காசு இல்லாமல் பெட்ரோல்! ஸ்மார்ட் பங்க்குகளால் மோசடி ஊழியர்களுக்கு ஆப்பு!
உலகிலேயே முதல் முறையாக ஸ்மார்ட் பெட்ரோல் பங்க்குகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. இனி கையில் பணம் இல்லாவிட்டாலும், பெட்ரோல் பங்க்கில் ஊழியர் இல்லாவிட்டாலும் கூட எளிதாக எரிபொருள் நிரப்ப முடியும்.
உலகிலேயே முதல் முறையாக ஸ்மார்ட் பெட்ரோல் பங்க்குகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. இனி கையில் பணம் இல்லாவிட்டாலும், பெட்ரோல் பங்க்கில் ஊழியர் இல்லாவிட்டாலும் கூட எளிதாக எரிபொருள் நிரப்ப முடியும். பெட்ரோல் பங்க் ஊழியரால் இனி உங்களை ஏமாற்ற முடியாது. தவறான எரிபொருளை நிரப்பி இன்ஜினை வீணடிக்க முடியாது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடேட் (HPCL), பேமண்ட் மற்றும் ஆட்டோமேஷன் நிறுவனமான ஏஜிஎஸ் ஆகியவை இணைந்து, ஸ்மார்ட் பெட்ரோல் பங்க்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. இதற்கு 'பாஸ்ட் லேன்' என பெயரிடப்பட்டுள்ளது.

'பாஸ்ட் லேன்' திட்டத்தில் இணைய விரும்பினால், உங்கள் காரின் எரிபொருள் டேங்கிற்கு அருகே 'சிப்' ஒன்றை பொருத்தி கொள்ள வேண்டும். இதற்கு RFID (Radio Frequency Identification) 'சிப்' என பெயரிடப்பட்டுள்ளது.

RFID 'சிப்' பொருத்தப்பட்ட காருக்கு எரிபொருள் நிரப்ப, பெட்ரோல் பங்க்கில் ஊழியர் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பெட்ரோல் பங்க் ஊழியர் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் smart fuel nozzles (ஸ்மார்ட் எரிபொருள் நிரப்பும் கருவி) மற்றும் RFID 'சிப்' ஆகியவை இணைந்து செய்து விடும்.

RFID 'சிப்' பொருத்தப்பட்ட காரை, ஸ்மார்ட் எரிபொருள் நிரப்பும் கருவிக்கு முன்பாக நிறுத்தினால் போதும். RFID 'சிப்' மூலமாக உங்கள் காரை, ஸ்மார்ட் எரிபொருள் நிரப்பும் கருவி, அடையாளம் கண்டுகொள்ளும். இதற்காக பிரத்யேகமான 'சிப் ரீடர்', எரிபொருள் நிரப்பும் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும்.

பின்னர் காரின் எரிபொருள் வகைக்கு ஏற்ப, பெட்ரோல் காராக இருந்தால் பெட்ரோலையும், டீசல் காராக இருந்தால் டீசலையும், ஸ்மார்ட் எரிபொருள் நிரப்பும் கருவியே தானாக நிரப்பி விடும். இதற்கு பெட்ரோல் பங்க்கில் ஆட்கள் இருக்க வேண்டும் என்பது இல்லை.

சரி, பணத்தை எப்படி வழங்குவது? என்ற சந்தேகம் எழலாம். 'பாஸ்ட் லேன்' திட்டத்திற்கு என தனியாக 'மொபைல் ஆப்' உள்ளது. இந்த ஆப்பை உங்கள் மொபைலில் 'இன்ஸ்டால்' செய்து கொள்வதுடன், தேவையான தொகையை 'ரீசார்ஜ்' செய்து வைத்து கொள்ள வேண்டும்.

எவ்வளவு தொகைக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும்? பெட்ரோலா? அல்லது டீசலா? என்பது போன்ற விபரங்களை எல்லாம் 'மொபைல் ஆப்' மூலம் நீங்கள் தெரிவித்து விட வேண்டும். அதற்கு ஏற்ப ஸ்மார்ட் எரிபொருள் நிரப்பும் கருவியானது எரிபொருளை நிரப்பி விடும்.

இதன்பின்னர் எரிபொருள் நிரப்பப்பட்டதற்கான தொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடும். நீங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் மட்டும் செய்து கொண்டால் போதும். எரிபொருள் நிரப்புவதில் இத்தகைய டெக்னாலஜி கடைபிடிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டெக்னாலஜி மூலமாக உங்களுக்கு எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன. சாதாரணமாக நாம் பெட்ரோல் பங்க் சென்றால், பெட்ரோல் பங்க் ஊழியர் சரியான அளவிற்கு பெட்ரோல் நிரப்புகிறாரா? என்று உன்னிப்பாக கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி உன்னிப்பாக கவனித்து கொண்டே இருந்தாலும் கூட சில சமயங்களில் உங்கள் கவனத்தை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் திசை திருப்பி விட வாய்ப்புகள் உண்டு. உங்களிடம் பேச்சு கொடுத்து கொண்டே பெட்ரோல் பங்க் ஊழியர்கள், மோசடியை அரங்கேற்றி விடுவார்கள்.

ஆனால் 'பாஸ்ட் லேன்' திட்டத்தின்படி, எரிபொருள் நிரப்பும் தொகையில் மோசடி நடைபெற வாய்ப்பே இல்லை. 'மொபைல் ஆப்பில்' நீங்கள் எவ்வளவு தொகை குறிப்பிடுகிறீர்களோ, அவ்வளவு தொகைக்கு மிக துல்லியமாக எரிபொருள் நிரப்பப்பட்டு விடும்.

சில சமயங்களில் உங்கள் டிரைவரிடம் காரையும், பணத்தையும் கொடுத்து எரிபொருள் நிரப்பி வர சொல்வீர்கள். அந்த சமயங்களில், தவறான டிரைவர்கள் சிலர் பணத்தை மோசடி செய்து விட வாய்ப்புகள் உள்ளன. 'பாஸ்ட் லேன்' திட்டத்தின் மூலமாக அத்தகைய மோசடிகளையும் தவிர்த்து விட முடியும்.

'பாஸ்ட் லேன்' திட்டத்தின் மூன்றாவது பயன், சரியான எரிபொருள் உங்கள் காரில் நிரப்பப்படுவதுதான். பெட்ரோல் காரில் பெட்ரோலையும், டீசல் காரில் டீசலையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காரின் இன்ஜின் அதற்கு ஏற்பதான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் சில சமயங்களில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள், எரிபொருளை மாற்றி நிரப்பி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதாவது பெட்ரோல் காரில் டீசலையும், டீசல் காரில் பெட்ரோலையும் மாற்றி நிரப்பி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி தவறான எரிபொருள் இன்ஜினிற்குள் சென்று விட்டால், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். பெட்ரோல் பங்க் ஊழியர்களின் இந்த சிறிய கவனக்குறைவு, உங்களுக்கு மிகப்பெரிய அளவில் செலவு வைத்து விடும்.

ஆனால் 'பாஸ்ட் லேன்' திட்டத்தில் இந்த தவறு நடைபெறவும் வாய்ப்புகள் இல்லை. 'மொபைல் ஆப்' மூலமாக நீங்கள் எரிபொருளின் வகையை சரியாக குறிப்பிட்டு விடலாம். அதுமட்டுமல்லாமல் காரின் மாடலுக்கு ஏற்ப, பெட்ரோல் நிரப்பும் கருவியே, என்ன வகையான எரிபொருள்? என்பதை கண்டுபிடித்து விடும்.

உங்கள் பணம், இன்ஜின் பாதுகாப்பு ஆகியவற்றை 'பாஸ்ட் லேன்' உறுதி செய்வதுடன், உங்களின் பொன்னான நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஏனெனில் எரிபொருள் நிரப்பும் ஊழியர் வரும் வரை நீங்கள் பெட்ரோல் பங்க்கில் காத்து கொண்டிருக்க வேண்டியதில்லை.

ஒரு நள்ளிரவு நேரத்தில் உங்கள் காரில் திடீரென எரிபொருள் தீர்ந்து விடுகிறது என வைத்து கொள்வோம். அப்போது நீங்கள் பயணித்து கொண்டிருக்கும் பாதையில், பெட்ரோல் பங்க் இல்லாமல் போய் விடும் அபாயம் உள்ளது. அதையும் மீறி தேடி கண்டுபிடித்து ஒரு பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைவீர்கள்.

ஆனால் எரிபொருள் நிரப்பும் ஊழியர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருப்பார். அவரை சத்தம் போட்டு எழுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இத்தகைய அனுபவங்கள் பலருக்கும் கிடைத்திருக்கலாம்.

எனினும் 'பாஸ்ட் லேன்' திட்டத்தில் இந்த பிரச்னையும் கூட இல்லை. நீங்கள் பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைகிறீர்கள். எரிபொருளை நிரப்புகிறீர்கள். காரை ஸ்டார்ட் செய்து பறந்து கொண்டே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

பெட்ரோல், டீசலின் விலை எவ்வளவு? எரிபொருள் நிரப்பும்போது, ரியல் டைமில் எவ்வளவு தொகைக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது? போன்ற தகவல்களையும் மொபைல் ஆப் மூலமாகவே நீங்கள் பார்த்து கொள்ள முடியும்.

கார் வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பாஸ்ட் லேன்' திட்டம் மும்பையில் 18 பெட்ரோல் பங்க்குகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. இந்த எண்ணிக்கையை தற்போதைக்கு 35ஆக உயர்த்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது.

பின்னர் மும்பையில் உள்ள அனைத்து ஹிந்துஸ்தான் பங்க்குகள், NCR எனப்படும் தேசிய தலைநகர் வலயம் (டெல்லி, புது டெல்லி, காசியாபாத், பரிதாபாத், குர்கான், மீரட், நொய்டா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது) என நாடு முழுமைக்கும் 'பாஸ்ட் லேன்' திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைல் பயன்பாட்டாளர்களுக்கான 'பாஸ்ட் லேன் ஆப்' கூகுள் பிளே ஸ்டோரிலும், ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கான 'பாஸ்ட் லேன் ஆப்' ஆப் ஸ்டோரிலும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications