மாருதி 800... முதல் காரின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர்... யார்னு தெரியுமா?
பிரபல திரைப்பட இயக்குனர் ஒருவர் தனது முதல் காரின் நினைவுகளை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களை பொறுத்தவரை விலை உயர்ந்த கார்கள் எல்லாம் சர்வ சாதாரணம். ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் பயணம் செய்வதை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். எனவே இத்தகைய லக்ஸரி கார்களை வாங்கி குவிப்பதை அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால் திரைத்துறையை சேர்ந்த பலரின் முதல் கார் மிகவும் சாதாரணமான மாடலாகதான் இருக்கும். வசதி வாய்ப்புகள் வந்த பிறகே அவர்களின் நாட்டம் விலை உயர்ந்த சொகுசு கார்களின் பக்கம் திரும்பியிருக்கும். ஒரு சிலர் தங்களது முதல் காரை மறந்து விட்டாலும், பெரும்பாலானோர் அதை மறப்பதில்லை. முதல் காரை பொக்கிஷம் போல பொத்தி பொத்தி பாதுகாக்கின்றனர்.

ஒரு சிலர் தங்களது முதல் காரை விற்பனை செய்ய நேரிட்டிருந்தாலும் கூட, அதன் நினைவுகளை எப்போதும் தாங்கி நிற்கின்றனர். இம்தியாஸ் அலியும் (Imtiaz Ali) அவர்களில் ஒருவர். பாலிவுட் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவராக இம்தியாஸ் அலி திகழ்கிறார். இவர் தற்போது தனது முதல் கார் பற்றிய நினைவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியர்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் மாருதி 800தான் (Maruti 800) இம்தியாஸ் அலியின் முதல் கார். இம்தியாஸ் அலிக்கு மட்டுமல்ல. நம்மில் பெரும்பாலானோருக்கும் கூட மாருதி 800 மாடல்தான் அனேகமாக முதல் காராக இருந்திருக்கும் (உங்களது முதல் கார் மாருதி 800 ஆக இருந்தால், அது பற்றிய நினைவுகளை கீழே இருக்கும் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்).

டைரக்டர் இம்தியாஸ் அலி தனது முதல் காரான மாருதி 800 மாடலின் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மாருதி 800 காரில் இம்தியாஸ் அலி கோவா டிரிப் சென்று கொண்டிருந்த சமயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இம்தியாஸ் அலியே கூறியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் இம்தியாஸ் அலி கூறியிருப்பது பின்வருமாறு:

''எனது முதல் கார். அதன் முதல் நெடுஞ்சாலை பயணம் - கோவாவிற்கு'' என இம்தியாஸ் அலி கூறியுள்ளார். கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பழைய நினைவுகளை அசைபோட்டு இந்த தகவலை இம்தியாஸ் பகிர்ந்துள்ளார். இயக்குனர் இம்தியாஸ் அலியின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில், மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்திய கார்களில் மாருதி 800 முதன்மையான இடத்தை பிடிக்கிறது. இந்தியர்களால் இரண்டு கார்களை என்றுமே மறக்க முடியாது. ஒன்று ஹிந்துஸ்தான் அம்பாஸிடர். மற்றொன்று மாருதி 800. இன்று மாருதி சுஸுகி கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டாலும் கூட, மக்கள் மனதில் இருந்து அதன் நினைவுகள் அகலாது.

மாருதி 800 காரின் உற்பத்தி கடந்த 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதல் கடந்த 2014ம் ஆண்டு வரை மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது 31 ஆண்டு காலம் மாருதி 800 கார் உற்பத்தியில் இருந்தது. இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்து கார்களில் ஒன்று என்ற பெருமையை மாருதி 800 கார் பெறுகிறது.

31 ஆண்டு கால பயணத்தில், 26 லட்சத்திற்கும் அதிகமான மாருதி 800 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. மாருதி 800 காரை இந்திய மக்கள் எவ்வளவு நேசித்தனர்? என்பதற்கு இதுவே சாட்சி. இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் அடைய மாருதி 800 காரும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று.

அடக்கமான டிசைன், நல்ல மைலேஜ் மற்றும் மாருதி நிறுவனத்தால் செய்யப்பட்ட சரியான விலை நிர்ணயம் ஆகியவை மாருதி 800 காரின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தன. 1990கள் மற்றும் 2000ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த மாருதி 800 காரின் உற்பத்தி கடந்த 2014ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications








