மருத்துவ பணியாளர்களுக்காக வீடுகளில் தயாராகும் ஆயுதம்... விடுமுறையை வீணாக்காமல் மக்கள் அதிரடி...
விடுமுறையை வீணாக்காத மக்கள், மருத்துவ பணியாளர்களுக்காக வீடுகளிலேயே ஆயுதத்தை தயாரித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 25,044 பேரின் உயிரை கோவிட்-19 பறித்துள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதேபோல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து கொண்டுள்ளது.

தற்போது வரை உலகம் முழுவதும் 5,52,635 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,28,706 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பதுதான் ஆறுதல் அளிக்கும் ஒரே ஒரு செய்தியாக உள்ளது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது.

குறிப்பாக வென்டிலேட்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. கோவிட்-19 வைரஸ் சுவாச மண்டலத்தை தாக்குவதால், வென்டிலேட்டர்கள் இன்றியமையாதவையாக உள்ளன. இதற்காக ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் பல்வேறு நாடுகளின் அரசுகளும் உதவி கேட்டுள்ளன. நிலைமை விபரீதமாகி கொண்டுள்ளதால், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உதவி செய்ய முன்வந்துள்ளன.

அமெரிக்காவில், ஃபோர்டு, டெஸ்லா மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபடவுள்ளன. இந்தியாவில் வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபடவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தசூழலில்தான் மஹிந்திரா உதவ முன்வந்துள்ளது.

மஹிந்திரா இன்ஜினியர்கள் வெறும் 48 மணி நேரத்திலேயே முதல் வென்டிலேட்டரின் புரோட்டோடைப்பை உருவாக்கி அசத்தியுள்ளனர். இதன் விலை வெறும் 7,500 ரூபாய்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிநவீன இயந்திரங்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது வாகனங்களின் விற்பனை சரிவால், ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட சூழலில் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த உதவி மருத்துவ பணியாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மற்ற கார் நிறுவனங்களை போலவே ரெனால்ட் நிறுவனமும் தனது தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

எனவே ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் வெறுமனே பொழுதை கழிக்க விரும்பாத ரெனால்ட் நிறுவன ஊழியர்கள், நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட சூப்பரான வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த வழியின் மூலம், கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் அவர்கள் உதவி செய்கின்றனர்.

ஆம், அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து மெடிக்கல் வைசர்களை (Medical Visors) தயாரித்து வருகின்றனர். சுகாதார பணியாளர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். ஸ்பெயினில் உள்ள ரெனால்ட் ஊழியர்கள்தான் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று.

எனவே இது சிறிய உதவி என்றாலும், அவர்களுக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த பங்களிப்பு பாராட்டுக்குரிய ஒன்று. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஆனால் போர் அடிக்கிறது எனவும், பொழுதுபோகவில்லை எனவும் சிலர் சமூக வலை தளங்களில் புலம்பி வருகின்றனர். எனவே பொழுது போகாமல் மேரி கோல்டு பிஸ்கட்டில் எத்தனை ஓட்டை இருக்கிறது? என எண்ணி கொண்டிருப்பவர்கள் வாய்ப்பு இருந்தால், ரெனால்ட் ஊழியர்களை போன்று உதவி செய்ய முன்வரலாம்.


Click it and Unblock the Notifications








