இனி மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டாம்... இந்தியன் இரயில்வே செய்யப்போகும் அதிரடியான விஷயம்!!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை விடுத்து, வருடத்திற்கு குறைந்தப்பட்சம் 80 ஆயிரம் இரயில் சக்கரங்களை இந்தியாவிலேயே தயாரித்து பயன்படுத்த இந்தியன் இரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த செப்.9ஆம் தேதி இந்தியன் இரயில்வே-இன் இரயில் சக்கரங்கள் உற்பத்தி குறித்த அறிக்கை ஒன்றை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு வருடமும் குறைந்தப்பட்சம் 80,000 இரயில் சக்கரங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு திறன் கொண்ட தொழிற்சாலையை கட்டமைப்பதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உள்நாட்டிலேயே இரயில் சக்கரங்களை உருவாக்குவது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சக்கரங்களை வெளிநாடுகளுக்கும ஏற்றுமதி செய்யும் திட்டத்திலும் இந்தியன் இரயில்வே உள்ளது. இதுகுறித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது பேட்டியில், ஃபோர்க்டு சக்கரங்கள் அதிவேக இரயில்கள் மற்றும் LHB பயணிகள் பெட்டிகளுக்கு தேவைப்படுகின்றன.

இந்த சக்கரங்கள் விரைவில் 'மேக் இன் இந்தியா' தயாரிப்பாக உள்நாட்டு தொழிற்சலையில் வருடத்திற்கு ரூ.600 கோடி செலவில் 80,000 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. அதிவேக இரயில்களுக்கான சக்கரங்களை தயாரிப்பதற்கும், அதற்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கும் தனியார் நிறுவனங்களை இந்தியன் இரயில்வே நிர்வாகம் அழைப்பது இதுவே முதல்முறையாகும்.

வருடத்திற்கு 80,000 சக்கரங்கள் என்பது அதிவேக இரயில்களுக்கும், ஜெர்மன் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எல்.எச்.பி பெட்டிகளுக்குமே தேவைப்படுகிறது. ஆனால் மொத்தமாக இந்தியன் இரயில்வே-க்கு வருடத்திற்கு 2 லட்ச சக்கரங்கள் தேவைப்படுகின்றன. மேக் இன் இந்தியா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள இரயில் சக்கரங்கள் உற்பத்திக்கான இரும்பை விசாகப்பட்டினத்தை சேர்ந்த ராஷ்டிரியா இஸ்பட் நிகம் நிறுவனம் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்கரங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றப்படி மேக் இன் இந்தியா தொழிற்சாலையை மாற்றும் வகையில், உள்நாட்டிலேயே இரயில் சக்கரங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் நிலைமையை பொறுத்து பரிந்துரைக்கப்படும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி செய்வதற்கான சந்தையாக இந்தியன் இரயில்வே நிர்வாகம் மனதில் வைத்திருப்பது ஐரோப்பாவை தான்.

அதாவது இவ்வளவு நாள் இரயில் சக்கரங்களை இறக்குமதி செய்த ஐரோப்பிய நாடுகளுக்கே இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் முடிவில் இந்தியன் இரயில்வே இருப்பது உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. தற்போதுவரையில், உக்ரைன், ஜெர்மனி, செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளிடம் இரயில் சக்கரங்களுக்காக இந்தியா சார்ந்துள்ளது.

இதுகுறித்து இரயில்வே துறை அமைச்சர் பேசுகையில், "1960இல் இருந்து ஃபோர்க்டு சக்கரங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். தற்போது அவற்றை நாமே உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார். ரஷ்யா- உக்ரைன் போரால் சமீப காலமாக மேற்கூறப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரயில் சக்கரங்களை இறக்குமதி செய்வதில் தொடர்ந்து தாமதமாகி வந்தது.

இதன் காரணமாகவே, இந்த தாமதத்தை தவிர்க்க உள்நாட்டிலேயே இரயில் சக்கரங்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் இந்தியன் இரயில்வே இறங்கியுள்ளது. இந்த திட்டம் இன்றோ அல்லது நேற்றோ எடுக்கப்பட்டது இல்லை, இந்தியாவில் எவ்வாறு மூல பாகங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஆராய்ந்து, முழுவதுமான தொழிற்நுட்ப பகுப்பாய்வுக்கு பிறகே தற்போது தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடும் அளவிற்கு வந்துள்ளது.

இரயில் சக்கரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் சக்கரங்களுக்கான உற்பத்தி செலவில் பெரிய தொகையை மிச்சப்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையில் இந்தியன் இரயில்வே உள்ளது. தற்சமயம் ஒரு இரயில் சக்கரத்தை இறக்குமதி செய்வதற்கு ரூ.70,000 செலவாகிறது.

அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேலும் கூறுகையில், "முன்னர் காலங்களில் சரக்கு இரயில்கள் & புல்லட் இரயில்களுக்கான அதி வலிமையான தண்டவாளங்களை வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கு உள்ளாகவே மேக் இன் இந்தியா தண்டவாளங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு தயாராகி உள்ளோம்.

மிக அதி வலிமையான தண்டவாளங்கள் நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன" என்றார். அதிவேக இரயில்கள் & எல்.எச்.பி பெட்டிகளுக்கான சக்கரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன என்றாலும், பயன்பாட்டிற்கு வர உள்ள 39,000 வந்தே பாரத் இரயில்களுக்கான சக்கரங்களை உற்பத்தி செய்ய சீன நிறுவனத்திடம் கடந்த மே மாதத்தில் இந்தியன் இரயில்வே ஒப்பந்தம் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications