பெட்ரோலிய பொருள் வரி குறைப்பு விவகாரம்: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த மத்திய அரசு...
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி குறைப்புகுறித்த அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்ளுக்கும் இம்முறை கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், அதற்கான கோரிக்கையை பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் விடுத்திருந்தது.

இருப்பினும், இதில் எந்தவொரு தீர்வும் எட்டாத சூழலே தற்போது வரை நிலவி வருகின்றது. தொடர்ந்து, தங்கத்தின் விலையைப் போலவே எரிபொருட்களின் விலையும் நாளுக்கு நாள் ஓர் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது. முன்னதாக மாதத்திற்கு இரண்டு முறை என இருந்த விலையேற்றம், கடந்த சில வருடங்களாக தினசரி விலை மாற்றம் என்ற திட்டத்தின்கீழ் செய்யப்பட்டு வருகின்றது.

இம்முறை நடைமுறைக்கு வந்த நாள் முதல் எரிபொருளின் விலை ஒவ்வொரு நாளும் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு வருகின்றது. இருப்பினும், அவ்வப்போது கண் துடைப்பிற்காக விலை குறைப்பு செய்யப்படுகின்றது. அது பைசா கணக்கிலும், விலை உயர்வு மட்டும் ரூபாய் கணக்கிலும் செய்யப்பட்டு வருகின்றது.

இதனால், அனைத்து வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெருவாரியான வாகன ஓட்டிகள் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு பொது வாகனங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.79 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 69.47 காசுகள் என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது மாநிலம் மற்றும் நகரம் வாரியாக மாறும்.

இந்த நிலையில், கடந்த திங்களன்று நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் எரிபொருளுக்கான வரி ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தற்போது வரை பெட்ரோலிய பொருட்களுக்கான வரியைக் குறைக்கும் திட்டம் எதுவும் அரசின் கையில் இல்லை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பதில் வாகன ஓட்டிகளின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரிக்குள் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி கொண்டுவரப்படும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த பதில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக வரி குறைப்பைப் போன்றே, புதிய வரி விதிப்பதற்கான எண்ணமும் அரசிடம் தற்போதைக்கு இல்லை கூறப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசின் சார்பாக கலால் மற்றும் தனிபயன் வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர மாநில அரசுகள் சார்பாகவும் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. இதனால், இந்தியாவில் நூறு மடங்கிற்கும் அதிகான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதனால், மக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவதற்கான கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தொடர்ந்து, சிறு விவசாயிகளுக்கு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








