நவ.10 முதல் டெல்லி- ஆக்ரா இடையில் அதிவேக ரயில் இயக்க திட்டம்
அடுத்த மாதம் 10ந் தேதி முதல் டெல்லி- ஆக்ரா இடையிலான வழித்தடத்தில் இந்தியாவின் முதல் அதிவேக ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் இந்த அதிவேக ரயிலுக்கான பிரத்யேக பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக, ரயில்பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் பிரமோத் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதல் அதிவேக ரயில்
மொத்தம் 14 பெட்டிகள் முதல் அதிவேக ரயிலுக்காக கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. அதில், 4 பெட்டிகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. மீதமுள்ள 10 பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

சொகுசான பெட்டிகள்
ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில் பெட்டிகளை மிகவும் சொகுசாக இருக்கும் வகையில், பிரத்யேக சஸ்பென்ஷன் அமைப்புடன் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அதிர்வுகளும் குறைவாக இருக்கும்.

பாதுகாப்பு வசதிகள்
ஆட்டோமேட்டிக் ஸ்லைடிங் கதவுகள், புகை மற்றும் தீயை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி கொண்டதாக இருக்கும். பயணிகளுக்கு தகவல்களை அளிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டிருக்கும். எலக்ட்ரோ நியூமாட்டிக் பிரேக்குகள், கேபினுக்குள் குறைவான சப்தம் மற்றும் அதிர்வுகள் இல்லாத பயணத்துக்கு ஏற்றவாறு தடுப்பு வசதிகள் கொண்டது.

அதிகபட்ச வேகம்
இந்த பிரத்யேக அதிவேக ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் ரூ.2.50 கோடி மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் ஒவ்வொரு இருக்கையின் பின்புறத்தில் டிவி திரை, எக்ஸிகியூட்டிவ் சேர் கார்களில் வைஃபை வசதி போன்றவை கொடுக்ப்பட்டிருக்கும்.

வேகம் அதிகரிக்க திட்டம்
குறிப்பிட்ட வழித்தடங்களில் முதற்கட்டமாக மணிக்கு 160கிமீ வேகம் வரை இயக்கி பார்க்கப்படும். சிக்னல் சிஸ்டம், தடுப்புகள் மற்றும் தண்டவாளங்களை மேம்படுத்திய பின்னர் மணிக்கு 200கிமீ வேகம் வரை இந்த ரயில்களை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்
கடந்த ஜூலை மாதம் டெல்லி- ஆக்ரா இடையில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்கி அதிவேக ரயில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், முறைப்படி பயணிகள் சேவை அடுத்த மாதம் 10ந் தேதி முதல் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200கிமீ வேகம் எப்போது?
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மணிக்கு 200கிமீ வேகத்தில் அதிவேக ரயில்களை இயக்க திட்டமிட்டிருப்பதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிகள் தயாரிப்பு
திட்டமிட்டப்படி, ரயில் பெட்டி தயாரிப்பு நிறைவடைந்தால், அடுத்த மாதம் 10ந் தேதி முதல் அதிவேக ரயில் சேவை துவங்கப்படும் என்று ரயில்வே துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








