செம ட்ரிக்... கையில் ஒரு பைசா காசு இல்லாமல் 1 கோடி ரூபாய் காரை வாங்கிய கில்லாடி... எப்படி தெரியுமா?
கையில் பணமே இல்லாமல் போர்ஷே 911 காரை வாங்குவதற்காக ஒருவர் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நம் அனைவருக்கும் நிச்சயமாக இருக்கும். குறிப்பாக விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக்க வேண்டும் என்பதை பலர் தங்களுடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளனர். இதற்காக தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சிறுக சிறுக சேமிக்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் சட்டத்திற்கு புறம்பான மாற்று வழிகளையும் யோசிப்பதுண்டு.

அப்படி யோசித்த ஒரு நபர் தற்போது காவல் துறையினரிடம் வசமாக சிக்கி கொண்டுள்ளார். சுவாரஸ்யமான இந்த சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. நீங்கள் அனைவரும் போர்ஷே (Porsche) கார் நிறுவனம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் போர்ஷே நிறுவனம், அதிக செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

இந்த நிறுவனத்தில் வெளிவரும் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று போர்ஷே 911 (Porsche 911). உலகம் முழுவதும் இந்த காருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த கேஸே வில்லியம் கெல்லி என்பவரும் அவர்களில் ஒருவர். 42 வயதாகும் கேஸே வில்லியம் கெல்லி, போர்ஷே 911 காரை வாங்குவதற்காக கையாண்ட யுக்தி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் உள்ள கணிணியில் அச்சடிக்கப்பட்ட போலி காசோலைகளை கொடுத்து, போர்ஷே 911 காரை கேஸே வில்லியம் கெல்லி வாங்கியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூலை 27ம் தேதி நடைபெற்றுள்ளது. ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள டெஸ்டின் என்னும் நகரில் செயல்பட்டு வரும் ஒரு போர்ஷே டீலர்ஷிப்பில் இந்த மோசடியை கேஸே வில்லியம் கெல்லி அரங்கேற்றியுள்ளார்.

அன்றைய தினம் டீலர்ஷிப்பிற்கு சென்ற கேஸே வில்லியம் கெல்லி போலி காசோலைகளை வழங்கி விட்டு, காரை ஓட்டி சென்று விட்டார். கேஸே வில்லியம் கெல்லியால் வழங்கப்பட்ட காசோலைகள் போலியானது என்பதை டீலர்ஷிப் உணரவில்லை. ஆனால் பின்னர்தான் இந்த விஷயம் அவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

கேஸே வில்லியம் கெல்லி 1,39,203.05 அமெரிக்க டாலர்களுக்கு போலி காசோலையை வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் இது 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். தனது வீட்டில் உள்ள கணிணியில் போலி காசோலைகளை அச்சடித்ததை கேஸே வில்லியம் கெல்லி காவல் துறையினரிடம் ஒப்பு கொண்டுள்ளார். கேஸே வில்லியம் கெல்லியை கைது செய்த பின், காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போலி காசோலை மூலம் போர்ஷே 911 காரை வாங்கியதற்கு மறுநாள், அதாவது கடந்த ஜூலை 28ம் தேதி, மீண்டும் போலி காசோலை மூலம் மூன்று ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை வாங்குவதற்கு கேஸே வில்லியம் கெல்லி முயன்றுள்ளார்.

இதற்காக 61,521 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போலி காசோலையை அவர் வழங்கியுள்ளார். இது இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை ஆகும். ஆனால் டீலர்ஷிப் ஊழியர்களை போல், அவர்கள் ஏமாறவில்லை. கேஸே வில்லியம் கெல்லி வழங்கியது போலியான காசோலைகள் என்பதை அவர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

வீட்டில் அச்சடிக்கப்பட்ட போலி காசோலைகள் மூலம் தொடர்ச்சியாக கைவரிசை காட்டிய கேஸே வில்லியம் கெல்லி பற்றிய செய்தி அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க காவல் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக டைம்ஸ்நவ்நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








