இந்த காரை தயாரிச்ச நிறுவனம் திவாலாகிடுச்சா? இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது!
அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான ஃபிஸ்கர் நிறுவனம் தற்போது திவாலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்திடம் இருந்து முதலீடு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முதலீடு வராததால் இந்நிறுவனம் திவாலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் திவாலானதற்கான காரணம் என்ன? இந்நிறுவனம் திவாலாகிய நிலையில் இனி இந்த நிறுவனத்தின் எதிர்காலம் என்ன என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
உலகம் முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தை என்பது பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களை கைவிட்டுவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். பெட்ரோல் டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருந்தாலும், அதன் பயன்பாட்டு செலவு குறைவு என்பதால் மக்கள் பலர் இந்த ரக வாகனங்களை விரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஃபிஸ்கர் என்ற நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆகிய நாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட ஓஷன் என்ற எஸ்யூவி கார் உலக அளவில் மிகப்பெரிய பெயர் பெற்றதாக இருக்கிறது. இந்நிலையில் இந்த ஃபிஸ்கர் நிறுவனம் தற்போது திவாலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவை சேர்ந்த புரோட்டீரா, லாட்ஜ்டவுன் மற்றும் எலெக்ட்ரிக் லாஸ்ட் மைல் சொல்யூஷன்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் திவாலான நிலையில் தற்போது இந்த ஃபிஸ்கர் நிறுவனமும் திவாலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தை பிரபல ஆட்டோமொபைல் வடிவமைப்பாளரான ஹென்றி ஃபிஸ்கர் என்பவர் தான் உருவாக்கினார்.

இவர் நேற்று அமெரிக்காவில் தனது ஃபிஸ்கர் நிறுவனம் திவாலாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது எலெக்ட்ரிக் வாகன துறையில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருப்பதாகவும், இந்த சிக்கல்கள் காரணமாக தனது நிறுவனம் திவாலாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிஸ்கர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆட்டோமொபைல் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதலீடு செய்வதாக பேச்சுவார்த்தை இருந்து வந்தது. இறுதிக்கட்டத்தில் அந்நிறுவனம் முதலீட்டை மறுத்துவிட்டது. அதன் காரணமாக பணம் இல்லாமல் கையிருப்பு பணம் கரைவதால் அமெரிக்க நாட்டு சட்டப்படி இந்த நிறுவனம் திவாலாகி உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஃபிஸ்கர் நிறுவனம் தன்னிடம் உள்ள சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்திடம் 500மில்லியன் அமெரிக்க டாலர் முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் அந்நிறுவனத்திற்கு 100மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கடன்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இதுபோக இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே முதலீடு செய்த வகையில் 200-999 கடன் வழங்கியவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் உள்ள ஆட்டோமொபைல் பாதுகாப்பு ஒழுங்கு ஆணையம் இது குறித்த விசாரணையை துவங்கி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 10,000 வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பியது. இந்த ஆண்டு வெறும் 4200 கார்களை மட்டுமே தயாரித்து அனுப்பியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்நிறுவனம் திவாலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் ஏற்கனவே தனது வாகன தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. மேலும் எதிர்கால வாகன தயாரிப்பு திட்டத்திற்கான முதலீடுகளை வழங்குவதிலும் காலதாமதம் செய்து வந்தது. இந்நிறுவனம் கூடிய சீக்கிரம் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து முதலீடு பெற்ற பிறகு, இதையெல்லாம் துவங்கலாம் என திட்டமிட்டு இருந்தது. இந்த திட்டம் தோல்வியில் முடிந்ததால் தற்போது இது நிரந்தரமாக மூடப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்நிறுவனத்தில் பணியாற்றிய 15 சதவீத தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி இருந்தது. தற்போது மற்ற தொழிலாளர்களின் கதி என்ன என்ற நிலைமை புரியாமல் இருக்கிறது. இது குறித்து அறிவிப்புகள் எதையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி அந்நிறுவனத்தின் சொத்துக்களை எல்லாம் விட்டு கடன்களை எல்லாம் தீர்க்க முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









