போலீஸ் முன்பு ஆட்டம் போட்ட ஃபெராரி கார் உரிமையாளர்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? வைரல் வீடியோ
காவல் துறையினர் முன்பாக ஸ்டண்ட் செய்ய முயன்ற ஃபெராரி கார் உரிமையாளர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு காலத்தில் சூப்பர் கார்களை பார்ப்பது என்பது மிக அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது. இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் ஒரு சூப்பர் காராவது உள்ளது என்ற நிலைமை கிட்டத்தட்ட வந்து விட்டது.

இதற்கு திரைப்படங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. திரைப்படங்களில் கதாநாயகர்கள் சூப்பர் கார்களை பயன்படுத்துவது பார்த்து, வசதி படைத்தவர்கள் அவற்றை வாங்குகின்றனர். ஆனால் மிக சக்தி வாய்ந்த சூப்பர் கார்களை, உரிய முன் எச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் இல்லாமல் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது? என்பதை ஒரு சில உரிமையாளர்கள் உணர்வதில்லை.

பொது சாலைகளில் மிகவும் அலட்சியமாக அவர்கள் ஸ்டண்ட்களை செய்கின்றனர். இந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் ஃபெராரி சூப்பர் காரின் உரிமையாளர் ஒருவர் ஸ்டண்ட்டில் ஈடுபட்டார். அதுவும் காவல் துறையினர் முன்பாக! இந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கான்பூர் நகரின் கங்கா பராஜ் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சரத் கெம்கர் என்பவர் ஃபெராரி கலிபோர்னியா ஜிடி (Ferrari California GT) காரில், ஸ்டண்ட்களை செய்ய முயன்றார். இவர் குட்கா நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த சாலையில், இந்த காரில் அவர் வட்டமடித்து ஸ்டண்ட் செய்ய முயன்றார்.

இந்த காட்சியை கண்ட பாதசாரிகளும், மற்ற வாகன ஓட்டிகளும் அதனை காணொளியாக பதிவு செய்ய தொடங்கினர். இந்த காணொளியில் காவல் துறையினர் நின்று கொண்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஃபெராரி காரின் உரிமையாளர், காவல் துறையினர் முன்பாக போக்குவரத்து விதிகளை மதிக்காமல் நடந்து கொண்டார். ஆனால் அந்த சமயத்தில் அவரை காவல் துறை பிடிக்கவில்லை.

இந்த சம்பவத்தின் காணொளி இணையத்தில் வேகமாக பரவ தொடங்கிய பின்னர்தான் காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஃபெராரி காரின் பதிவு தகவல்களை தெரிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆராய்ந்தனர். அதன்பின்பு காரின் உரிமையாளரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும் காரும் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. விதியை மீறிய நபரின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், சாலைகளை அடைத்தல் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ், இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் காரை ஓட்டிய சரத் கெம்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. பொது சாலைகளில் அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்த மற்றும் அதிக வேகத்தில் பயணம் செய்த சூப்பர் கார்கள் மற்றும் செயல்திறன் மிக்க இரு சக்கர வாகனங்களை காவல் துறையினர் ஏற்கனவே பல்வேறு முறை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இச்சம்பவம் காவல் துறையினர் முன்பாக நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications