அபராதம் எல்லாம் கிடையாது, அதிரடியா எஃப்.ஐ.ஆர் தான்... கருணையே காட்டாத கர்நாடக அரசு!! நம்ம ஊரில் எப்போது?
சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது அதிவேக பயணம் என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என சட்டம் கூறுகிறது. ஓவர்டேக் செய்யும்போது மட்டுமே 120kmph வேகத்தில் செல்ல வேண்டும். மற்றப்படி பார்த்தால், 110kmph தான் இந்தியாவில் எந்தவொரு சாலையிலும் அதிகப்பட்ச வேகம் ஆகும். ஆனால், அதனை தாண்டி 150kmph, 200kmph வேகத்தில் கூட வாகனங்கள் ஓட்டப்படுவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அத்தகைய வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு போலீசார் அபாரதங்களை விதிக்கின்றனர் என்றாலும், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை குறைந்தப்பாடில்லை.
இந்த நிலையில், அதிவேக பயணத்தை தடுக்கும் விதமாக கர்நாடக மாநில அரசு ஓர் அதிரடியான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது, மணிக்கு 130கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குபதிவு செய்யப்படும் என்பதாகும். அதிவேகமான மற்றும் ஆக்ரோஷமான பயணத்தை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை கையில் எடுப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, 130kmph வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாத சிறைத்தண்டனை வரையில் வழங்கப்படுவதற்கு மாநில அரசின் சட்டம் அனுமதிக்கும். ஏற்கக்கூடிய காரணத்தை தெரிவித்தால் ரூ.1,000 அபராதம் மட்டும் விதிக்கப்படலாம். அல்லது, சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் இரண்டும் கூட தண்டனையாக வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இதுகுறித்து பெங்களூர் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை துணை டிஜிபி அலோக் குமார் கருத்து தெரிவிக்கையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 90% அதிவேக பயணமே காரணமாக உள்ளதாகவும், பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 வாகனங்கள் 130kmph வேகத்திற்கு மேல் செல்வதாகவும், அதில் மாநில அரசு பேருந்துகளும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு பேருந்துகள் கூட நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி இயக்கப்படுவது தெரியவந்ததை அடுத்தே வழக்குபதிவு என்கிற அதிரடியான நடவடிக்கையில் கர்நாடக அரசு இறங்கி உள்ளது. இந்த புதிய சட்டம் கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, வாகனங்களின் வேகத்தை சரிபார்த்து (குறிப்பாக நெடுஞ்சாலைகளில்), அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கர்நாடகாவின் அனைத்து மாவட்ட போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதில் சமீப மாதங்களாகவே கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது.
சமீபத்தில் கூட, கூடுதலாக எல்இடி விளக்குகளை பொருத்தி வாகனம் ஓட்டியவர்கள் மீதும், ஒன்-வே விதிமுறையை மீறியவர்கள் மீதும் கர்நாடகாவில் அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து, 130kmph வேகத்திற்கு மேல் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்குபதிவு செய்யப்படும் என்கிற அதிரடியான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, கர்நாடகாவில் போக்குவரத்து விதிமுறைகளில் போலீசார் தீவிரமாக இருப்பார்கள் என்பது தெரிந்த விஷயமே. பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் 2-வீலர் ஓட்டிகளை போலீசார் விரட்டி, விரட்டி அபராதம் விதிக்கின்றனர். ஆனால் சமீப காலமாக, ஒரு கட்டத்திற்கு மேல் சென்று வழக்குபதிவு என்கிற அதிரடியான நடவடிக்கையில் கர்நாடக அரசு ஈடுப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








