நம்ம ஊர் ரயில்கள் மாதிரி கிடையாது... பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் மோசமான சம்பவம் நடந்திருக்க வேண்டியது...
ஐரோப்பாவை தாண்டி மொத்த உலகிலும் தற்சமயம் பரபரப்பாக பேசப்பட்டுவரும் விஷயங்களுள் ஒன்று பிரான்ஸில் இரயில்களை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி ஆகும். இது வேறெந்த நாளில் நடைபெற்று இருந்தாலும் இந்த அளவிற்கு இது கவனத்தை பெற்றிருக்குமா என்பது தெரியாது. ஆனால், உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கும் அளவிற்கு தற்போது கவனத்தை பெற்றிருப்பதற்கு காரணம், பிரான்ஸில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட இருந்த நேரத்தில் இந்த சதி செயல் நடைபெற்றுள்ளதினால் ஆகும். என்ன நடந்தது? ஒருவேளை சதி செயல் திட்டமிட்டப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றாலும், அவை அனைத்திற்கும் தலைமையாக இருப்பது ஒலிம்பிக் ஆகும். 4 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த 2024ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் துவங்கப்பட்டுள்ளன.

பாரீஸில் பலமுறை இதற்குமுன் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆவல் பிரான்ஸ் மக்களிடையே அதிகமாக உள்ளது. இந்த நிலையில்தான், 2024 ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிக்க பிரான்ஸ் மக்கள் ஆவலாக தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான், பிரான்ஸின் அதிவேகமான இரயில் சேவை பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்ட செய்தி மக்களின் காதுக்கு வந்து சேர்ந்தது.
இரயிலுக்காக காத்திருந்தவர்கள் பல மணிநேரமாகியும் இரயில் வராததால் ஆத்திரத்தில் கொந்தளித்தனர். இதனையடுத்து, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. பிரான்ஸ் நாட்டின் அதிவேக இரயில் சேவையான டிஜிவி (TGV) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளுக்கு தீ வைத்தும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாகவே, டிஜிவி நெட்வொர்க்கில் தெற்கு நோக்கி செல்லும் இரயில்களை தவிர்த்து மற்றவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலை இன்னமும் தொடர்ந்து நீடிக்கிறது. இன்னும் 2,3 நாட்களுக்கு டிஜிவி இரயில் சேவை இருக்காது எனவும், பழுதுபார்ப்பு மற்றும் சரிப்பார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், மக்கள் பலர் பாரீஸ் நகரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் டிஜிவி நெட்வொர்க்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இரும்பு சக்கரங்களுடன் இயங்கக்கூடிய இரயில்களிலேயே உலகின் மிகவும் அதிவேகமான இரயில்கள் இந்த நெட்வொர்க்கில் தான் இயங்குகின்றன. இது SNCF என்ற அமைப்பால் இயக்கப்படுகிறது. 1981ஆம் ஆண்டில் முதல்முறையாக பாரீஸில் இருந்து தெற்கே உள்ள லியோன் என்கிற பகுதியை நோக்கி முதல் டிஜிவி இரயில் சேவை துவங்கப்பட்டது.

அதன்பின் பாரீஸில் இருந்து பிரான்ஸின் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் டிஜிவி இரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டிற்கு சுமார் 11 கோடி மக்கள் பிரான்ஸின் டிஜிவி இரயில் நெட்வொர்க்கை பயன்படுத்துகின்றனர். SNCF-ஆல் பராமரிக்கப்படும் இந்த அதிவேக இரயில் பாதைகள் கடுமையான கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு உட்பட்டவை. இந்த சேவையில் இரயில்கள் மிகவும் அதிவேகமாக இயக்கப்படுவதால், டிரைவர்களால் சிக்னலை துல்லியமாக கவனிக்க முடியாது என்பதால் டிவிஎம் என்கிற சிக்னலிங் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.
பிரான்ஸின் டிஜிவி இரயில் சேவையில் பல்வேறு விதமான ஹை-ஸ்பீடு இரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பிராஜெக்ட் வி150 என்கிற இரயில் 2007ஆம் ஆண்டில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு சுமார் 574.8கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. ஆனால், டிஜிவி இரயில் சேவையில் அதிகமாக பயன்படுத்தப்படும் எல்ஜிவி எஸ்ட், எல்ஜிவி ரின்-ரோனே மற்றும் எல்ஜிவி மெடிடெர்ரனே இரயில்களின் டாப்-ஸ்பீடு 320kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் துவங்கவிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு இருந்தாலும், அதன் விளைவாக ஏற்பட்ட சேதாரங்களினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் பெரிய பண இழப்பு ஏற்பட்டுள்ளது. டிஜிவி சேவையில் பயன்படுத்தப்படும் இரயில்கள் எந்த அளவிற்கு வேகமானவை என்பதை மேலே கண்டோம். ஒருவேளை இந்த சதி செயல் முறியடிக்கப்படாமல் இருந்திருந்தால், உலகிலேயே மிக பெரிய மற்றும் மோசமான இரயில் விபத்து வரலாற்றில் பதிவாகி இருக்கும்.


Click it and Unblock the Notifications









