ரயில் டிக்கேட்டை கேன்சல் பண்ண போறீங்களா? இந்த விஷயத்தில உஷாரா இருங்க, இல்லைனா உங்க பணம் அம்போ தான்...
ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு அதற்கான பணம் திரும்பப் பெறுவதில் சமீப காலமாக புது விதமான மோசடி ஒன்று நடந்து வருவதாக ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று தகவல் தொழிற்நுட்பங்களை பயன்படுத்திப் பல நூதனமான வகையில் திருட்டுகள் நடந்து வருகிறது. சில ஆண்டிற்கு முன்பு வரை ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும் எனத் தமிழ் தெரியாத ஒருவர் தன் மக்களுக்கு போன் செய்து அவரது ஏடிஎம் கார்டில் உள்ள 16 இலக்க எண்ணைக் கேட்டு திருட்டில் ஈடுபடுவார்கள். இந் திருட்டு பிரபலமானது.

இன்று மக்கள் பலர் விழிப்புணர்வாகிவிட்டனர். இதனால் திருட்டு கும்பல் இன்று பல விதமாகத் திருட களம் இறங்கிவிட்டனர். இப்படியாக ரயில் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தற்போது புதிய மோசடி ஒன்று நடந்து வருகிறது. ரயில்வேயில் பயணிகளுக்கான சேவையை ரயில் சேவா என்ற ட்விட்டர் ஹேண்டில் செய்து வருகிறது.

அதன்படி சில பயணிகள் தாங்கள் கேன்சல் செய்த ரயில் டிக்கெட்டிற்கான பணம் திரும்ப வருவது தொடர்பாக ட்விட்டரில் ரயில் சேவா பக்கத்தை டேக் செய்து கேட்பார்கள் அப்பொழுது ரயில் சேவா சார்பில் அவர்களது பிஎன்ஆர் மற்றும் தொடர்பு எண்ணைத் தனிப்பட்ட முறையில் அனுப்பும்படி கேட்கப்படும். ஆனால் சில பயணிகள் பொதுத் தளத்தில் தங்கள் பிஎன்ஆர் எண் மற்றும் தொடர்பு எண்ணைவெளியிடுவார்கள்.

இதைக் குறிவைத்த திருட்டு கும்பல் குறிப்பிட்ட எண்ணிற்கு போன் செய்து தாங்கள் ரயில் சேவாவிலிருந்து பேசுவதாகவும் தங்களுக்கு ரயில்வே டிக்கெட் கேன்சல் செய்த பணத்தைத் திருப்பத் தருவது தொடர்பாகப் பேசுவதாகவும், அவர்களுக்குப் பணம் திரும்ப வருவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் ஒரு லிங்கை அனுப்புவார்கள் அதை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பும் படியும் கேட்கின்றனர்.

இதை உண்மை என நம்பும் பயணிகள் சிலர் இதை நம்பி அவர்களும் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள தகவல்களை நிரம்பியதும் இவர்களது வங்கிக் கணக்கிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்துப் பல புகார்கள் வந்த நிலையில் இது குறித்த ரயில்வே நிர்வாகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

அதன்படி ரயில்வே டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் அதற்கான பணத்தைத் திரும்ப உரியவருக்கே அனுப்பும் நடைமுறை முற்றிலும் ஆட்டோமெட்டட் செய்யப்பட்டது. இதில் மனித தலையீடுகள் இருக்காது. யாரும் பயணிகளுக்கு போன் செய்து டிக்கெட் ரத்து குறித்த தகவல்கள், டிக்கெட் புக் செய்த போது பயன்படுத்தப்பட்ட நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டு எண்கள், ஓடிபி, ஏடிஎம் பின் நம்பர், சிவிவி எண், பேன் கார்டு நம்பர் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களைக் கேட்க மாட்டார்கள். ஆன்லைனில் புக் செய்த டிக்கெட் கேன்சல் செய்தால் தானியங்கியாக டிக்கெட் கட்டணம் திருப்பி அனுப்பப்படும்.

அதே போல ரிமோட் கண்ட்ரோல் ஆப்களான எனிடெஸ்க் அல்லது டீம் வீயூவர் போன்ற ஆப்களை கம்யூட்டர, செல்போன், போன்ற சாதனங்களில் இன்ஸ்டால் செய்யவும் சொல்ல மாட்டார்கள் என விளக்கம் அளித்துள்ளது. இப்படியாக ஏதாவது போன் வந்தால் அந்த போன்களை தவிர்த்து விடும்படியும். இப்படியான போன் கால்கள் மோசடி எனவும், இது குறித்து போலீசார் புகார் அளிக்கும்படியும் கூறியுள்ளனர்.

இதே போலக் கடந்த சில நாட்களாக மக்களுக்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அனுப்பப்படும் எஸ்எம்எஸ் போல மின்சார கட்டணம் கட்டப்படவில்லை என்றும், அதனால் இன்னும் சிறிது நேரத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படவுள்ளது என்றும், அதைத் தவிர்க்கக் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் குறுஞ்செய்தி வருகிறது. அதை நம்பி சிலர் அதை கிளிக் செய்து பணத்தை இழக்கிறார்கள்.

இப்படியாகப் பல மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் செல்போன் குறுஞ்செய்தி, போன் கால், போன்ற வற்றில் உங்களை மோசடி செய்யும் நோக்கில் போன் செய்பவர்களுடன் எச்சரிக்கையாக இருங்கள். இது போன்ற மோசடிகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள். இது போன்று உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ ஏதாவது சம்பவம் நடந்திருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








