லாரி டிரைவர்களின் சோர்வினாலும் அதிக விபத்துகள் நடக்கின்றன - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!!
சமீபத்தில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் (என்ஆர்எஸ்சி) கூட்டத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் சாலை விபத்துகளுக்கு காரணங்களுள் ஒன்றாக இருக்கும் ஓட்டுநர் சோர்வை தவிர்க்கும் விதமாக லாரி ஓட்டுநர் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கமர்ஷியல் வாகனங்களில் ஓட்டுனர் தூங்குவதை கண்டறியும் சென்சார்களை நிலையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்க வேண்டிய கட்டாயத்தையும் ஹைலைட்டாக அமைச்சர் சுட்டிக்காடியுள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பதிவில், வணிக வாகனங்களில் கட்டாயம் வழங்க வேண்டிய அம்சங்களில் ஐரோப்பிய தரத்திலான ஓட்டுனரின் தூக்கத்தை கண்டறியும் சென்சார்களை சேர்க்கும் கொள்கையில் பணியாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஆர்எஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் கட்கரி, அனைத்து உறுப்பினர்களையும் சாலை பாதுகாப்பின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார். என்ஆர்எஸ்சி உறுப்பினர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றவும், அவர்களின் பரிந்துரைகளை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தவும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மிக பெரிய குழு சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த நடவடிக்கைகளின் மூலம் நிச்சயம் பல உயிர்கள் காப்பாற்றப்படும். மாவட்ட சாலை குழு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 2 மாதங்களுக்கு ஒருமுறை முதலமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சார்பில் இருந்து கடிதங்கள் வருமாம்.

இந்த கடிதங்கள் மூலமாகவே சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து அவர்களது அப்டேட்களை அமைச்சர் பெற முடியும். சாலை பாதுகாப்பு துறைகளில் செய்யப்பட்ட அனைத்து சாதனைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு மாத இதழ் வெளியிடப்பட உள்ளது. இதுவும் சமீபத்தில் நடைபெற்ற கவுன்சிலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய போக்குவரத்து அமைச்சகத்தால் புதிய என்ஆர்எஸ்சி கடந்த ஜூலை 28ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டம் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி நடத்தப்பட்டுள்ளது. இந்த கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமற்ற 13 கூட்டுறவு தனிப்பட்ட உறுப்பினர்களும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை நிதின் கட்கரியும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, தரமான சாலை மற்றும் அனைத்து வகையான வாகனங்களிலும் பாதுகாப்பு உபகரணங்களின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டிகளில் நாட்டில் விபத்து வழக்குகளின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் குறைக்க முடியும் என அவர் உறுதியளித்துள்ளார்.

சமீபத்தில் தான் கடந்த 2020ஆம் ஆண்டில் நடந்த விபத்துகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தன. கொரோனா வைரஸ் பரவலினால் கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் இருந்து பாதி மே மாதத்திற்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

இதனால் இந்த மாதங்களில் பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடியே காணப்பட்டன. இருப்பினும் கடந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1.20 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணித்துள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால், மற்ற மாதங்களை காட்டிலும் ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களின் போது தான் அதிக விபத்துகள் அரங்கேறியுள்ளன.

அரசாங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது நம் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 328 பேர் சாலை விபத்தினால் இறக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3.92 லட்ச பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவிக்கிறது.

இதற்கெல்லாம் சாலைகளின் தரம், வாகனங்களின் தரம் மட்டுமின்றி ஓட்டுனர்களின் அலட்சியமும் காரணமாகும். கடந்த ஆண்டில் நடந்த ஒட்டுமொத்த விபத்துகளில் ஹிட் அண்ட் ரன் வழக்குகள் மட்டும் 41 ஆயிரத்தை தாண்டி உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 112 வழக்குகள்.

இந்த விபத்துகளில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்தோரின் எண்ணிக்கை 85,920 ஆகும். 2018, 2019ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்திருந்தது. அஜாக்கிரதையாக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி கடந்த ஆண்டில் மட்டும் 52 பேர் பலியாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








