போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா?
வாகன ஓட்டி ஒருவர் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவில் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு செயல்படுத்தியது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஒரு முயற்சி என மத்திய அரசு இதனை கூறியுள்ளது. அபராத தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், இனி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பார்கள் எனவும், இதன் மூலமாக இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.

இதற்கு ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அபராத தொகைகளை மிகவும் கடுமையாக உயர்த்தியிருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வாறு ஆதரவு, எதிர்ப்பு என இரு வகையான விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய அபராத தொகைகளை வாகன ஓட்டிகளிடம் போலீசார் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே சில இடங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டி ஒருவர் பைக்கை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்தினார். இந்த சூழலில் வாகன ஓட்டி ஒருவர் தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பூர்னியா பகுதியில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்யம் சின்ஹா என்பவர் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே போலீசார் அவரை நிறுத்தி அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சத்யம் சின்ஹா தன் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி கொண்டார். பின்னர் தீக்குச்சி மூலமாக தீ பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் தீ பற்ற வைப்பதற்கு முன்னதாக போலீசார் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து பூர்னியா போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ் குமார் கூறுகையில், ''சத்யம் சின்ஹா தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டார். தீ பற்ற வைக்க முயன்ற நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனவே அதற்கு ஏற்ப போலீசார் அபராதம் விதித்தனர்'' என்றார். சத்யம் சின்ஹா அபராத தொகையை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் ஹெல்மெட் அணிய மறந்து விட்டதாகவும், தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என போலீசாரிடம் கேட்டு கொண்டதாகவும் சத்யம் சின்ஹா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''என்னிடம் பணம் இல்லை. தொடர்ந்து நான் பல முறை கேட்டு கொண்ட பிறகும், போலீசார் எனது வார்த்தைகளை கேட்கவில்லை.

எனக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டனர். இதன் காரணமாகவே நான் தற்கொலைக்கு முயன்றேன்'' என்றார். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்தான் சத்யம் சின்ஹாவிற்கு போலீசார் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications








