புத்தம் புதிய மஹிந்திரா காரை ஜாலியாக ஓட்டி விளம்பரம் தேடி தந்த பிரபல அரசியல் தலைவர்! யார் தெரியுமா?
பிரபல அரசியல் தலைவர் ஒருவர், புத்தம் புதிய மஹிந்திரா காரை ஓட்டி பார்த்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புத்தம் புதிய தார் எஸ்யூவி ரக காரை மஹிந்திரா நிறுவனம் கடந்த அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பல மடங்கு மேம்பட்டுள்ளது.

செயல்திறன், டிசைன், தொழில்நுட்பம் என்று அனைத்து அம்சங்களிலும், தார் எஸ்யூவி மாற்றம் கண்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே விலையும் அறிவிக்கப்பட்டது. இதன்படி புதிய தார் எஸ்யூவி காரின் விலை 9.80 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 13.75 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவியின் விலையை சரியாக நிர்ணயம் செய்துள்ளது என்றே சொல்லலாம். புதிய பிளாட்பார்ம் அடிப்படையில், புதிய தலைமுறை தார் எஸ்யூவி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் அடுத்த தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ காரும் உருவாக்கப்படவுள்ளது.

பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை தார் எஸ்யூவி அகலமாகவும், நீளமாகவும் மாறியுள்ளது. அத்துடன் அதிக வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. AX, AX(O) மற்றும் LX என மொத்தம் மூன்று மாடல்களில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கிடைக்கும். உட்புறத்தில் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் ஸ்க்ரீன், ஸ்பீக்கர்கள், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை மஹிந்திரா வழங்கியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடனும், புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி கிடைக்கும். இதன் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 150 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் டீசல் வேரியண்ட்களில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 132 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்கும். பொதுவாக மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் படையே உள்ளது. குறிப்பாக ஆஃப் ரோடு ஆர்வலர்கள் மத்தியில், மஹிந்திரா தார் எஸ்யூவி மிகவும் பிரபலம். இந்தியாவை சேர்ந்த பிரபல மனிதர்கள் பலரும், இதன் பழைய தலைமுறை மாடலை சொந்தமாக வைத்துள்ளனர்.

புதிய தலைமுறை மாடலை வாங்குவதற்கும், பிரபலங்கள் பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா புதிய தார் எஸ்யூவியை ஓட்டி பார்த்துள்ளார். அப்போது இதன் திறன்கள் அவரை வெகுவாக ஈர்த்துள்ளன. இந்த அனுபவங்களை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாகவும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உமர் அப்துல்லா காரை ஓட்டிய சமயத்தில், அவரது தந்தை ஃபரூக் அப்துல்லாவும் உடன் பயணித்துள்ளார். ஃபரூக் அப்துல்லாவும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தார் எஸ்யூவி காரின் அறிமுகத்திற்காக, அவர்கள் இரண்டு பேரும் மஹிந்திரா டீலர்ஷிப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அறிமுக நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவர்கள் இருவரும் காரை பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பயணமும் செய்துள்ளனர். சிறிது தூரம் மட்டுமே ஓட்டினாலும், புதிய தலைமுறை தார் எஸ்யூவி உமர் அப்துல்லாவை வெகுவாக ஈர்த்துள்ளது. தன்னுடைய ட்விட்டில், உமர் அப்துல்லா அதனை குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு சிறந்த தயாரிப்பை அறிமுகம் செய்ததற்காக, மஹிந்திரா நிறுவனத்தை அவர் பாராட்டியும் உள்ளார்.

2020 மஹிந்திரா தார் எஸ்யூவி மிக சிறப்பான தொழில்நுட்ப வசதிகளுடன், மிக சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் மாதங்களில், ஆஃப் ரோடு ஆர்வலர்கள் மட்டுமின்றி, பிரபல மனிதர்கள் பலரும் புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை வாங்கி சொந்தமாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








