கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! நல்ல மனிதர்... இவருக்கு இப்படி நடந்திருக்க கூடாது
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரவீன் குமாரின் விலைமிக்க லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் உத்திர பிரதேசம் மாநிலத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் என்னென்ன? என்பதை பற்றியும், பிரவீன் குமாரின் டிஃபெண்டர் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணி 2011 உலக கோப்பையை வென்ற காலக்கட்டத்தில் வளர்ந்துவரும் இளம் மிதவேக பந்து வீச்சாளராக விளங்கியவர் பிரவீன் குமார். 2011 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாவிட்டாலும், பிரவீன் குமாரின் இந்திய கிரிக்கெட் பயணம் அதன்பின்பே துவங்கியது என சொல்ல வேண்டும்.

இந்திய பிரிமீயர் லீக் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் உள்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடி ரசிகர் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் பிரவீன் குமார். இப்படிப்பட்டவர் சமீபத்தில் உத்திர பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் நடந்த கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். கடந்த ஜூலை 4ஆம் தேதி இரவு மீரட் நகரில் தனது மகனுடன் பிரவீன் குமார் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
மீரட்டில் உள்ள பாண்டவ் நகர் பகுதிக்கு அருகே வந்த போது சாலைக்கு அருகே இருந்த வேக எச்சரிக்கை பலகையின் மீது பிரவீன் குமாரின் டிஃபெண்டர் கார் பலமாக மோதியுள்ளது. இதில் காரின் இடதுபக்க முன்பகுதி சேதமடைந்துள்ளது. நல்லவேளையாக, பிரவீன் குமாருக்கும், அவரது மகனுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விபத்து நடந்தப்போது, பிரவீன் குமாருக்கு இந்த விபத்து மிக மோசமாக சென்றுதான் முடிய போகிறது என தோன்றியுள்ளது. இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், "இது மிகவும் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் கடவுள் அருளால் நாங்கள் நலமாக இருக்கிறோம், நான் உங்களிடம் பேசுகிறேன். நான் எனது உறவினரை ஓர் இடத்தில் இறக்கிவிட சென்று இருந்தேன்.
ஆனால் இரவு 9.30 மணியளவில் ஒரு பெரிய லாரி எனது காரை பின்னால் இருந்து மோதியது. கடவுளுக்கு நன்றி இது ஒரு பெரிய கார், இல்லையெனில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்" என்றார். நல்லவேளையாக விபத்து பெரியதாக ஏற்படவில்லை என்ற நிம்மதியுடன் விபத்து முடிந்த பின் காரில் இருந்து வெளியே வந்த பிரவீன் குமார் காரின் முன்பக்க பம்பர் மட்டுமே சேதமடைந்திருக்கும் என நினைத்து இருந்துள்ளார்.

ஆனால், காரின் முன்பக்கம் பெரிய அளவில் சேதமடைந்து இருப்பதை கண்டு பிரவீன் குமார் சற்று கவலை அடைந்துள்ளார். பிரவீன் குமாரிடம் இருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் ஆனது இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் பெரிய அளவிலான எஸ்யூவி கார்களுள் ஒன்றாகும். உலகளவில் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டுள்ள டிஃபெண்டர் காரில், இந்தியாவில் 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டரில் இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இவற்றுடன் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் தேர்விலும் இந்த கார் கிடைக்கிறது. இவை மட்டுமில்லாமல், கடந்த 2022ஆம் ஆண்டில் டிஃபெண்டர் எஸ்யூவி காரில் பெரிய அளவிலான 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜினையும் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஃபெண்டர் கார்கள் 110 மற்றும் 90 என இரு விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டில் காரின் வீல்பேஸ் அளவு மட்டுமே வேறுப்படும்.

இந்த இரு வெர்சன்களிலும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஃபெண்டர் காரின் மேற்கூறப்பட்ட அனைத்து விதமான என்ஜின்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் நிலையான தேர்வாக கொடுக்கப்படுகிறது. டிஃபெண்டர் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.93.55 லட்சத்தில் இருந்து ரூ.2.30 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீப காலமாக அடிக்கடி கார் விபத்தில் சிக்குவது போல் தோன்றுகிறது. ஏனெனில், கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி, பல மாதங்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளார். தற்போது பிரவீன் குமாரின் டிஃபெண்டர் கார் விபத்தை சந்தித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நம் நாட்டு சாலைகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications









