அதிர வைக்கும் புதிய விதி! வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம்! எவ்வளவு தெரியுமா?
வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசுபவர்களுக்கும் இனி அபராதம் விதிக்கப்படவுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை பொறுத்தவரை செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது சட்ட விரோதமானது. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த விதிமுறையை மீறி, செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இதன் காரணமாக தினமும் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் போலீசாரின் அபராதங்களில் இருந்து தப்பிப்பதற்காக, ஒரு சிலர் வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி விட்டு செல்போனில் பேசுகின்றனர்.

ஆனால் இனி அதையும் அவர்களால் செய்ய முடியாது. ஆம், உண்மைதான். சாலையோரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசுபவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படவுள்ளது. செல்போனில் பேச வேண்டும் என்பதற்காக வாகனங்களை சாலையோரமாக நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்கு சண்டிகர் போலீசார் இனிமேல் அபராதம் விதிக்கவுள்ளனர்.

அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் இந்த அதிரடி உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த குற்றத்தை முதல் முறை செய்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக செய்பவர்களுக்கான அபராத தொகை 1,000 ரூபாயாக உயர்ந்து விடும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சண்டிகர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''பின்னால் வரும் வாகனங்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு சிலர் திடீர் திடீரென வாகனங்களை நிறுத்துகின்றனர். எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல், வாகனங்களை திடீரென நிறுத்துவதால் விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உண்டாகும். இதுதவிர சாலையோரமாக வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் வேறு ஏற்படுகிறது. எனவேதான் இந்த விதிமுறையை கொண்டு வர உள்ளோம். ஆரம்பத்தில் மிகவும் பிஸியான மூன்று முக்கிய சாலைகளில் இந்த விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்படும்.

இதில், தக்ஸின் மார்க், மத்திய மார்க் மற்றும் உத்யோக் மார்க் ஆகியவை அடங்கும். இந்த சாலைகளில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்துக்களில் நிறைய பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நடப்பாண்டில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம்.

இதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மிக கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரும்'' என்றனர். இருந்தபோதும் அபராதங்களை விதிக்க தொடங்குவதற்கு முன்னதாக, வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதில், செல்போனில் பேசுவதற்காக வாகனங்களை திடீர் திடீரென நிறுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன? என்பதை வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எடுத்துரைக்க இருக்கின்றனர். எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், வாகனங்களை திடீரென நிறுத்தும் நபர்களை உண்மையில் நம்மால் அடிக்கடி பார்க்க முடிகிறது.

இது போன்ற நபர்களால் குழப்பம் ஏற்படுவதும் உண்மைதான். எனினும் மெயின் ரோடுகளில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகளுக்குதான் இந்த அபராதங்கள் விதிக்கப்படும் என்பதை சண்டிகர் காவல் துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் மூன்று முக்கியமான சாலைகளில் மட்டும் இந்த விதிமுறை பரிசோதனை முயற்சியாக அமலுக்கு வரவுள்ளது.

அதன்பின்பு மற்ற முக்கியமான சாலைகளிலும் இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மற்ற அனைத்து போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து விதிமுறை மீறல்களே மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








