வேட்பு மனு தாக்கல் செய்ய அம்பாசிடர் காரில் வந்த திமுக மாஜி அமைச்சர்... காரணத்தை கேட்டு உருகும் உடன்பிறப்புகள்
திமுக முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சென்டிமெண்ட்டாக அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக ஆகிய முன்னணி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தற்போது தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று (மார்ச் 15) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் மகன்தான் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அத்துடன் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் அம்பாசிடர் காரில் சாதாரணமாக வந்து வேட்பு மனுதாக்கல் செய்தது தற்போது கவனம் பெற்றுள்ளது.

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழக்கமாக பயன்படுத்துவது டொயோட்டா பார்ச்சூனர்தான். இது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் சந்தையில் பிரபலமாக உள்ள எஸ்யூவி ரக கார் ஆகும். ஆனால் அந்த காரை தவிர்த்து விட்டு சாதாரணமாக அம்பாசிடர் காரில் வந்து, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதற்கு பின்னால் அப்பா சென்டிமெண்ட் இருப்பதாக கூறுகின்றனர் உடன் பிறப்புகள். இதுகுறித்து கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தின் தந்தை எம்.ஆர். கிருஷ்ண மூர்த்தி, கடந்த 1988ம் ஆண்டு அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கினார்.

இதன் பதிவு எண் TAF 1333 ஆகும். இந்த கார் வாங்கப்பட்டு சுமார் 32 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் இன்றளவும் அந்த காரை தங்களது குடும்ப உறுப்பினரை போல் பராமரித்து வருகின்றனர். எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும், இந்த அம்பாசிடர் காருக்கு முக்கிய இடம் உண்டு.

காரில் சிறு பழுது ஏற்பட்டால் கூட, அதனை உடனடியாக சரி செய்து விடுவதை எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வழக்கமாக வைத்துள்ளார். அப்பா வாங்கிய கார் என்ற செண்டிமெண்ட் காரணமாகவும், அந்த காரில் செல்வது ராசியாக இருக்கும் எனக்கருதியும்தான் அம்பாசிடர் காரில் வந்து எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்'' என்றனர்.

ஒரு காலத்தில் இந்திய சாலைகளை முழுக்க முழுக்க ஆண்டது அம்பாசிடர் கார்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய பிரதமர்களின் அதிகாரப்பூர்வ காராகவும் கூட அம்பாசிடர் இருந்துள்ளது. இன்றளவும் இந்திய மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்த காராக அம்பாசிடர் திகழ்ந்து கொண்டுள்ளது.

இந்திய மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அம்பாசிடர் கார் கடந்த 1958ம் ஆண்டு முதல் உற்பத்தி செய்யப்பட்டது. சுமார் 56 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு அம்பாசிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் மிக நீண்ட காலம் உற்பத்தியில் இருந்த கார்களில் முதன்மையான இடத்தில் அம்பாசிடர் உள்ளது.


Click it and Unblock the Notifications








