தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... ஸ்கூட்டரில் தூங்கும் மகனை பாதுகாக்க தந்தை செய்த காரியம்... வைரல் வீடியோ!
சமூக வலை தளங்களில் தற்போது சிறிய வீடியோ ஒன்று காட்டு தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவில் டர்பன் அணிந்த நபர் ஒருவர், ஸ்கூட்டர் ஓட்டி செல்வதை நம்மால் காண முடிகிறது. அவருக்கு பின்னால் பில்லியன் இருக்கையில் சிறுவன் ஒருவன் அமர்ந்துள்ளான்.
இவர்கள் இருவரும் தந்தை, மகனாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிறுவனின் தலை ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. எனவே அந்த சிறுவன் தூக்க கலக்கத்தில் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. ஆனால் அந்த சிறுவன் ஓடும் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழாமல் இருப்பதற்காக, ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருக்கும் நபர் ஒரு கேடயம் போல் செயல்படுகிறார்.

அதாவது அந்த நபர் தனது வலது கையை மட்டும் பயன்படுத்தி ஸ்கூட்டரை ஓட்டுகிறார். அவரது இடது கை, தூங்கி கொண்டிருக்கும் சிறுவனை கெட்டியாக தாங்கி பிடித்துள்ளது. இதன் மூலம் சிறுவன் கீழே விழுந்து விடாமல் தூங்கி கொண்டே வருகிறான். இந்த வீடியோவை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் அப்பாக்கள், சூப்பர் ஹீரோக்களுக்கும் மேலானவர்கள் எனவும் நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ சண்டிகரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ''தந்தையின் கை இருக்கும் வரை எந்தவொரு டென்ஷனும் இல்லை. ஏனெனில் தந்தை இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்'' என நெட்டிசன் ஒருவர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளார். ''தந்தைதான் ஒருவரின் வாழ்க்கையின் நிஜ ஹீரோக்கள்'' என மற்றொரு சமூக வலை தள பயனர் கூறியுள்ளார். இதேபோல் இன்னும் பலரும் சூப்பர் ஹீரோக்களுடன் தந்தையை ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
ஆனால் சமூக வலை தளங்களில் இந்த வீடியோவிற்கு எதிர் கருத்துக்களும் வந்து கொண்டுள்ளன. இந்த மனிதரின் செயல் பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்லாது, தனது மகனின் வாழ்க்கையிலும் ஆபத்தை ஏற்படுத்துகிறார் என்ற ரீதியில் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். ''வாகனங்களை இதுபோன்று ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. யாரும் இப்படி வாகனங்களை ஓட்ட வேண்டாம்'' என அவர் கூறியுள்ளார்.
இது போன்ற எதிர்மறையான கருத்துக்களிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. உண்மையில் ஒரு கையை மட்டும் பயன்படுத்தி, ஸ்கூட்டரை இப்படி ஓட்டுவது ஆபத்தானதுதான். ஸ்கூட்டர் திடீரென கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் திடீரென ஸ்கூட்டரை நிறுத்தியாக வேண்டிய சூழல் வந்தாலும், நிறுத்த முடியாமல் போகலாம். இது ஸ்கூட்டரில் பயணிக்கும் இருவருக்கு மட்டுமல்லாது, சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
இதன் காரணமாகவே ஸ்கூட்டரை ஓட்டும் நபரின் செயல் மிகவும் தவறானது என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான உங்களது கருத்து என்ன? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கு முன்னதாக தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த தந்தை, மகனின் வீடியோவை கீழே பார்த்து விடுங்கள்.
இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது எப்போதும் கவனமாக இருங்கள். குறிப்பாக ஹெல்மெட் அணிய மறக்க வேண்டாம். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பாதுகாப்பு அம்சமே ஹெல்மெட்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணியுங்கள். அதேபோல் குடிபோதையில் ஓட்டுவதை தவிர்ப்பதும், இரு சக்கர வாகனம் என்பது இருவருக்குமானது மட்டுமே என்பதை உணர்வதும் அனைவருக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications