வெளிநாடு ஸ்டைலில் திருநெல்வேலிக்கு வருகிறதா லைட் மெட்ரோ? தீவிரமாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்!
நெல்லையில் லைட் மெட்ரோ திட்டத்திற்கான ஆய்வுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மெட்ரோ அமைக்க இங்கு சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் லைட் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வுகள் தற்போது நடந்து வருகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மாநிலங்களின் தலை நகர் பகுதியில் மெட்ரோ ரயில்கள் செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில்களுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அங்கு பணிகள் துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

கோவை மற்றும் மதுரையில் முதற்கட்ட ஆய்வு பணிகள் எல்லாம் நடத்தப்பட்டு மெட்ரோ திட்டம் வரையறை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த கட்டத்தில் நகரங்களிலும் மெட்ரோவிற்கான பணிகளை துவக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.
அதன்படி சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு மெட்ரோ வருவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை மெட்ரோ அமைக்க சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளது என அறிக்கை அளிக்கப்பட்டது அதனால் திருநெல்வேலியில் மெட்ரோ வர வாய்ப்புகள் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது அரசு அதிகாரிகள் நெல்லை மாநகரப் பகுதியில் லைட் மெட்ரோ எனப்படும் சிறிய ரக மெட்ரோ ரயிலை கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். தற்போது அரசு அதிகாரிகள் நெல்லை மாநகரப் பகுதியில் லைட் மெட்ரோவை எந்தெந்த பகுதியில் அமைக்கலாம், எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது, எந்தெந்த பகுதிகளை இணைக்கும்படியாக இந்த மெட்ரோ ரயில் அமைய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
மெட்ரோ திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு உயர்மட்ட பாலத்தில் மெட்ரோ பாதை அமைக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 200 முதல் 250 கோடி வரை செலவிடப்பட்டு வருகிறது. ஆனால் லைட் மெட்ரோ என்றால் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 100 கோடி வரை தான் செலவிடப்பட வேண்டியது வரும். அதனால் பாதிக்கும் குறைவான செலவில் நெல்லை மாநகரில் மெட்ரோ சேவை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
லைட் மெட்ரோ என்றால் அது உயர்மட்ட பாலம் அல்லாமல் தரையிலேயே தண்டவாளங்களை அமைத்து சாலை ஓரமாகவே இந்த ரயில்கள் பயணிக்கும் படி இதன் கட்டமைப்பு செய்யப்படும். சாலையில் ரயில்கள் பயணிக்காத நேரம் இந்த பகுதியை சாலையாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். ரயில்கள் பயணிக்கும் நேரத்தில் மட்டும் மக்கள் அதிலிருந்து விலகி இடம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே இந்த ரயில் பயணிப்பதால் இந்த ரயிலின் வேகம் மிகவும் குறைவாக தான் இருக்கும் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் இந்த ரயில் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் சாலையில் செல்லும் சக வாகன ஓட்டிகளுக்கு எந்த வித தொந்தரவும் ஆபத்தும் ஏற்படாது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகளே இல்லாத வகையில் தான் இந்த மெட்ரோ சிஸ்டம் கொண்டு வரப்படும்.
அதே நேரம் இந்த மெட்ரோ ரயிலுக்காக போக்குவரத்து செயல்களிலும் மாற்றங்கள் செய்யப்படும் மெட்ரோ ரயிலுக்கான தனி சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டு அது சாலை போக்குவரத்து சிக்னலுடன் ஒப்பிடப்பட்டு விபத்துக்கள் ஏற்படாத வகையில் இந்த சிக்னல்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறான லைட் மெட்ரோ சிஸ்டம் எல்லாம் வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
வெளிநாடுகளில் உள்ளதைப் போல நெல்லை மாநகரிலும் லைட் மெட்ரோ சிஸ்டத்தை கொண்டு வர தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றன.ர் இந்த ஆய்வுக்கான முடிவுகள் எல்லாம் ஒரு செப்1ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் என்னென்ன மாதிரியான மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது 2ம் கட்ட நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தற்போது துவக்க நிலையில் இருந்தாலும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் இதற்கான பணிகள் துவக்கப்பட்டு ஜரூரா பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவில் பெரும்பாலான இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ பயன்பாடு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நெல்லை மக்கள் வித்தியாசமாக லைட் மெட்ரோ அனுபவத்தை பெற உள்ளனர்.


Click it and Unblock the Notifications