மஹிந்திரா தாரை வெகுவாக புகழ்ந்து தள்ளிய முன்னாள் ஜம்மூ & காஷ்மீர் முதல்வர்!! ஆனந்த் மஹிந்திரா மகிழ்ச்சி!
ஆட்டோமொபைல் துறையையும், கார்களையும் அதிகம் விரும்பக்கூடிய அரசியல்வாதிகள் என்று பார்த்தால், மிகவும் சிலர் மட்டுமே நம் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றனர். அத்தகையவர்களில் ஒருவர், உமர் அப்துல்லா. ஜம்மு & காஷ்மீரின் முன்னாள் முதல்வரான இவருக்கு எஸ்யூவி வாகனங்கள் என்றாலே கொள்ளை இன்பமாம்.

இதனாலேயே இவரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற உலகளவில் பிரபலமான எஸ்யூவி கார்கள் உள்ளன. இந்த வகையில் உமர் அப்துல்லா புதியதாக வாங்கிய எஸ்யூவி வாகனம் புதிய தலைமுறை மஹிந்திரா தார் ஆகும். அதிலிலும் மஹிந்திரா தாரை பக்கா ஆஃப்-ரோடு வாகனம் என்று கூட சொல்லலாம்.

இந்த நிலையில் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மஹிந்திரா தார் தொடர்பான பதிவு ஒன்றை மஹிந்திரா நிறுவனத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், பனி நிலங்களிலும் தாரின் ட்ரைவிங் நிலைப்பாட்டை வெகுவாக புகழ்ந்துள்ளார். இந்தியா முழுவதுமே தற்சமயம் பனிக்காலத்தை அனுபவித்து வருகின்றோம்.

நம்மூரிலாவது பரவாயில்லை, இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஜம்மூ & காஷ்மீரில் பனி மழைப்போல் கொட்டி கொண்டிருக்கிறது. உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள படங்களிலும் அவரையும், அவரது தார் வாகனத்தையும் சுற்றி பனி சூழ்ந்திருப்பதை காணலாம். இவர் தனது தாரை எடுத்து கொண்டு பனி நிரம்பிய குல்மர்க் என்கிற பகுதிக்கு சென்றுள்ளார். இந்த பகுதியில் வாகனமே செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் முழுவதும் பனியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

உமர் அப்துல்லாவின் மஹிந்திரா தார் வாகனமானது கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட ஹார்ட்-டாப் வேரியண்ட்டாகும். அதாவது இதன் மேற்கூரையை நீக்க முடியாது. இந்த வேரியண்ட் பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆனால் உமர் அப்துல்லா பயன்படுத்துவது பெட்ரோல் தார் வாகனமா அல்லது டீசல் தார் வாகனமா என்பது உறுதியாக தெரியவில்லை.

இவரது தார் வாகனத்தின் முன்பக்கத்தில் புல்-பார் பொருத்தப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இது நமது தமிழகத்தில் சட்ட விரோதமானது ஆகும். உமர் அப்துல்லாவின் தாரில் மஹிந்திரா நிறுவனம் பொருத்தும் அதே 18-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் அவற்றில் ஸ்டாக் டயர்களே உள்ளன. சாதாரண சாலைகளில் காரை ஓட்டுவதை காட்டிலும், அதே காரை பனியில் ஓட்டுவதற்குதான் அதிக திறமையும், பக்குவமும் வேண்டும்.

வெள்ளை தோல் போர்த்தப்பட்டது போன்றதான பனியில் பயணம் செய்ய அந்த வாகனத்தில் சரியான அளவிலான சக்கரங்கள் இருத்தல் வேண்டும். அதேபோல் இந்தியாவில் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் பனியில் காரை எடுத்து செல்வதற்காகவே பிரத்யேகமான பனி டயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை கூடுதல் பிடிமானத்தை வாகனத்திற்கு வழங்கக்கூடியவை.

இருப்பினும் இத்தகைய டயர்கள் இல்லாவிடினும் பனியில் மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இது ஜம்மூ & காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவே அவரை இத்தகைய டுவிட்டர் பதிவை பதிவிட வைத்துள்ளது. இந்த பதிவிற்கு மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திராவும் பதில் கருத்தினை தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி என்பதை தாண்டி, உமர் அப்துல்லா ஆர்வமிக்க கார் ஆர்வலர் ஆவார். இவர் வசிப்பது ஜம்மூ & காஷ்மீரில் என்பதால் முந்தைய காலங்களில் பனியில் வெவ்வேறு விதமான 4x4 ட்ரைவ் சிஸ்டம் கொண்ட எஸ்யூவி வாகனங்களுடன் நின்றவாறு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதிலும் மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான தார் இவரை வெகுவாக கவர்ந்துள்ளது.

சந்தையில் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை தார் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஏனெனில் முந்தைய வெர்சனை காட்டிலும் மாடர்ன் தோற்றத்திற்கு மெருக்கேற்றப்பட்ட புதிய தாரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டிரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








