ஃபாரீன்-மேட் வாகனங்களை இந்த நாட்டிற்குள் கொண்டு செல்லவே முடியாது!! நமக்கு நன்கு தெரிந்த நாடு தான் அது...
இலங்கை (Srilanka) அரசு ஆட்டோமொபைல் வாகனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பல மாதங்களுக்கு முன்பே தடைவிதித்துவிட்டது. இந்த தடை விரைவில் நீக்கப்படும் என சமீப வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்த புதியதொரு அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில வருடங்களாக மிக பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். ஏனெனில், அங்கு நடைப்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களையும், வன்முறைகளையும் நீங்களே செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

அதிகப்படியான விலைவாசி உயர்வுகள் மற்றும் அந்நிய செலாவணி வருவாய் குறைந்துள்ளதினால் இலங்கையில் மக்களின் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் கூட விண்ணை தொட்டன. அப்படியிருக்கையில், கார்களை உருவாக்கவும், அவற்றை வாங்கவும் இலங்கையில் வாய்ப்பே இல்லாத சூழல் நிலவிவந்தது. இதில் இருந்து மெல்ல மெல்ல இலங்கை நாடு மீண்டு வந்தாலும், இன்னும் அந்த அசாதாரண சூழல் அங்கு முடிவுக்கு வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இலங்கையில் வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இதனாலேயே இலங்கை மற்ற நாடுகளில் இருந்து அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்துவந்தது. ஆனால் பொருளாதார வீழ்ச்சியால், கார்கள் மட்டுமின்றி பெரும்பாலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டது. இந்த நிலையில் சமீபத்தில், அவ்வாறு இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களில் சிலவற்றை நாட்டில் இறக்குமதி செய்ய மீண்டும் இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அந்த லிஸ்ட்டில் வாகனங்களின் பெயர்கள் இல்லை. அதாவது, இப்போதும் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை இலங்கைக்கு கொண்டுவர தடை உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு, இலங்கை நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பாலபிடியா வாகனங்கள் இறக்குமதியை அரசு அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். ஆனால் இந்த விஷயத்தை மீண்டும் யோசித்த இலங்கை அரசு வாகனங்கள் இறக்குமதிக்கு விதித்த தடையை நீக்கும் முடிவை மாற்றிக்கொண்டது. இது ஒருபக்கம் பிரச்சனை என்றால், மறுப்பக்கம் நாட்டிற்கான எரிபொருள் இறக்குமதி ஆகும்.
ஒவ்வொரு வாரத்திற்கும் ஏறக்குறைய 80 மில்லியன் டாலருக்கு எரிபொருட்களை இலங்கை அரசு மற்ற நாடுகளில் இருந்து பெறுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இலங்கை நிதியமைச்சர், "75-80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (எரிபொருளுக்காக செலவிடப்படுபவை) இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்போது, அதைவிட அதிக அளவிலான டாலர்களில் வாகனங்களை இறக்குமதி செய்வதால் ஏற்படும் தாக்கத்தையும் கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டியதாக உள்ளது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆனது எந்தவொரு வகையிலும் இறக்குமதி செய்யும் நாட்டிற்கே பாதகமாக அமையக்கூடியது. இதனாலேயே நம் இந்திய அரசு வாகனங்கள் இறக்குமதியில் மிகவும் கடுமையான விதிமுறைகளை பின்பற்றுக்கிறது. நமது இந்திய அரசை போல் இலங்கை அரசும் உள்நாட்டு வாகன உற்பத்தியை பெருக்க ஏதேனும் ஒரு வழியை கண்டுப்பிடித்தால், அந்த நாட்டில் மீண்டும் ஆட்டோமொபைல் துறை செழிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








