வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு: ஷோரூம்ல இப்படியெல்லாம் கூட பன்றாங்க!
புதிது எனக்கூறி பழைய வாகங்களை விற்பனை செய்த வாகன டீலர்களின் மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
வாகனங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றை பார்வையிட்டு, சோதித்துப் பார்த்து பின்னர் வாங்குவதற்காக தான் ஷோரூம்கள் உள்ளன. டிஸ்பிளே பீஸ் எனப்படும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக சில வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும், மாடல் பிடித்திருந்தால் குடோனில் இருக்கும் புதிய வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும். இது தான் வாகன விற்பனையில் உள்ள நடைமுறை.

ஆனால், அந்த ஷோரூம்களிலேயே புதிய வாகனங்களுக்கு பதிலாக பழைய வாகனங்களை விற்பனை செய்து, பகீர் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது ஷோரூம்கள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கேரளாவில் உள்ள செங்கனூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்காக, குறிப்பிட்ட டீலர்களால் கொண்டுவரப்பட்ட வாகனங்கள் சிலவற்றின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. டீலர்கள் கொண்டு வந்த ஆவணங்களில் வாகனத்தின் உற்பத்தி தேதி மற்றும் வருடம் திருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், 2017ல் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தாலும், வாகனங்களும் அவ்வளவு புதிதாக காட்சியளிக்கவில்லை. இது குறித்து தீவிரமாக சோதனை செய்த போது ஆவணங்களை திருத்தியமைத்து பழைய வாகங்களை பதிவு செய்ய முயற்சித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட டீலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோட்டயம், மாவேலிக்கரா மற்றும் காயங்குளம் பகுதிகளில் உள்ள டீலர்கள் சிலர் இது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட டீலர்களுக்கு வட்டார போக்குவரத்து கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட டீலர்களின் தொழில் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் மூலம் மூன்று கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என மொத்தம் 6 பழைய வாகனங்கள் பதிவு செய்யப்பட வந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2016 - ஜனவரி 2017 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டதாக ஆவணங்களில் உள்ள சில வாகனங்களை சோதித்த போது, உண்மையில் அவை 2016ஆம் ஆண்டிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டவை என தெரியவந்தது. இது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடி சம்பவம், ஷோரூம்களில் விற்கப்படும் அனைத்துமே வாகனங்களும் புதியவை என்ற நம்பிக்கையை தகர்ப்பதாக உள்ளது. இதைப் போன்ற மோசடிகளில் சிக்காமல் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இருத்தல் அவசியம்.


Click it and Unblock the Notifications








