அபராதம் விதித்ததால் பழிக்கு பழி... கோபக்கார மனிதர் செய்த எக்குதப்பான காரியத்தால் ஆடிப்போன காவல் துறை...
அபராதம் விதித்த காரணத்திற்காக, மின் வாரிய ஊழியர் ஒருவர் காவல் துறையினரை பழிக்கு பழி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காவல் நிலையங்கள் மற்றும் டிராபிக் சிக்னலுக்கு மின் வினியோகத்தை துண்டித்த காரணத்திற்காக, தெலங்கானா மாநில தெற்கு மின் வினியோக நிறுவனத்தின் ஊழியர் ரமேஷ் என்பவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். காவல் துறையினர் அபராத ரசீது வழங்கியதால் எரிச்சல் அடைந்த ரமேஷ், 2 காவல் நிலையங்கள் மற்றும் டிராபிக் சிக்னலுக்கு மின் வினியோகத்தை துண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு சைபராபாத் காவல் துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர். ரமேஷின் பைக்கை சிறுவன் ஒருவன் ஓட்டியுள்ளான். உரிய வயதை எட்டாத சிறார்கள் பைக் ஓட்டுவது விதிமீறல் என்பதால், போக்குவரத்து காவல் துறையினர் அபராத ரசீது வழங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து காவல் துறையினர் மீது ரமேசுக்கு மன கசப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அபராத ரசீது வழங்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எனினும் விதிமுறை மீறலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, போக்குவரத்து காவல் துறையினர் அபராத ரசீதை வழங்கியுள்ளனர்.

இதன்பின் ரமேஷ் அங்கிருந்து சென்று விட்டார். எனினும் இரவு நேரத்தில் காவல் நிலையங்களுக்கு மின் வினியோகத்தை துண்டித்து விடுவது என அவர் முடிவு செய்தார். இதன்படி ஜூடிமெட்லா போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு அவர் மின்சாரத்தை துண்டித்து விட்டார். ஆனால் அத்துடன் அவர் நின்று விடவில்லை.

போக்குவரத்து காவல் துறையினருக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்த அவர் முடிவு செய்தார். இதன்படி தனது பைக்கை போக்குவரத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்திய அதே இடத்திற்கு சென்ற ரமேஷ், அங்கிருந்த டிராபிக் சிக்னலுக்கும் மின் வினியோகத்தை துண்டித்தார். இதன் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக டிராபிக் சிக்னல் செயல்படவில்லை.

ஆனால் இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு மின்சார துறையை, காவல் துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். மின்சார துறை அதிகாரிகள் தலையிட்டதின் பேரில், ஒரு சில மணி நேரங்களில் காவல் நிலையங்களுக்கு மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் போக்குவரத்து சிக்னலும் மீண்டும் செயல்பட தொடங்கியது.

ஆரம்பத்தில் இதனை யார் செய்தது? என்பது தெரியாமல் இருந்தது. எனினும் விசாரணையின் முடிவில் ரமேஷை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின் ரமேஷை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த 2019ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்திலும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலை கவசம் அணியவில்லை என்ற காரணத்திற்காக மின் வாரிய லைன்மேன் ஒருவருக்கு காவல் துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதனால் கோபமடைந்த லைன்மேன் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பை துண்டித்தார். ஆனால் அந்த லைன்மேன் பணியாற்றி வந்த மின் வாரியமோ, கடந்த 2016ம் ஆண்டில் இருந்து மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால்தான் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது என கூறியது. அந்த சமயத்தில் இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








