ஃபாஸ்ட்டேக் ஆக்டிவேட் செய்வதாககூறி பணம் கொள்ளை... புதுவித டிரிக்கை கையாளும் ஆன்லைன் மோசடியாளர்கள்..!
ஃபாஸ்ட்டேக் பெயரைச் சொல்லி மோசடி கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி வருகின்றது. புதுவித ட்ரிக்கை அக்கும்பல் பயன்படுத்துவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுங்கச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்கும் விதமாக ஃபாஸ்ட்டேக் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது, டோல்கேட்டுகளில் ரொக்கமாக அல்லாமல் தனித்துவமான கணக்கின்மூலம் நேரடியாக ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்த உதவும்.
குறிப்பாக, அதிக கட்டண வசூலில் ஈடுபடும் டோல்கேட்டுகளிலிடமிருந்து மக்களைக் காக்கும் விதமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இருப்பினும், ஒரு சில சுங்கச்சாவடி ஊழியர்கள் விநோதமான முறையைக் கையாண்டு கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோதாதென்று, ஃபாஸ்ட்டேக்கைப் பெயரைச் சொல்லி ஆன்லைன் மோசடியாளர்கள் புதுவிதமான கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதுபோன்றதொரு சம்பவம்தான் தற்போது கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் வசித்தும் வரும் ஓர் இளைஞர்தான் இந்த சம்பவத்தில் முதல் ஆளாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞரைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ஃபாஸ்ட்டேக்கினை ஆக்டிவேட் செய்வதாகக் கூறி வங்கி கணக்கில் இருந்த ரூ. 50 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார்.

தான் ஆக்சிஸ் வங்கியில் இருந்து அழைப்பதாக கூறிய அந்த மர்ம நபர் ஃபாஸ்ட்டேக்கினை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கிலாம், இதற்காகவே நாங்கள் அழைத்துள்ளோம் என்று கூறி தேனொழுக பேசியுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளைஞர், பேசுபவர் ஓர் நயவஞ்சகன் என்பதை உணராமல், மர்ம நபர் கேட்ட வங்கியின் அனைத்து விவரங்களையும் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மாயமாகியுள்ளது.
இதுகுறித்த குறுஞ்செய்தி அவரது செல்போனுக்கு வந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார், அந்த இளைஞர்.

ஃபாஸ்ட்டேக் மோசடிகுறித்து அவர் கூறியதாவது, "ஆக்சிஸ் வங்கியின் சேவை அதிகாரி என அறிமுகம் செய்துகொண்ட அந்த மர்ம நபர் ஃபாஸ்ட்டேக்கினை வங்கி கணக்கின் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்) உடன் இணைப்பதற்காக அழைத்திருப்பதாக கூறினார். இதற்காக, யுபிஐ ஐடியைக் கேட்டு தெரிந்துக்கொண்ட அவர், ஆன்லைனில் பதிவு செய்வதற்காக ஓர் ஓடிபி பாஸ்வேர்ட் வரும் அதனைக் கூற வேண்டும் என்றார். நானும், செல்போனுக்கு வந்த ஓடிபி-யை கூறினேன். பின்னர் என்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் மாயமாகியது" என்றார்.

இதுபோன்ற காரணங்களுக்காகவே எந்தவொரு சூழ்நிலையிலும் யாருக்கும் வங்கி விவரத்தை பரிமாறக்கூடாது என வங்கி சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், நம்பக்கூடிய வகையில் பேசும் ஒரு சில மோசக்காரர்களின் வலையில் பலர் சிக்கி வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே, பெங்களூருவைச் சேர்ந்த இந்த இளைஞரும் தனது பணத்தை இழந்து தவித்து வருகின்றார்.

குறிப்பாக மோசடிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே ஃபாஸ்ட்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இதிலும் மோசடியாளர்கள் தங்களின் கை வரிசையைக் காட்டி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தற்போது அச்சத்தில் உறைந்துள்ளனர்.

முன்னதாக, வங்கி ஏடிஎம் பிளாக் ஆகிவிட்டது அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும் எனக் கூறி மோசடி செய்துவந்த மர்ம நபர்கள், தற்போது ஃபாஸ்ட்டேக்கினை கையில் எடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் ஃபாஸ்ட்டேக்கினை செல்போன் அழைப்பு மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியுமா...? என்ற சந்தேகம் எழுகின்றது.

நமக்கு கிடைத்து தகவலின்படி, செல்போன் அழைப்பின் மூலம் ஃபாஸ்ட்டேக்கினை ஆக்டிவேட் செய்ய முடியாது என்றேக் கூறப்படுகின்றது.
ஆனால், ஒருவர் தங்களுடைய ஃபாஸ்ட்டேக்கை செயல்படுத்த இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. மை ஃபாஸ்ட்டேக் செயலி மற்றும் நேரடியாக வங்கியை அனுகுவதன் மூலமாக மட்டுமே இதனை ஆக்டிவேட் செய்ய முடியும்.

ஆகையால், ஃபாஸ்ட்டேக்கினை செல்போன் மூலமாக ஆக்டிவேட் செய்வதாகக் கூறி யாரேனும் அழைத்தால் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு போலீஸாரிடம் புகார் அளிக்கமாறு அறிவுறுத்தப்படுகின்றது. தொடர்ந்து, வங்கி கிளைக்குச் சென்று ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்றும் சோதித்துக் கொள்ள வேண்டும்.

வங்கிக் கணக்கை நேரடியாக ஃபாஸ்ட்டேக் உடன் இணைப்பதன் மூலமாகவும் இதுபோன்ற மோசடிகளை நாம் சந்திக்க நேரிடும். ஆகையால், ஃபாஸ்ட்டேக் பயனர்கள் என்எச்ஏஐ உருவாக்கியுள்ள ப்ரீபெய்ட் கணக்கைத் தொடங்கி அதனைப் பயன்படுத்திக் கொண்டால் இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க முடியும் என வாகனத்துறை வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனை நாமே, மை ஃபாஸ்ட்டேக் மூலம் யுபிஐ-யைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








