமும் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்து வருகிறது. கடந்த 25-02-2021ம் தேதியன்று 64.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் உடன் பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூல் அதிகபட்ச அளவாக 103.94 கோடி ரூபாயை தொட்டது'' என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் இவ்வளவு அதிகமான டோல்கேட் கட்டணம் வசூலானது கிடையாது. பாஸ்டேக் மூலமாக டோல்கேட் கட்டண வசூலில் இது ஒரு சாதனையாகும். அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, டோல்கேட் கட்டண வசூலில் புதிய சாதனை படைக்கப்படுவதும், உடனடியாக அந்த சாதனை தகர்க்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

ஏனெனில் இந்தியாவில் கடந்த பிப்ரவரி 17ம் தேதியன்று, பாஸ்டேக் மூலமாக மட்டும் 95 கோடி ரூபாய் வசூலானது. இதன் மூலம் பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் வசூலான அதிகபட்ச தொகை என்ற சாதனையை இது படைத்தது. ஆனால் பிப்ரவரி 19ம் தேதியே இந்த சாதனை தகர்க்கப்பட்டு, பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூலில் புதிய சாதனை படைக்கப்பட்டது.

அன்றைய தினம் 102 கோடி ரூபாய் வசூலானது. ஆனால் தற்போது அந்த சாதனையும் தகர்க்கப்பட்டு, பிரம்மாண்டமான புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூல் இன்னும் அதிகமாகும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கட்டணம் செலுத்துவதற்காக டோல்கேட்களில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருப்பது பாஸ்டேக் மூலம் தவிர்க்கப்படும். டோல்கேட்களில் உள்ள கருவிகள் உங்கள் வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக்கை ஸ்கேன் செய்து ஏற்கனவே ரீசார்ஜ் செய்து வைக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து கட்டணத்தை எடுத்து கொள்ளும்.

தேவைப்படும் சமயங்களில் நீங்கள் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால் சில டோல்கேட்களில் கருவிகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. அந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்து, வாகனங்களின் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யும் பணிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








