டோல் கட்டண வசூல் குவியுது... எல்லா பெருமையும் மத்திய அரசுக்கு தான் - ஒரே நாளில் இவ்வளவு கோடி ரூபாயா!!
இதுவரையில் இல்லாத உச்சமாக கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஃபாஸ்டேக் (FASTag) டோல் கட்டணமாக சுமார் ரூ.193 கோடி வசூலாகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எவ்வாறு இது சாத்தியமானது? என்பது உள்பட இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டிற்கும் நெடுஞ்சாலைகளும், விரைவுச்சாலைகளும் அவசியமாகும். இத்தகைய சாலைகள் நாடு முழுவதும் பரவி இருப்பது மட்டுமின்றி, நல்ல தரத்திலும் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வரையறுப்பதில் சாலை போக்குவரத்து முக்கியமானதாக விளங்குகிறது. சாலைகள் நல்ல தரத்தில் இருந்தால் மட்டுமே சாலை போக்குவரத்து சீராக, எந்தவொரு தடையுமின்றி இருக்கும்.

இதனை நன்கு புரிந்து வைத்துள்ள நமது மத்திய அரசு நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் கடந்த பல வருடங்களாகவே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் பயன்பாட்டிற்கு வரும் டெல்லி-மும்பை நெடுஞ்சாலை இந்தியாவின் எதிர்கால போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்தார்.
இவ்வாறு புதிய புதிய நெடுஞ்சாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை காட்டிலும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பது முக்கியமானது ஆகும். அப்போதுதான் அவற்றின் ஆயுட்காலம் நீண்ட வருடங்களுக்கு நீடித்து இருக்கும். இந்த பராமரிப்புகளுக்கு ஆகும் செலவுகளை ஈடுச்செய்யவே டோல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதேநேரம், அவ்வப்போது நெடுஞ்சாலைகளில் பயணிப்போரின் கட்டணங்களை மிச்சப்படுத்தும் முயற்சியாக ஃபாஸ்டேக் முறை சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2023 ஏப்ரல் 29ஆம் தேதியில் இதுவரையில் இல்லாத உச்சமாக தினசரி ஃபாஸ்டேக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய நெடுஞ்சாலைகள் துறை (NHAI) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, ஒரே நாளில் சுமார் ரூ.193.15 கோடி தினசரி ஃபாஸ்டேக் கட்டணங்கள் வசூலாகி உள்ளன. ஏப்ரல் 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலமாக இத்தகைய இமாலய தொகை அரசுக்கு கிடைத்துள்ளது.
பல்வேறு வெளிநாடுகளிலும் வெவ்வேறான பெயர்களில் உள்ள ஃபாஸ்டேக் முறையை இந்திய அரசு கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில் கட்டாயமாக்கியது. அதாவது, அதற்கு முன்பும் கூட நமது நாட்டில் ஃபாஸ்டேக் முறை இருந்தது, ஆனால் விருப்பப்படுவோர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் 2021 பிப்ரவரிக்கு பிறகு நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 1,228 டோல்கேட்களில் ஃபாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 97 சதவீத டோல்கேட்களில் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தலாம். இந்தியாவில் ஃபாஸ்டேக் கார்டுகள் இதுவரையில் கிட்டத்தட்ட 7 கோடி வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஃபாஸ்டேக்குகள் டோல் கட்டணத்தை குறைக்கின்றன என்பதை விட முக்கியமாக, டோல்கேட்டில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் நீங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஃபாஸ்டேக் கார்டை காட்டினாலே போதுமானது, தானாக கட்டணம் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃபாஸ்டேக், ஓர் மிக சிறந்த டோல் கட்டண வசூல் முறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.200 கோடி வரையில் ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலாகி இருப்பது, அதனை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டுகிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஃபாஸ்டேக்கை காட்டிலும் எளிமையான டோல் கட்டண வசூல் முறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
