என்னங்க துபாய், அமெரிக்கா.. நம்ம இந்தியாலையே அடுத்த 7-8மாசத்துல பறக்கும் டாக்சி பறக்க போகுதாம்.. சொன்னது யார்?
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பறக்கும் டாக்சிகள் அடுத்த 7-8 மாதங்களில் இந்திய வான்வெளியில் வட்டமடிக்க இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை சொன்னவர் யார்? என்ன மாதிரியான பறக்கும் கார் இந்தியா வான்வெளியில் பறக்க இருக்கின்றது? மற்றும் அதில் என்ன மாதிரியான கட்டணம் வசூலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலகமே மிகுந்த ஆவலுடன் பறக்கும் டாக்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் அடுத்த 7-8 மாதங்களில் இந்தியாவில் பறக்கும் டாக்சிகள் பறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை இ-பிளேன் (ePlane) நிறுவனத்தின் நிறுவனரும், இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT-Madras), ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியருமான சத்ய சக்கரவர்த்தியே கூறி இருக்கின்றார்.

Source: News18 அவர், இந்தியாவின் முதல் பறக்கும் டாக்சியான இ200 (e200) உருவாக்கத்தில் அடைந்திருக்கும் முன்னேற்றம் பற்றிய தகவலையே சமீபத்தில் பகிர்ந்துக் கொண்டார். நியூஸ் 18 உடனான கலந்துரையாடலின் வாயிலாகவே இந்த தகவலை அவர் பகிர்ந்துக் கொண்டார். இதுதவிர, இ200-இன் வடிவமைப்பு, பாதுகாப்பு மற்றும் இதன் வருகையால் போக்குவரத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது, இந்தியாவின் நெரிசல் மிகுந்த வான்வெளி மற்றும் இறுக்கமான நகர்புறங்களுக்கு ஏற்றதாகவே தங்களுடைய பறக்கும் வாகனத்தை கச்சிதமாக வடிவமைத்து இருப்பதாக பேராசியர் கூறியிருக்கின்றார். இதுதவிர, குறுகிய இடைவெளியைக் கொண்ட இலக்குகளை பலமுறை கடப்பதற்கு ஏற்ற பேட்டரி பேக்கைக் கொண்ட பறக்கும் டாக்சியாகவும் இ200-ஐ தயார் செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.

இதுமாதிரியான இன்னும் பல முக்கிய பணிகளில் தங்களுடைய இ200 தற்போது முக்கியமான இலக்கை எட்டி இருப்பதையும் பேராசிரியர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். பலதரப்பட்ட தடைகளைத் தாண்டியே இந்த மைல்கல்லை அது எட்டியிருப்பதாகவும் சத்ய சக்ரவர்த்தி தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து, இந்த பறக்கும் வாகனத்தின் முன்மாதிரி மாடல் எப்போது அதன் டெஸ்ட் பயணத்தை தொடங்க இருக்கின்றது என்பதையும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.
அவர் தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் பறக்கும் டாக்சிகள் இந்திய வான்வெளியில் பறக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது வெற்றியடையும்பட்சத்தில் அடுத்தக்கட்டமாக பொதுப் பயன்பாட்டிற்காக இ200 கொண்டு வரும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், பயணிகளின் பாதுகாப்பிற்காக பறக்கும் இ-வாகனத்தில் பலதரப்பட்ட தொழில்நுட்பங்களை சேர்க்க இருப்பதாக இ-பிளேன் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது.

குறிப்பாக, அபாயங்களைக் குறைப்பதற்கான வடிவமைப்பையே இந்த வாகனத்தில் தான் வழங்கி இருப்பதாக பேராசிரியர் சத்ய சக்வரத்தி கூறியுள்ளார். அந்தவகையில், அவசர நிலை ஏற்பட்டால் மென்மையான தரையிறக்கத்தை இந்த விமானம் வழங்கும் என்றும், தேவைப்பட்டால் பாராசூட் அல்லது பலூன் போன்ற பாதுகாப்பு வளையத்தை அது வெளிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக பேராசிரியர் கூறி இருக்கின்றார்.
ஆகையால், சர்வதேச தரங்களுக்கு இணையானதாக இ200 இருக்கும் என்பது தெளிவாக தெரிகின்றது. இத்துடன், பயணத்தை பாதுகாப்பாக்க வேண்டும் என்கிற நோக்கில் வெர்ட்டிக்கலான ரோட்டார்கள் மற்றும் ஏரோடைனமிக் டிசைன் இ200-க்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற பலதரப்பட்ட திறன்களை இ200 எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி கொண்டிருந்தாலும், சில கவலையளிக்கும் விஷயங்களும் உள்ளன.
சமநிலையற்ற நிலபரப்பே அந்த கவலையளிக்கக் கூடிய விஷயம் ஆகும். இருப்பினும், இதனையும் தங்களுடைய பறக்கும் டாக்சி சமாளித்துவிடும் என பேராசிரியர் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றார். இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் தரை வழியாக ஓர் இடத்தை 1 மணி நேரத்தில் சென்றடைய முடியும் எனில் இ200 வாயிலாக அதே இடத்தை 10 முதல் 15 நிமிடங்களுக்குள் சென்றடைய முடியும் என கூறப்படுகின்றது.
இதுமாதிரியான பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த உலகம் பறக்கும் டாக்சியை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. இ200 தற்போது பயன்பாட்டில் உள்ள உபேர் போன்ற டாக்சிகளைக் காட்டிலும் இரு மடங்கு அதிக கட்டணத்திலேயே பயன்பாட்டிற்கு வரும் என்றும் பேராசிரியர் தெரிவித்து இருக்கின்றது. பிரீமியம் டிராவல் மற்றும் விரைவான டிராவலை இ200 பயணிகளுக்கு வழங்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகள் பல பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், துபாய் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் வெகு விரைவிலேயே பறக்கும் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவிலும் பறக்கும் டாக்சிகள் ஒரு சில ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன என்பது உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









