சும்மா இருக்கும் டெஸ்லாவை சீண்டி பார்க்கும் ஃபோர்டு சிஇஓ!! இதெல்லாம் ஒரு டிரக் வாகனமா என சாடல்...
டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) ஒர் காஸ்ட்லீயான வாகனம். அது எல்லாருக்குமான வாகனமாக இருக்காது என ஃபோர்டு சிஇஓ சமீபத்திய நேர்காணலில் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். அவரது இந்த நேர்காணல் குறித்தும், டெஸ்லாவின் சைபர்டிரக் குறித்தும் இனி காணலாம்.
பிக்-அப் டிரக்குகள் என்றவுடனே நமக்கு சட்டென்று நினைவிற்கு வருவது அமெரிக்கா தான். அமெரிக்கர்கள் கடந்த பல வருடங்களாக பிக்-அப் டிரக் வாகனங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவிலும் பரவலாக இவ்வாறான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் இந்தியாவை பொறுத்தவரையில் மிகவும் குறைவுதான்.

பிக்-அப் டிரக்குகளை உருவாக்குவதில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களான ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இவற்றுடன் விரைவில் மற்றொரு பிரபல அமெரிக்க கார் நிறுவனமான டெஸ்லாவும் இணையவுள்ளது. இதற்காகவே டெஸ்லா நிறுவனம் சைபர் டிரக் என்ற வாகனத்தை எலக்ட்ரிக் மோட்டாரில் உருவாக்கி வருகிறது.
டெஸ்லா சைபர் டிரக் கடந்த பல மாதங்களாக வடிவமைப்பு பணிகளில் உள்ளது. அதாவது, இந்த எலக்ட்ரிக் ட்ரக்கை டெஸ்லா நிறுவனம் பார்த்து பார்த்து கவனத்துடன் உருவாக்கி வருகிறது. இதன் காரணமாகவே இந்த டிரக் வாகனத்திற்கு குறிப்பாக அமெரிக்காவில் பலத்த கவனம் கிடைத்துள்ளது. ஆனால், டெஸ்லா சைபர் டிரக் ஒரு உண்மையான டிரக் வாகனமே கிடையாது என ஃபோர்டு நிறுவனத்தின் சிஇஓ ஜிம் ஃபார்லே பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு பேசிய ஜிம் ஃபார்லே மேலும் பேசுகையில், "ஃபோர்டின் எஃப்-150 லைட்டிங் எலக்ட்ரிக் பிக்-அப் டிரக்கின் வாடிக்கையாளர்களை டெஸ்லா சைபர் டிரக் பெறாது. அவர்கள் (டெஸ்லா) சைபர் டிரக்கை சிலிக்கான் பள்ளத்தாக்கில் (கலிஃபோர்னியாவில் இருக்கும் டெக்னாலஜி & கண்டுப்பிடிப்புகளுக்கான உலகளாவிய மையம்) வாழ்பவர்களுக்காக சைபர் டிரக்கை வடிவமைத்துள்ளனர் என்றால் நல்லது.
இது (சைபர்டிரக்) ஓட்டல்களின் முன் நிறுத்துவதற்கு ஏற்ற உயர்தரத்திலான தயாரிப்பு போல் தெரிகிறது. ஆனால் நான் அவ்வாறான டிரக்குகளை உருவாக்கவில்லை. உண்மையாகவே அவ்வாறான வேலைகளை செய்யும் உண்மையான மக்களுக்காக நான் டிரக்குகளை உருவாக்குகிறேன்" என்றார். நீண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் டெஸ்லா சைபர் டிரக்கின் உற்பத்தி வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என சமீபத்தில்தான் செய்திகள் வெளிவந்தன.

அதனை தொடர்ந்து ஃபோர்டு சிஇஓ-விடம் இருந்து இவ்வாறான ஓர் பேட்டி வெளிவந்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், டெஸ்லாவின் சைபர் டிரக் நீண்ட வருடங்களாக டிசைன் கட்டத்தில் உள்ளது. முதல்முறையாக இந்த டிரக்கை டெஸ்லா நிறுவனம் 2019இல் வெளியீடு செய்தது. அதன்பின் பலமுறை வெவ்வேறு நாடுகளில் (நம் இந்தியாவில் கிடையாது) சோதனை ஓட்டங்களின்போது சைபர் டிரக்கின் சோதனை மாதிரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃபோர்டு சிஇஓ கூறுவதை போல் டெஸ்லா சைபர் டிரக் வாகனம் பார்ப்பதற்கு காஸ்ட்லீயான வாகனம் போன்றே உள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் நம்மால் உடனடியாக விமர்சனம் தெரிவிக்க முடியாது. அறிமுகம் செய்யப்பட்டு விலைகள் அறிவிக்கப்பட்ட பின்னரே சைபர்டிரக் தினந்தோறும் கடினமான பணிகளை செய்வோர்க்கான வாகனமா என்பது தெரியும்.


Click it and Unblock the Notifications









