காடுகள் வழியே 2,800 கிமீ நடந்து வந்த 10 வயது சிறுவன்... யாரை பார்ப்பதற்காக என தெரிஞ்சா அசந்திருவீங்க
10 வயதே ஆன சிறுவன், காடுகள் வழியே 2,800 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. எனவே ஆட்டோ, டாக்ஸி, பேருந்து, ரயில், விமானம் என அனைத்து வகையான பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தனியாருக்கு சொந்தமான கார், டூவீலர்களை இயக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பயணிப்பது என்பதே மிகவும் சவாலான காரியமாக இருந்தது. ஆனால் ஊரடங்கிற்கு மத்தியில், விமான போக்குவரத்தும் இல்லாத சூழலில், தந்தையும், மகனும் 4 நாடுகள் வழியாக நடந்தே பயணம் செய்துள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ரோமியோ காக்ஸ் என்னும் அந்த சிறுவனுக்கு வெறும் 10 வயது மட்டுமே ஆகிறது. ரோமியோ காக்ஸ் மற்றும் அவரது தந்தை பில் ஆகிய இருவரும்தான் நான்கு நாடுகள் வழியாக சுமார் 2,800 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் பிராந்தியமான சிசிலியில் உள்ள பலெர்மோ என்னும் நகரில் இருந்து, இங்கிலாந்தில் உள்ள லண்டனை நோக்கி, கடந்த ஜூன் 20ம் தேதி அவர்களின் பயணம் தொடங்கியது.

ரோமியோ காக்ஸின் பாட்டி லண்டனில் வசித்து வருகிறார். அவரை நேரில் பார்த்து கட்டிப்பிடிக்க வேண்டும் என்பதுதான் ரோமியோ காக்ஸின் ஆசை. இதை தனது பெற்றோரிடம், ரோமியோ காக்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை. போக்குவரத்து வசதிகள் சரிவர இல்லாததும், கொரோனா வைரஸ் அச்சமும் மகனின் ஆசைக்கு ஒப்பு கொள்வதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை.

ஆனால் நடந்தாவது சென்று பாட்டியை நேரில் பார்க்க வேண்டும் என ரோமியோ காக்ஸ் விரும்பினார். இது புதிய அனுபவமாக இருக்கும் என்பதும் ரோமியோ காக்ஸின் எண்ணம். இறுதியில் ரோமியோ காக்ஸின் விருப்பத்தை நிறைவேற்றுவது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர். ரோமியோ காக்ஸின் நடை பயணத்தில், அவரது தந்தை பில்லும் இணைந்து வருவது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த ஜூன் 20ம் தேதி தங்கள் பயணத்தை தொடங்கிய இருவரும், கடந்த மாதம் செப்டம்பர் 21ம் தேதி இங்கிலாந்தை சென்றடைந்தனர். தற்போது அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்த பிறகு, ரோமியோ காக்ஸின் பாட்டியை அவர்கள் சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் தந்தையும், மகனும், இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வழியாக பயணம் செய்துள்ளனர். வழியில் காட்டு நாய்கள், காட்டு கழுதைகள் மற்றும் குளவிகள் ஆகியவற்றின் பிரச்னையை சந்திக்க வேண்டியிருந்தது. எனினும் இந்த சவால்களை எல்லாம் கடந்து அவர்கள் வெற்றிகரமாக இங்கிலாந்து சென்றடைந்துள்ளனர்.

இந்த பயணம் குறித்து ரோமியோ காக்ஸ் கூறுகையில், ''நாங்கள் சில முறை தொலைந்து விட்டோம். இந்த பயணத்தில் நாங்கள் குளவி கூட்டிற்கு அடியில் எல்லாம் தூங்கினோம். இது நல்ல யோசனை கிடையாது. இருந்தாலும் எங்கள் பயணத்தில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம்.

லண்டன் நெருங்க நெருங்க பாட்டியை சந்திக்க போவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் எனது பாட்டியை கடைசியாக பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. என்னால் அவரை கட்டி தழுவாமல் இருக்க முடியவில்லை. ஊரடங்கின்போது எனது பாட்டி தனியாகவே இருந்தார். 100 வயது மனிதரை போல் தற்போது நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன்.

ஆனால் இந்த பயணம் வேடிக்கையாக இருந்தது'' என்றார். கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு விமானங்கள் எதுவும் இல்லை என்பதால், நடந்து செல்வது என ரோமியோ காக்ஸ் முடிவு செய்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ''நடந்து செல்வது புதிய அனுபவமாக இருக்கும் எனவும் நான் நினைத்தேன். எனவே பெற்றோரிடம் அனுமதி கேட்டேன்.

ஆனால் 50 முறைக்கும் மேல் அவர்கள் மறுத்து விட்டனர். இறுதியாக அவர்கள் ஒப்பு கொண்டனர்'' என்றார். இந்த பயணத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாக அவர்கள் நடந்துதான் சென்றுள்ளனர். எஞ்சிய சிறு சதவீதம் மட்டும் படகுகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணித்துள்ளனர். இந்த பயணம் உலகம் முழுக்க அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








