பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன ரஃபேல் போர் விமானங்கள்
எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரான்ஸிலிருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் விமானப் படை பலத்தை வெகுவாக அதிகரிக்க இருக்கும் இந்த விமானங்களின் பயணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு இறுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைக்கும் நிகழ்வு சம்பிரதாய முறையில் பிரான்ஸ் நாட்டில் நடந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பிரச்னை காரணமாக, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலால் ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இந்த சூழலை மனதில் வைத்து, ரஃபேல் போர் விமானங்களை விரைந்து வழங்குமாறு பிரான்ஸ் நாட்டிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதையடுத்து, உடனடியாக முதல் தொகுப்பில் 5 ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் நாட்டு அரசு முடிவு செய்தது.

அதன்படி, முதல் தொகுப்பில் வழங்கப்பட உள்ள 5 ரஃபேல் போர் விமானங்களும் இன்று காலை பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மெரிக்னாக் விமானப் படை தளத்தில் இருந்து இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டன. ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட இருந்தபோது, பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவித் அஷ்ரப் நேரில் சென்று, விமானிகளை சந்தித்து மகிழ்ச்சியும், பாதுகாப்பான பயணத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதையடுத்து, 5 ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா நோக்கி புறப்பட்டன. இந்த 5 விமானங்களையும் இந்திய விமானப் படை விமானிகளே இயக்குகின்றனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே பிரான்ஸ் நாட்டில் வைத்து முழுமையாக பயிற்சி பெற்றுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 7,000 கிமீ தூரத்திற்கு ரஃபேல் போர் விமானங்கள் பயணிக்கிறது. இதனிடையே, ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி அருகே உள்ள அல் தாஃபாரா விமானப் படை தளத்தில் நாளை இடைநிறுத்தம் செய்யப்படும்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து அல் தாஃபாரா இடையிலான பயணத்தின்போது பிரான்ஸ் நாட்டு விமானப் படைக்கு சொந்தமான டேங்கர் விமானம் மூலமாக 5 ரஃபேல் போர் விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்பப்படும். இதைத்தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்தில் இருந்து புறப்பட்டு ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்திற்கு நாளை மறுதினம் 5 ரஃபேல் போர் விமானங்களும் வந்து சேரும்.

ஐக்கிய அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு வரும்போது, இந்திய விமானப் படைக்கு சொந்தமான டேங்கர் விமானம் மூலமாக நடுவானில் ரஃபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும்.

இதனிடையே, அம்பாலா விமானப் படைத்தளத்திற்கு ரஃபேல் போர் விமானங்கள் வந்து இறங்கும்போது எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்று இந்திய விமானப் படை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மீடியாவுக்கு அனுமதியில்லை. ஆனால், ஆகஸ்ட் 20ந் தேதிக்கு பின்னர் ரஃபேல் போர் விமானங்களை முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்வு நடக்க இருக்கிறது. அப்போது, மீடியாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ரஃபேல் போர் விமானங்கள் போரில் ஈடுபடுத்துவதற்கான தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் ஆயுதங்கள் கொண்ட ஆயத்தமான நிலையிலேயே இந்தியாவிடம் வழங்கப்படுகிறது. எனவே, அடுத்த மாத இறுதியில் இந்திய விமானப் படை சேவையில் ஈடுபடுத்தப்படும். எல்லையில் சீனா பிரச்னை செய்து வரும் நிலையில், எல்லைப் பாதுகாப்பிற்கான பல முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ரஃபேல் போர் விமானங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ரஃபேல் போர் விமானத்தில் மெட்டியோர் மற்றும் ஸ்கால்ப் ஆகிய ஏவுகணைகளையும், அதிநவீன கண்காணிப்பு மற்றும் ரேடார் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால், மிக துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும். மேலும், இதன் வடிவமைப்பும், தொழில்நுட்ப அம்சங்களும் எதிரிகளின் ரேடார் கண்களில் எளிதாக சிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
Images Source: ANI


Click it and Unblock the Notifications








