சென்னை மாநகரின் முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை நாளை துவங்குகிறது!
சென்னையில் முதல்முறையாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. அது பற்றிய சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
முதல்முறையாக சென்னையில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூர் நகரங்களை தொடர்ந்து முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் இந்தியாவின் 4வது மாநகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைக்க இருக்கிறது.

திருமங்கலம்- நேருபூங்கா இடையிலான 8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் வழித்தடம் நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னையின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் குறித்து சில சிறப்புத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் கோயம்பேடு வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய சுரங்க வழித்தடத்தில் 7 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்கள் அனைத்தும் சென்னையின் மிக முக்கிய பகுதிகளை இணைப்பு அளிக்கும் வகையில் இருப்பது சிறப்பு.

இந்த புதிய ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், நேரு பூங்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 17 கிமீ தூரத்திற்கு இணைப்பு கிடைக்கும்.

மெட்ரோ ரயிலின் சாதாரண வகுப்பில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.50 வரையிலும், சிறப்பு வகுப்பில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.100 வரை கட்டணமாக இருக்கும்.

மேம்பால மெட்ரோ ரயில்களைவிட இந்த சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக பல கூடுதல் வசதிகளை பெற்றிருக்கின்றன. சுரங்க வழித்தடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் குளுகுளு வசதியும் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் ஸ்க்ரீன் கதவுகள் என்ற அதிநவீன பாதுகாப்பு தடுப்பு வசதி உள்ளன. இதன்மூலமாக, பிளாட்ஃபார்மிலிருந்து பயணிகள் ரயில் தண்டவாளத்திற்குள் செல்வதையும், விழுந்து விடுவதையும் தவிர்க்க முடியும்.

மின்னணு தகவல் பலகைகள், நவீன பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டால், பயணிகள் வெளியேறுவதற்கான அவசர வழிகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் மூலமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








