3 கோடி ரூபா கார் ஓனரின் மானத்தை வாங்கிய மாட்டு வண்டி! வீடியோ வெளிய வந்து ஊரே கை கொட்டி சிரிக்குது!
கடற்கரைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இடங்களில் ஒன்றாக கடற்கரைகளை குறிப்பிடலாம். ஆனால் கடற்கரைகளை விரும்ப கூடிய கார் ஆர்வலர்கள் ஒரு சிலர், கொஞ்சம் மேலே போய், மிகவும் ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு கொண்டுள்ளனர். கடற்கரைகளில் கார்களை ஓட்டுவதை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். கடற்கரை மணலில் கார்களை ஓட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சில சமயங்களில் கடற்கரை மணலில் கார்கள் சிக்கி கொள்ளலாம். எனவே பெரும்பாலான கடற்கரைகளில் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆபத்தை உணராமல் ஒரு சிலர் தொடர்ந்து கடற்கரை மணலில் கார் ஓட்டி கொண்டேதான் உள்ளனர். எவ்வளவு செயல்திறன் மிக்க கார் என்றாலும் கூட, கடற்கரை மணலில் சிக்கி கொண்டால் மீட்பது கடினம் என்பதை அவர்கள் கொஞ்சம் கூட உணர்வது கிடையாது.

கடந்த காலங்களில் கடற்கரை மணலில் சிக்கி கொண்ட மிகவும் விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க கார்களின் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்துள்ளோம். அந்த கார்களை எல்லாம் ஜேசிபி (JCB) உள்ளிட்ட மற்ற வாகனங்களை கொண்டு மீட்பார்கள். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மிகவும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆம், கடற்கரை மணலில் சிக்கி கொண்ட மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை, சாதாரண மாட்டு வண்டி ஒன்று மீட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மிகவும் விலை உயர்ந்த ஃபெராரி கலிஃபோர்னியா (Ferrari California) கார் ஒன்று, கடற்கரை மணலில் சிக்கி கொண்டதை நம்மால் பார்க்க முடிகிறது. ஃபெராரி நிறுவனத்தின் கார்கள் எவ்வளவு செயல்திறன் மிக்கவை என்பதை யாருக்கும் தனியாக சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை.
அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் காருக்கே இந்த நிலைமை என்றால், கடற்கரை மணலில் கார்களை இயக்குவது எவ்வளவு ஆபத்தானது? என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த சூழலில் ஃபெராரி கலிஃபோர்னியா காரில் இருந்தவர்களும், அந்த கடற்கரையில் உலாவி கொண்டிருந்தவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும், மணலில் சிக்கி கொண்ட காரை மீட்க முடியவில்லை.
இறுதியாக ஃபெராரி கலிஃபோர்னியா காரை மீட்கும் பணியில் மாட்டு வண்டி ஒன்று ஈடுபடுத்தப்பட்டது. ஃபெராரி கலிஃபோர்னியா காரின் முன் பகுதியில் கயிறு ஒன்றை கட்டி, அதை மாட்டு வண்டி உடன் இணைத்து விட்டனர். மாட்டு வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகள் பலம் கொண்டு இழுக்க, ஒரு வழியாக ஃபெராரி கலிஃபோர்னியா கார் மணலில் இருந்து மீண்டது.
மாட்டு வண்டி உதவியுடன், ஃபெராரி கலிஃபோர்னியா கார் மீட்கப்பட்ட காரணத்தால், இந்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் பகுதியில் உள்ள ரேவ்தண்டா கடற்கரையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கடற்கரை மணலில் சிக்கி கொண்ட ஃபெராரி கலிஃபோர்னியா காரின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கடற்கரை மணலில் ஏன் கார்களை இயக்க கூடாது? என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எனவே இனி மேலாவது, கடற்கரை மணலில் கார்களை இயக்குவதை வாகன உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். இதையும் மீறி கடற்கரை மணலில் 'ஸ்டண்ட்' செய்ய கிளம்பினால், தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி கொள்வதை தவிர்க்க முடியாது.


Click it and Unblock the Notifications








