ஹோண்டா அமேஸ் வேண்டவே வேண்டாம்... நொந்து போன வாடிக்கையாளரின் நூதன பிரச்சாரம்!
சிலருக்கு கார் வாங்கும் அனுபவம் கசப்பானதாக மாறிவிடுகிறது. அதுபோன்று, ஒரு நிலைமை ஹோண்டா அமேஸ் காரின் உரிமையாளருக்கு ஏற்பட்டிருக்கிறது.
எஞ்சின் பிரச்னைக்கு சரியான தீர்வு தராத ஹோண்டா நிறுவனத்தின் மீது நொந்து போன அந்த வாடிக்கையாளர், ஹோண்டா அமேஸ் வேண்டாம் என்று அவரது கார் முழுவதும் எழுதி பிரச்சாரம் செய்து வரும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

உரிமையாளர்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் நகரை சேர்ந்தர் சஞ்சீவ் குப்தா. இவர் அங்குள்ள ஒக்லா பகுதியில் உள்ள கோர்ட்டஸி ஹோண்டா என்ற கார் ஷோரூமில் புதிய ஹோண்டா அமேஸ் டீசல் காரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

பிரச்னை
கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அந்த காரை வாங்கியிருக்கிறார். அந்த கார் 33,000 கிலோமீட்டர் தூரம் ஓடிய நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் காரின் புகைப்போக்கியிலிருந்து அடர்த்தியான வெண்புகை அதிக அளவில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அருகிலிருந்த ஹோண்டா கார் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

தலை சுற்றல்
அங்குள்ள சர்வீஸ் சூப்பர்வைசர் எஞ்சினை இறக்கி ரிப்பேர் செய்ய வேண்டும். அதற்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை செலவாகும் என்று கூறியிருக்கின்றனர். அப்போது, இரண்டு ஆண்டுகள் அல்லது 40,000 கிமீ வாரண்டி இருப்பதை சஞ்சீவ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆரம்பம்
வாரண்டி காலத்தில் இருந்தாலும், இந்த செலவை ஏற்க வேண்டும் என்று சர்வீஸ் மையத்தில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஹோண்டா கால் சென்டரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அங்கிருந்து உருப்படியான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.

நொந்து போன சஞ்சீவ்
கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஹோண்டா சர்வீஸ் மையத்திலேயே கார் இருந்துள்ளது. ஹோண்டா கார் நிறுவனத்தின் உயரதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை.

பிரச்னைதான் என்ன?
இதுபோன்று புகை வருவதற்கு என்ன காரணம் என்று சஞ்சீவ் வினவியிருக்கிறார். அதற்கு, மழை நேரத்தில் கார் எஞ்சினில் தண்ணீர் புகுந்திருக்கலாம் என்று பதில் கிடைத்தது. அப்படியானால், மழை நேரத்தில் காரை ஓட்டக் கூடாதா என்றும் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் இல்லை.

ஒருவழியாக...
ஒருவழியாக கோர்ட்டஸி ஹோண்டா நிறுவனத்திடம் வைத்து சர்வீஸ் செய்துள்ளார். சர்வீஸுக்கு ரூ.60,000 கேட்டவர்கள், ரூ.37,749 பில்லை போட்டு தாளித்து காரை சரிசெய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து, காரை விற்பனை செய்ய திட்டமிட்டார்.

அங்கும் அதிர்ச்சி....
காரை விற்பனை செய்ய முயற்சித்தபோது, எஞ்சின் பழுதை காரணம் காட்டி ஒரு லட்ச ரூபாய் வரை தள்ளுபடி செய்து கேட்டுள்ளனர். இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த அவர், விரக்தியில் நூதன பிரச்சாரத்தை செய்தார்.

பிரச்சாரம்
ஹோண்டா அமேஸ் வேண்டாம் என்ற வாசகங்களை ஆங்கிலத்திலும், இந்தியிலும் கார் முழுவதும் எழுதி சாலையில் நிறுத்திவிட்டார். இதனை பார்த்த ஒருவர், அதனை படமெடுத்து, சமூக வலைதளங்களில் போட்டுவிட்டார். அந்த பதிவை 27,000 பேர் வரை பகிர்ந்துள்ளனர்.

அமேஸ் பிரச்னை
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா அமேஸ் டீசல் கார்களின் எஞ்சினில் பழுது இருப்பதாகவும், அதனை சரிசெய்து புதிய எஞ்சின் பொருத்த வேண்டும் என்றும் சஞ்சீவ் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை போன்றே, 200 வாடிக்கையாளர்கள் இந்த பிரச்னையில் சிக்கி இருப்பதாகவும், ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை இதற்கு செலவு பிடிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

போலி வாக்குறுதி
ஹோண்டா அமேஸ் காருக்கு வழங்கப்படும் வாரண்டியானது போலி வாக்குறுதி. எஞ்சின் பழுது செலவை இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்தோ அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்தோதான் ஹோண்டா பிடுங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மாருதிக்கு பாராட்டு
16 ஆண்டுகள் மாருதி கார்களை வைத்திருந்தேன். இதுவரை எந்தவொரு தொந்தரவும் இருந்ததில்லை. ஆனால், இந்த காரை வாங்கிக் கொண்டு நான் பட்ட பாடு இருக்கே, அப்பப்பப்பா... என்று பெருமூச்சு விடுகிறார்.

உஷார்
ஹோண்டா அமேஸ் காரிலிருந்து வெண்புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர், கொசு மருந்து அடிக்கும் வண்டியா என்று கேட்டதால், அந்த காரை மாற்றிவிட முடிவு செய்துவிட்டார். பின்னர், புதிய மாருதி அல்லது டொயோட்டா கார் வாங்கலாம் என்று சென்றவர், அங்கு வாரண்டிக்காக பத்திரத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறார். ஆனால், அதனை டீலர்கள் ஏற்கவில்லையாம். அவ்வளவு அனுபவபட்டுவிட்டார் சஞ்சீவ் குப்தா.

ஜாகுவார் காரை கழுதைகளை கட்டி இழுத்த குஜராத் தொழிலதிபர்!


Click it and Unblock the Notifications








