இந்த மனசு எத்தனை பேருக்கு வரும்!! ஃபெராரி காரை நேரில் பார்ப்பதே பலருக்கு கனவு - ஆனால் இந்த சிறுவனுக்கு...
இன்று கார் ஆர்வலர்களாக உள்ளவர்களில் பலர் சிறு வயதில் வாழ்க்கையில் ஒருமுறையாவது காரை ஓட்டி பார்க்க மாட்டோமா என ஏங்கியவர்களாகவே இருப்பர். இதனாலேயே சிறுவர், சிறுமியர் யாராவது தங்களது காரை ஆச்சரியமாக பார்த்தால் உடனே காருக்குள் அழைத்து ஓர் சின்ன ரவுண்ட் சென்றுவருவர்.
ஆனால் இத்தகைய மனம் அனைத்து கார் ஆர்வலர்களுக்கும் இருக்கும் என சொல்லிவிட முடியாது. வெகு சிலர் மட்டுமே அவ்வாறு நடந்து கொள்வர். இதனாலேயே அத்தகையர்கள் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக நமது செய்தித்தளத்தில் பார்த்துவிடுகிறோம். இந்த வரிசையில், சித்தார்த் சதுர்வேதி என்பவர் தனது ஃபெராரி காரை ஆச்சரியமாக பார்த்த சிறுவனை காரில் ஏற்றிக்கொண்டு ஓர் சின்ன பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், இதுகுறித்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்தார்த் சதுர்வேதி பதிவிட்டுள்ளார். பாய்ஸ் அண்ட் மெக்கானிக்ஸ் இந்தியா என்ற லக்சரி கார்களை செகண்ட் ஹேண்டில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் நிறுவனரான சித்தார்த் சதுர்வேதியிடம் ஃபெராரி 488 என்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் உள்ளது. சாடின் பிளாக் என்ற கவர்ச்சிக்கரமான நிறத்தில் உள்ள இந்த ஃபெராரி காரை யார் நேரில் பார்த்தாலும் மயங்கிவிடுவர், இதில் இந்த சிறுவன் மட்டும் என்ன விதிவிலக்கா?
வீடியோவின் துவக்கத்தில், தனது ஃபெராரி 488 காரை சிறுவன் ஒருவன் அதிசயமாக சுற்றி சுற்றி பார்ப்பதை தூரத்தில் இருந்து சித்தார்த் சதுர்வேதி பார்க்கிறார். பின்னர் அந்த சிறுவன் உடன் இவர் உரையாடும் நிகழ்வுகள் எதுவும் வீடியோவில் காட்டப்படவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகிறது. அதாவது, அந்த சிறுவன் டிரைவர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருக்க, சித்தார்த் காரை இயக்கியுள்ளார்.
பார்ப்போரை மனம் நெகிழ வைக்கும் இந்த வீடியோவை இதுவரையில் 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுக்களித்துள்ளனர், 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். வீடியோவில் காட்சி தருவது ஃபெராரி 488 ஜிடிபி கார் ஆகும். இத்தாலியன் ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டான ஃபெராரி இந்தியாவில் இந்த 488 காரை 2016இல் அறிமுகப்படுத்தியது.
458 இத்தாலியா காரின் அடுத்த தலைமுறை மாடலாக வெளிவந்த 488 ஜிடிபி கார் ஃபெராரி நிறுவனத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்ஜினை நடுவில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஃபெராரி வி8 சூப்பர்கார்களுள் ஒன்றாக 488 ஜிடிபி விளங்குகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 3.9 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 660 எச்பி மற்றும் 760 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் உதவியுடன் இந்த ஃபெராரி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்தியாவில் தற்சமயம் ஃபெராரி 488 ஜிடிபி கார் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியர்களுக்கு ஃபெராரி கார் எப்போதுமே ஆச்சிரியமளிக்கக்கூடியதே. ஏனெனில் நம் நாட்டில் ஃபெராரி வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவே. ஆதலால் இந்த சிறுவன் ஃபெராரி 488 காரை பார்த்து மிரண்டு போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆச்சரியம் என்னவென்றால், அந்த சிறுவனை தனது ஃபெராரி காரில் சித்தார்த் அழைத்து சென்றதுதான். லக்சரி கார்களை தினந்தோறும் பார்த்து, பார்த்து இவ்வாறு சித்தார்த் பக்குவப்பட்டு இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








