ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட கார்கள்... அதிர்ஷ்டவசமாக தப்பிய சந்திரபாபு நாயுடு... என்ன நடந்தது தெரியுமா?
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சாலை விபத்து ஒன்றில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவரது கான்வாயில் வந்த வாகனங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. தெலங்கானா மாநிலம் யாதாத்ரி போங்கிர் மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடைபெற்றது.

ஆனால் சந்திரபாபு நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். எனினும் இந்த சாலை விபத்தில் என்எஸ்ஜி (NSG - National Security Guard) வீரர்கள் மூன்று பேர் லேசாக காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் அவர்கள் பயணம் செய்த குண்டு துளைக்காத வாகனம் பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜயவாடா-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-65), சவுத்துப்பல் அருகே உள்ள தண்டுமல்காபுரம் என்ற கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அமராவதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கான்வாய் வாகனங்கள் புடைசூழ சந்திரபாபு நாயுடு ஐதராபாத் திரும்பி கொண்டிருந்த சமயத்தில், துரதிருஷ்டவசமாக இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''மொத்தம் 7 வாகனங்கள் அடங்கிய கான்வாயில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் 3 வாகனங்களும், பின்னால் 3 வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. சந்திரபாபு நாயுடு நான்காவது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

தேசிய நெடுஞ்சாலையை கடந்த பசுவின் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக முதல் வாகனத்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தபோது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதன்விளைவாக கான்வாயில் வந்த 2வது வாகனம், முதல் வாகனத்தின் மீது பின்னால் இருந்து மோதியுள்ளது. மேலும் கான்வாயில் வந்த மற்ற வாகனங்களும் திடீரென பிரேக் பிடித்தாக வேண்டிய சூழல் உருவானது.

இந்த கான்வாயில் வந்த 3வது வாகனம் குண்டு துளைக்காத வசதியை கொண்டது. 2வது வாகனத்தின் மீது மோதியதால், அதன் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 4வது வாகனத்தில் இருந்தார். அவர் பயணித்த வாகனத்தின் ஓட்டுனரும் திடீரென பிரேக் பிடித்தார். ஆனால் முன்னால் இருந்த வாகனத்துடன், சந்திரபாபு நாயுடு பயணித்த வாகனம் மோதவில்லை.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடைகளால் இப்படி விபத்துக்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. ஆனால் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், இந்தியா முழுவதும் நன்கு பரிட்சயமான அரசியல்வாதியுமான சந்திரபாபு நாயுடுவே விபத்தில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சாலைகளில் கால்நடைகள் எப்போது வேண்டுமானாலும் திடீர் திடீரென குறுக்கே வரும். இதனால் வாகன ஓட்டிகள் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. குறிப்பாக மிதமான வேகத்தில் பயணம் செய்வது நல்லது. ஏனெனில் கால்நடைகள் திடீரென குறுக்கே வரும்போது அதிவேகத்தில் பயணித்து கொண்டிருந்தால், வாகனத்தை கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாக மாறி விடும்.

இது சாலை விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும். எனவே வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்துங்கள். ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் மட்டுமல்லாது, பாதசாரிகளும் உங்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை எல்லாம் மனதில் வைத்து வாகனத்தை இயக்குங்கள். இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








