இந்தியாவில் திடீரென விமானங்களை திருப்பி விட முக்கிய காரணம் இதுதான்.. ஆதாரத்துடன் வெளியான தகவல்
இந்தியாவில் திடீரென விமானங்களை திருப்பி விடுவதற்கு முக்கிய காரணம் என்ன? என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு நகரத்தின் விமான நிலையத்திற்கு வரும் விமானம் வேறு நகரங்களுக்கு திடீரென திருப்பி விடப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களை திடீரென திருப்பி விடுவது அதிகரித்து கொண்டுள்ளது. மேற்கூறிய 4 மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களில், கடந்த 2018ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 796 விமானங்கள் பல்வேறு காரணங்களால் திடீரென திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த 796ல், மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை மட்டும் 510. அதாவது சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 நகரங்களின் விமான நிலையங்களில், மோசமான வானிலை என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் கடந்த 2018ம் ஆண்டு சுமார் 64 சதவீத விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

மோசமான வானிலை காரணமாக கடந்த 2018ம் ஆண்டில் படுமோசமாக பாதிக்கப்பட்ட விமான நிலையம் டெல்லிதான். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 213 விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு, மோசமான வானிலையால் வெறும் 111 விமானங்கள் மட்டுமே டெல்லி விமான நிலையத்தில் இருந்து திருப்பி விடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களில், கடந்த 2017ம் ஆண்டு பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்தமாக திருப்பி விடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 727 மட்டுமே. இந்த 727ல், மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 502தான்.

அதே நேரத்தில் ஏர் டிராபிக் நெரிசல் (Air Traffic Congestion) காரணமாக விமானங்களை திருப்பி விடும் நிகழ்வு பெங்களூர் மற்றும் மும்பை விமான நிலையங்களில், கடந்த 2018ம் ஆண்டு அதிகரித்துள்ளது. ஏர் டிராபிக் நெரிசல் காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து 37 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆனால் ஏர் டிராபிக் நெரிசலால், கடந்த 2017ம் ஆண்டு பெங்களூரில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை வெறும் ஏழு மட்டுமே. இந்த எண்ணிக்கையானது கடந்த 2016ல் வெறும் நான்காக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஏர் டிராபிக் நெரிசல் காரணமாக, மும்பை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு 41 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த 2017ம் ஆண்டில் 28ஆக மட்டுமே இருந்தது.

கடந்த 2016ம் ஆண்டில் அதை காட்டிலும் குறைவாக வெறும் 7 விமானங்கள் மட்டுமே ஏர் டிராபிக் நெரிசல் காரணமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து திருப்பி விடப்பட்டிருந்தன. சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சக தரவுகளின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களின் திறன் உயர்த்தப்பட்டுள்ளதா? என்பது சந்தேகமே. இதன் காரணமாக மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களுக்கு மேலே ஏர் டிராபிக் அதிகரித்து வருகிறது. ஏர் டிராபிக் நெரிசலாக இருப்பதால், விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க காத்திருக்க வேண்டியதாகிறது.

சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 4 மெட்ரோ நகரங்களின் விமான நிலையங்களில், ஏர் டிராபிக் நெரிசல் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் வெறும் 90 விமானங்கள் மட்டுமே திருப்பி விடப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2018ம் ஆண்டில், 134ஆக அதிகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications